Monday, December 8, 2008

தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்!

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்!

  • OMR சாலையில் டபுள் பெட்ரூம் பிளாட் வாங்குவது பற்றி திட்டமிடுகிறோம் நாம். மேலிருந்து விழும் குண்டுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக குடிசைகளிலிருந்து வெளியேறி காடுகளில் தஞ்சம் புகுகிறார்கள் அவர்கள்.
  • இரவு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் நாம். பகலில் கடிக்க வரும் பாம்புகளிலிருந்து தப்பிக்கும் வழியறியாது அடர்ந்த வனங்களில் தினமும் இறக்கிறார்கள் அவர்கள்.
  • அடுத்த வேளை உணவு, KFC Chicken- அல்லது Pizza Hut- என்று நண்பர்களுடன் பேசுகிறோம் நாம். நாளைக்காவது ஒரு வேளை உணவு கிடைக்குமா என்று சொந்த நாட்டில் அகதிகளாகத் தவிக்கிறார்கள் அவர்கள்.
  • பொங்கலுக்கு ஊருக்குப் போக இரண்டு மாதங்களுக்கு முன்பே online reservation செய்கிறோம் நாம். எப்போது தாய்நாடு போவோம் என்பது குறித்து யாதொரு நம்பிக்கையுமின்றி அகதிகளாக உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் அவர்கள்.
  • சத்யம் சினிமா, MGM ரிசார்ட், சனிக்கிழமை இரவுக் கொண்டாட்டங்கள் என சுகமாய் வாழ்கிறோம் நாம். ஒவ்வொரு நொடியைக் கழிப்பதும் போராட்டமாய் வாழ்கிறார்கள் அவர்கள்.
  • நாமும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள் எனில், அவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?
செய்ய வேண்டியது ஆயிரம் இருப்பினும், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான நமது எதிர்ப்பை, ஈழத்தமிழர்களுக்கான நமது ஆதரவைத் தெரிவிக்க ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்போம், வாருங்கள் நண்பர்களே!

நாள்: 13-டிசம்பர்-2008, சனிக்கிழமை
நேரம்: காலை 09:00 - மாலை 06:00
இடம்: Auto garage (பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருந்த இடம்),
Near first signal on the way Koyembedu bus stand to anna nagar, Koyembedu

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்.

Sunday, December 7, 2008

எங்களுக்காக வாழ்க! - பேரா. அறிவரசன்

உலகம் முழுவதும் வாழ்கின்ற
ஒன்பது கோடித் தமிழர்க்கு
நிலமொன் றில்லை; உரிமையுடன்
நிமிர்ந்து வாழவோர் நாடில்லை
பலரும் தமிழரை அடிமையராய்ப்
பார்க்கும் அவலம் தீர்ப்பதற்கு
வலுவுடன் எழுந்து போர் உடற்றும்
மாண்புசேர் தலைவ! வாழியவே!















ஆற்றல் மறவ! அருந்தலைவ!
அன்னைத் தமிழை அரவணைத்துப்
போற்றிக் காத்து வளர்க்கின்ற
புகழ்ப் பிர பாகரப் பெரியோய்! உன்
ஏற்றம் அறிவோம்; பகையிருளை
எற்றித் தள்ளித் தமிழ்ஈழ
நாட்டைத் தருவாய் விராவாக
நல்வோய்! பல்லாண்டு வாழியவே!

வீரம் விளையும் ஈழத்தில்
வேற்றுச் சிங்களர் தமையகற்றிச்
சீரும் சிறப்பும் தமிழர்க்குச்
சேர்த்திட விரும்பி ஆர்த்தெழுந்து
போரினை நடாத்தும் புலிப்படையின்
புகழ்மேம் பட்ட தமிழ்த்தலைவ!
பாரிய வளமுடன் நலம்பெற்றுப்
பல்லாண்டு வாழிய! வாழியவே!

வெல்லுந் திறத்தால் சிறந்தவனே!
வேலுப் பிள்ளை பார்வதித்தாய்
செல்வனாய்ப் பிறந்து தமிழீழத்
தேசியத் தலைவராய் உயர்ந்தவனே!
நல்ல தமிழினம் உரிமையுள
நாட்டை அமைத்திட உழைப்பவனே!
பல்வகைச் சிறப்பும் நீபெற்றுப்
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

கார்த்திகைத் திங்களில் நீ பிறந்தாய்
காரிருள் நீக்கிட நீ வளர்ந்தாய்
போர்த்திறத் தால்தமிழ் இனம்காக்கும்
பொருவிலாத் தலைவனாய் வடிவெடுத்தாய்
தீத்தகைச் சிங்களர் தமைவென்று
செந்தமிழ் ஈழத்தை நீசமைப்பாய்
ஏத்துகி றோம்உனை எம்தலைவ!
இனும்நூ றாண்டுகள் வாழியவே!

தம்பியாய் இருந்தாய்; இன்றெமக்குத்
தலைவராய் உயர்ந்தாய்; உன்திறத்தால்
எந்தமிழ் ஈழ விடுதலையை
எமக்குநீ தருவாய் என்றுனையே
நம்பியே நிற்கிறோம்; ஐ. நா - வில்
நாளை தமிழ்க்கொடி நாட்டிடுவோம்
பைந்தமிழ்த் தலைவ! நனிசிறந்து
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

பிரபா கரனே! தமிழர்க்குப்
பெருமை சேர்க்க வந்தவனே!
அறிவால் உயர்ந்தோய்! பகையழிக்கும்
ஆற்றலில் சிறந்தோய்! விடுதலையே
குறியாய்க் கொண்டு களங்களிலே
கொற்றம் விளைக்கும் கொற்றவனே!
நிறைவாய் நலங்கள் பலபெற்று
நெடியபல் லாண்டுகள் வாழியவே!

ஞாலம் முழுதும் வாழ்கின்ற
நந்தமி ழர்க்கொரு நற்றுணையே!
ஆளும் உரிமை தமிழர்க்கே
ஆக்கிட உழக்கும் ஆற்றலனே!
சூழும் பகையிருள் தனைவிரட்டும்
சுடர்மிகு பிரபா கரனே! உன்
தோளின் வலிமையால் எமைக்காக்கத்
தூயவ! பல்லாண்டு வாழியவே!

ஐம்பத் தைந்தாம் அகவையிலே
அடிவைத் தெழுந்து நிற்கின்ற
எங்கள் தலைவ! இருபதுசேர்
இளைஞன் போல நெஞ்சுரத்தால்
பொங்கித் தளும்பும் உன்வீரம்
போற்றிப் பலநூ றாண்டுகள்நீ
எங்களுக் காக வாழ்கவென

Saturday, November 15, 2008

இது மென்பொருள் பொறியாளர்களின் தருணம்!

Thursday, October 16, 2008

ஜெயலலிதாவுக்குக் கண்டனம் பழ. நெடுமாறன் அறிக்கை

இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டுமென்று கேட்பதன் மூலம் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பதாக அ.தி.முக. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஈழத் தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து சிங்கள இராணுவம் நடத்தி வரும் கொடிய போரை உடனடியாக நிறுத்தி அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் இணைந்து கூட்டாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அதைத் திசைத் திருப்பும் வகையில் முதல்வரை மட்டுமே பிரித்துக் குற்றம் சாட்டுவது என்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

தங்கள் மக்களையும் தங்களையும் காப்பாற்றிக் கொள்ள விடுதலைப் புலிகளுக்கு வலிமை உண்டு என்பதை ஜெயலலிதா உணர வேண்டும். உலக நாடுகள் பலவும் சிங்கள அரசின் போர் வெறியைக் கண்டித்துள்ள வேளையில், கொஞ்சமும் மனித நேய உணர்வின்றி சிங்கள அரசுக்கு ஆதரவாகப் பேசுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன் இருந்தே தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவெறிப் படுகொலைகளைச் சிங்கள வெறியர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களிடமிருந்து தங்கள் மக்களைக் காப்பாற்றுவதக்றாகத்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள் என்ற வரலாற்று உண்மையைக் கூட உணராமல் ஜெயலலிதா பேசுவது வெட்கக் கேடானது.

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என ஜெயலலிதா வக்காலத்து வாங்குகிறார். பாகிஸ்தானில் உள்விவகாரத்தில் இந்திய அரசு இராணுவ ரீதியாகத் தலையிட்டு வங்க தேசம் சுதந்திர நாடாக உதவி புரிந்தது என்பதை ஜெயலலிதா உணராமல் போனது ஏன்?
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட்டு சிங்கள இராணுவத்திற்கு ஆயுதங்களை அள்ளித் தந்தும் உளவுத் தகவல்களை அளித்தும் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க உதவி புரியும் இந்திய அரசுக்கு அந்தப் போரை நிறுத்தும்படி கூற அதிகாரம் இல்லை என்று கூறுவது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

தமிழர்களுக்கு எதிரான இன வெறி அழிப்பை நடத்திக் கொண்டிருக்கும் இராபக்சேயின் ஊதுகுழலாக ஜெயலலிதா ஒலிக்கிறார். இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர் அண்டை நாட்டில் நடைபெறும் தமிழர் படுகொலைகளைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமல் தமிழ்ப் பகைவர்களின் கை பொம்மையாக மாறி செயல்படுவதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

Tuesday, September 9, 2008

இந்திய அரசின் இரட்டை வேடம் அம்பலம்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை


வவுனியாவில் உள்ள சிங்கள இராணுவத் தலைமையகத்தின் மீது வான் புலிகளும் கரும்புலிகளும் நடத்திய தாக்குதல்களின் விளைவாக இந்தியா வழங்கியிருந்த ராடார் கருவி முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன் அதை இயக்கிய இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இந்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திவிட்டது.

சிங்கள அரசுக்கு ஆயுத உதவி மட்டுமல்ல ஆள் உதவியையும் இந்திய அரசு செய்து வருகிறது என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்திய அரசின் இந்தப் போக்கை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இலங்கை இனப் பிரச்னைக்கு இராணுவத் தீர்வு கூடாது, பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பல முறை கூறிவிட்டார். ஆனால் நடைமுறையில் இராணுவ ரீதியான தீர்வு காண முயலும் சிங்கள அரசுக்கு இராணுவ ரீதியான உதவிகளை இந்திய அரசு செய்து வருவது தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களைக் கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்த தகாதப் போக்கினை உடனடியாக கைவிடுமாறு இந்திய அரசை வற்புறுத்துகிறேன்.

Thursday, August 28, 2008

கருணாநிதிக்கு பதில் - பழ. நெடுமாறன் அறிக்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

அடுத்த முறை தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என முதல்வர் கருணாநிதி கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற திராணியின்றி தனிப்பட்ட முறையில் மிகக் கீழ்த்தரமாக வசை புராணம் பாடியிருக்கிறார். அவர் தரத்திற்கு நானும் இறங்கி பதிலடி கொடுக்க விரும்பவில்லை. எனினும் அவர் கூறியுள்ள அப்பட்டமான பொய்களுக்குப் பதில் கூற வேண்டியது அவசியம் ஆகும்.
பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி. 1969-ஆம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும் நாடாளுமன்றத் தொகுதியல்ல இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.

அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.

அறியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவர் கருணாநிதி.

1996-ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்த போது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவகவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.

1983-ஆம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி அனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்துக் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி. பொய்யும் புனைசுருட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வரவேண்டும்.

Thursday, July 24, 2008

தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள்

தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள்மொழியியலறிஞர்:- ஜே.நீதிவாணன் தரும் அதிர்ச்சி தகவல்கள்!

புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் வந்தேறி தமிழர்களின் மொழி உணர்வு நூலின் முக்கியப்பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு சமுதாயம் புலம் பெயர்வதற்கு கீழ்க்கண்ட 5 வகையான காரணங்கள் உண்டு என இராபர்ட் கோகன் என்னும் அறிஞர் கருதுகிறார்.

  1. போர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப்படுபவர்கள்,
  2. தொழிலாளர்கள்,
  3. வணிகர்கள்,
  4. பேரரசு நிறுவியவர்கள்,
  5. கலாச்சார ரீதியில் சென்றவர்கள்

என 5 வகையாக புலம் பெயர்ந்தவர்களைப் பகுக்கலாம். ஆப்பிரிக்கர்களும், ஆர்மீனியர்களும் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்தவர்கள். இந்தியத் தமிழர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். பிரித்தானியர் பேரரசை நிலைநாட்டப் புலம் பெயர்ந்தவர்கள். சீனர்களும் லெபனானியர்களும் வணிகர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். கரீபியர்கள் கலாச்சார ரீதியில் புலம் பெயர்ந்தவர்கள். ஆனால் யூதர்கள் மட்டும் முற்றிலும் வேறுபாடான வகையில் புலம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள்.

தமிழ்நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு புலம் பெயரும் பொழுது மீண்டும் தாயகம் திரும்பும் எண்ணமோ அல்லது தாங்கள் திரட்டிய செல்வத்தைத் தாயகத்திற்கு அனுப்பும் நோக்கமோ இல்லாமல் பல்வேறு நாடுகளில் குடிபுகுந்த தமிழர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.


இந்த வகையில் ஈழத் தமிழர்கள் பிரச்சினையை நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். ஈழத் தமிழர்கள் இலங்கையின் ஆதிக் குடிகள் என்பதை பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் நிலைநாட்டியுள்ளனர். இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகம் திரும்ப வேண்டியவர்கள் ஆவார்கள். எனவே, அவர்களைப் பற்றிய ஆய்வு தனித்தன்மை வாய்ந்ததாகும்.

உலகில் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை குறித்த திட்டவட்டமான புள்ளிவிவரங்கள் இல்லை. பலரும் பலவிதமான விவரங்களை அளித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் வந்தேறிகள்:
இந்தியாவின் தென்கோடியில் தமிழகமும் கேரளமும் அமைந்துள்ளன. இவைகள் அமைந்துள்ள நிலவியலே பிற சிறுபான்மை மொழியினரைக் குடிபுகச் செய்தது எனலாம். தென்மாநிலங்களில் உள்ள மக்கள் திராவிட மொழிக் குடும்பத்தினர் ஆவார்கள். இதன் காரணமாக இம்மாநிலங்களில் திராவிட மொழிகளைப் பேசுபவர்களே குடி பெயர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளும், கேரளத்தில் மலையாளம், தமிழ், துளு ஆகிய மொழிகளும், ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகளும், கர்நாடக மாநிலத்தில் கன்னடம், உருது, தெலுங்கு ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.

தமிழ்நாட்டில் தமிழ் மொழி அல்லாத பிற மொழி பேசுபவர்கள் 14 சதவீதம் உள்ளனர். பல ஆண்டு காலமாக இந்த சதவீதத்தில் மாறுதல் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுபவர்கள் 7.12 சதவீதமும், கன்னடம் பேசுபவர்கள் 2.16 சதவீதமும் உருது பேசுபவர்கள் 1.86 சதவீதமும் மலையாளம் பேசுபவர்கள் 1.18 சதவீதமும் இந்தி பேசுபவர்கள் 0.29 சதவீதமும் மராத்தி பேசுபவர்கள் 0.13 சதவீதமும் ஆங்கிலம் பேசுபவர்கள் 0.04 சதவீதமும் உள்ளனர்.

தமிழ்நாட்டில் வந்தேறிகளாகக் குடிபுகுந்துள்ள சிறுபான்மை மொழி பேசுபவர்களில் கன்னடர்களும் தெலுங்கர்களும் ஏறத்தாழ 1000 ஆண்டுகாலத்திற்கு முன்னர் வந்தவர்கள். நீண்டகாலமாகத் தமிழ்நாட்டில் வாழ நேர்ந்ததால் தமிழகத்தையே அவர்கள் தங்கள் தாயகமாகக் கொண்டுவிட்டனர். எங்கிருந்து அவர்கள் குடிபெயர்ந்தார்களோ அந்தத் தாயகத்துடன் அவர்களுக்குள்ள தொடர்பு எல்லாம் அறுந்துவிட்டது. அவர்களின் தாய்மொழி பல்வேறு மட்டங்களில் தமிழ்க் கலப்புடன் பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் பேசப்படும் தெலுங்கை ஆந்திர மாநிலத்தவர் "அரவா தெலுங்கு" என்றுதான் அழைக்கிறார்கள். இவர்களுடன் ஆந்திராவிலுள்ள தெலுங்கர்கள் திருமண உறவு வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. வீட்டிற்குள் தாய்மொழியான தெலுங்கில் பேசுவார்களே தவிர வெளியில் தமிழையே பேசுகிறார்கள். தமிழ் அல்லாத தெலுங்கு மொழி அறிவு இவர்களுக்கு மிகக் குறைவானதாகும். வந்தேறிகளாக தமிழகத்தில் குடி புகுந்த தெலுங்கர்களில் பலர் தமிழை நன்குக் கற்றுத் தேர்ந்து அறிஞர்களாக - கவிஞர்களாக - எழுத்தா ளர்களாகப் புகழ் பெற்றுத் திகழ்ந்தார்கள். இவர்களுக் குத் தெலுங்கு எழுதத் தெரியாது. பேச்சு மொழியாகத் தெலுங்கை வீட்டிற்குள் பரம்பரையாகப் பேசி வருகிறார்கள். தெலுங்கு மொழியினால் தங்களுக்கு சமூக முன்னேற்றமோ அல்லது பொருளாதார வளமோ கிடைக்காது என்பது இவர்களுக்குத் தெரிந்திருந்த போதிலும் குறைந்தபட்சம் வீட்டு மொழியாக அதைக் கடைப்பிடித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் குடிபுகுந்த கன்னடர்கள் நிலைப்பாடும் கிட்டத்தட்ட இதுதான். தமிழர்களுடன் இவர்கள் கொண்டுள்ள கலாச்சார மற்றும் மொழி உறவுகளின் விளைவாக அவர்கள் தமிழ்நாட்டு மக்களாகவே கருதப்படுகிறார்கள். இவர்கள் பிறப்பால் தமிழர்கள் அல்லர். ஆனால் தமிழர்களான வந்தேறிகள் ஆவார்கள்.

தமிழ்நாட்டில் குடிபுகுந்த மலையாளிகளின் நிலை தெலுங்கர், கன்னடியர் ஆகியோரின் நிலைக்கு மாறுபட்டதாகும். தமிழ்நாட்டில் மலையாளிகள் குடிபுகுந்தது அண்மைக் காலத்திலேயாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் இருந்த காரணத்தினால் அங்கு வாழ்ந்த மலையாளிகள் வந்தேறிகள் அல்லர். தமிழகத்தின் பிற பகுதிகளில் வேலைவாய்ப்புகள் மற்றும் வணிகம் செய்வதற்காக அண்மைக் காலத்தில் தான் மலையாளிகள் குடிபுகுந்துள்ளனர். ஆனால் இந்த மலையாளிகள் தங்களுடைய தாயகமான கேரளத்துடன் உள்ள தொடர்பை இழந்து விடவில்லை. எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியையும் போற்றியே வருகிறார்கள். எனவே தெலுங்கு, கன்னடர் வந்தேறிகளைப் போல மலையாளிகளைக் கருதமுடியாது.


பழந்தமிழர்களின் புலப்பெயர்வு:
தமிழ் இலக்கியத்தில் பிரிவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் நாட்டம் தமிழர்களுக்குப் பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. இது குறித்து தமிழ் இலக்கியத்தில் "பிரிவு" என்னும் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பழமையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் மற்றும் நம்பி அகப்பொருள் ஆகியவை பிரிவு குறித்து விளக்கமாகக் கூறுகின்றன.

பழந்தமிழர்கள் சிறந்த கடலோடிகளாகவும் வணிகர்களாகவும் திகழ்ந்தார்கள். மேற்கு நாடுகள் மற்றும் மேற்காசிய நாடுகளுடன் அவர்களுக்கு வணிக உறவு இருந்தது. கிரேக்கம், உரோமாபுரி பேரரசுகளின் அவைக்கு தங்களது வணிகப் பொருட்களை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். கி.மு.8ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த வணிகத் தொடர்பு இருந்து வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அதைப்போல தூரக் கிழக்கு நாடுகளில் கி.மு.முதலாம் நூற்றாண்டிலிருந்து தமிழர்களுக்கு வணிகத் தொடர்பு இருந்து வந்தது.

பிற்காலச் சோழர்களும் பிற்காலப் பாண்டியர்களும் தூரக் கிழக்கு நாடுகளையும் இலங்கையையும் கைப்பற்றிய பொழுது அங்கு தமிழ்ப் படை வீரர்களும் வணிகர்களும் குடியேறினார்கள். தமிழர்களின் புலப் பெயர்ச்சி முதல் தடவையாக இந்த காலக் கட்டத்தில்தான் நடைபெற்றிருக்க வேண்டும். அண்டை நாடுகளைத் தமிழ் மன்னர்கள் பிடித்த போது தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த நாட்டார்கள் அந்நாடுகளில் குடியேறி பல நூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். இது குறித்த பல்வேறு கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன.



ஆங்கில ஆட்சியில் புலப்பெயர்வு:
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்த தமிழர்கள் கூலிகளாக மொரிசியசு, பிஜி, கரிபியன் தீவுகள், ரீயூனியன் போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இந்தப் புலப் பெயர்ச்சிக்கு வரலாற்று ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களைக் கூறியுள்ளார்கள். தமிழ்நாட்டில் அப்போது நிலவிய சமுதாயச் சூழ்நிலை இவர்களைத் தொலைதூரத் தீவுகளுக்குப் புலம் பெயரச் செய்தது. சமுதாயத்தில் நிலவிய அடிநிலைச் சாதிவேறுபாடு, தீண்டாமை, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை ஆகியவற்றின் காரணமாகத் தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்த மக்கள் புலம் பெயர்ந்தார்கள். நில பிரபுக்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தினரால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளான ஏழையெளிய மக்கள் வேறு வழி இல்லாமல் குடிபெயர்ந்தார்கள். பெற்ற கடனை அடைக்க முடியாத விவசாயத் தொழிலாளிகள் அடிமைகளாக விற்கப்பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு.


பண்டைய தமிழ் மன்னர்கள் எவ்வளவுவலிமை வாய்ந்தவர்களாகத் திகழ்ந்த போதிலும் பிற நாடுகளின் மீது படையெடுத்து அவற்றைத் தங்கள் பேரரசுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படவில்லை. பிற நாடுகள் மீது அவர்கள் படை எடுத்தார்கள். ஆனால் அங்கு தங்கள் மக்களைக் குடியேற்றி அதைக் குடியேற்ற நாடாக அவர்கள் ஆக்கவில்லை. படை வீரர்கள், வணிகர்கள், புரோகிதர்கள் போன்ற சிற்சிலர் அந்நாடுகளில் குடியேறினார்கள். அதுவும் அவர்கள் சொந்த விருப்பத்தின் பேரில்.

இந்தியாவில் தமிழர்கள் பரவலாகப் பிற மாநிலங்களில் குடி பெயரவில்லை. கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, தில்லி, அந்தமான் ஆகிய மாநிலங்களில் மட்டும் தமிழர்கள் பிழைப்புத் தேடி குடிபெயர்ந்தார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகே இவர்கள் அவ்வாறு குடிபெயர்ந்தார்கள்.


மொழி இழப்பு:
தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் மொழி இழப்பிற்கு ஆளான சோக விவரங்களை ஆசிரியர் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார்.



பிஜி:


பிஜித் தீவில் கரும்பு சாகுபடி செய்வதற்காகப் பீகார், வங்காளம், பஞ்சாப் மற்றும் சென்னை மாகாணங்களிலிருந்து 1879ஆம் ஆண்டு விவசாயத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். பிஜித் தீவு பற்றியோ தாங்கள் எதற்காக அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதைப் பற்றியோ எதையும் அறியாதவர்களாக இவர்கள் அங்கே போனார்கள். 1984ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்குப்படி பிஜி தீவில் 50,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 5,000 பேர்களுக்கு மட்டுமே ஓரளவு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும். மற்றவர்களுக்குத் தமிழ் பேசக் கூடத் தெரியாது. பிஜித் தீவில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் தெரியாது. 50 சதவீதத்திற்கு மேற்பட்ட தமிழர் வீடுகளில் தமிழ் பேசப்படவில்லை. தமிழைப் பேசுவதும் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை வெளிப்படுத்துவதும் அவமானத்திற்கு உரிய ஒன்றாக தமிழர்கள் கருதினார்கள். தமிழர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை காரணமாக தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டவில்லை. அதே வேளையில் இந்தி மொழி பேசுபவர்கள் இந்தியைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார்கள். பிஜித் தீவில் தமிழ் மாநாடு ஒன்று நடத்தப்படுவதை இந்திக்காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்தியாவிலிருந்து சென்றவர்கள் அனைவரும் இந்தி படிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப் பட்டார்கள். பிஜித் தீவில் குடியேறிய இந்தியர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆங்கிலத்தையும் கால்வாசிப் பேர் இந்தியையும் 14 சதவீதம பேர் தமிழையும் ஆதரித்தார்கள். பிஜி மக்களிடையே இந்தியைப் பரப்புவதில் இந்திய அரசு ஏராளமான பணத்தைச் செலவழித்தது. ஆனால் தமிழக அரசு தமிழ்ப் படிப்புக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் தட்டச்சு இயந்திரம் மற்றும் தமிழ் கற்பதற்கான உதவிகளை செய்யும்படி தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அரசு ஏற்கவில்லை. பிஜித் தீவில் வாழ்ந்த இந்திய மக்களிடையே கலப்புத் திருமணங்கள் தாராளமாக நடந்தன. இதன் விளைவாகவும் இந்தி பொது மொழியானது. தமிழ் பண்பாடு மேலும் தகர்ந்தது. பிஜித் தமிழர்களிடையே தாய் மொழி உணர்வு என்பது முழுமையாக அற்றுப் போய்விட்டது. தமிழுக்குப் பதில் இந்தி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தமிழர்களின் தாழ்வு மனப்பான்மை, தமிழக அரசிடமிருந்து எவ்வித ஆதரவும் கிடைக்காமை, பிஜி அரசின் கொள்கை, கலப்புத் திருமணங்கள், இந்தி பேசுபவர்களின் ஆதிக்க மனோபாவம் இவற்றின் காரணமாக தமிழ் தன் இடத்தை இழந்தது. இந்தியைத் தமது தாய்மொழியாகத் தமிழர்கள் ஏற்க வேண்டி நேரிட்டது. பிஜித் தமிழர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் தாய்மொழியைத் தியாகம் செய்தார்கள்.



மொரிசியஸ்:


மொரிசியஸ் தீவில் போஜ்பூரி பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சமுதாயமாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். அடிமைகளாக இந்த நாட்டுக்குத் தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள். இதன் விளைவாக அவர்கள் தங்கள் மொழியின் மீது கொண்டிருந்த பற்றினைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்கள். பிரஞ்சு, கிரியோலி, மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றால் மட்டுமே பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும், தாய் மொழியான தமிழ் மூலம் அது கிடைக்காது என்பதை உணர்ந்த தமிழர்கள் மேற்கண்ட மொழிகளுக்குத் தாவினார்கள். மொரிசியஸ் தீவில் தமிழர்கள் குவியலாக ஓர் இடத்தில் வாழவில்லை. தீவு முழுவதும் பரவிக் கிடந்தார்கள். அவர்களுடைய மொழி இழப்புக்கு இதுவும் ஒரு காரணமாகும். கிராமப்புற பகுதிகளில் குடியேறிய தமிழர்கள் ஓரளவிற்குத் தங்களுடைய மொழி உணர்வைக் காப்பாற்றிக் கொண்டார்கள். நகர்ப்புறங்களில் குடியேறிய தமிழர்கள் அங்கு பெரும்பான்மையோர் பேசிய மொழியிலேயே பேசி வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ்க் குழந்தைகள் தங்கள் தாய் மொழியை அறவே இழந்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும். மேலும் மொரிசியஸ் தலைநகரான போர்ட் லூயிஸ் நகரைக் கட்டுவதில் புதுச்சேரி தமிழர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் கிறித்துவர்கள். கிறித்துவ தமிழர்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் குடியேறினார்கள். மொலாட்டோ இனத்தவரும் கிரியோலி இனத்தவரும் கிறித்துவ தமிழர்களுடன் இரண்டறக் கலந்ததாலும் அவர்கள் தங்கள் மொழியை இழந்தனர். மேலும் ஆரம்பப் பள்ளிகளில் கீழ்த்திசை மொழி அல்லது கிறித்துவ மதப் படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. கிறித்துவத் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் மதப் படிப்பை படிக்க வேண்டும் என்றே விரும்பினார்கள். எனவே, தமிழ் அந்த குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படவில்லை. மேலும் தமிழ்ர் பாட நூல்களில் பெரும்பாலும் இந்துக் கடவுள்கள், துறவிகள், கோயில்கள், சிற்பங்கள் ஆகியவை பற்றிய படங்கள் இருந்தன. மதசார்பற்ற தன்மையில் அந்த பாட நூல்கள் அமையவில்லை. கிறித்துவ குழந்தைகள் இதைக் கற்க விரும்பவில்லை. இதன் விளைவாக கிறித்துவ தமிழர்களில் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்துத் தமிழர்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்களாகக் கருதத் தொடங்கினார்கள்.



இதைப் போலவே இந்துத் தமிழர்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மொழியை இழந்தார்கள். வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. மொரீசியஸ் தீவில் தமிழர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதம் ஆகும். ஆனால் வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 0.6 சதவீதம் மட்டுமே. 53832 பேர் தமிழ் தங்கள் மூதாதையர்களின் மொழி என்பதை அறிந்தவர்கள். ஆனால் இவர்களில் 6,943 பேர் மட்டுமே தமிழை வீடுகளில் பேசுபவர்கள். இது போன்ற தமிழர்களின் எண்ணிக்கை குறித்து பல விவரங்களை நூல் ஆசிரியர் அளித்துள்ளார். தமிழ் மொழி - இலக்கியம் - பண்பாடு ஆகியவற்றின் சிறப்பு குறித்து மொரிசியஸ் தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தங்களுடைய தமிழ்ப் பரம்பரை குறித்து அவர்களுக்கு பெருமிதம் உண்டு. மொரிசியசில் அனைத்துலகத் தமிழ் மாநாட்டினை அவர்கள் வெற்றிகரமாக நடத்தி உள்ளார்கள். மொரிசியஸ் நாணயங்களில் தமிழ் இடம் பெற்றுள்ளது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் தமிழ் நிகழ்ச்சிகள் உண்டு. சுமார் 200 தமிழ் பள்ளிக்கூடங்களும் 200 தமிழ் ஆசிரியர்களும் மொரிசியசில் உள்ளனர். மொரிசியஸ் தமிழர்கள் குறித்த வரலாறு அவர்களின் நாட்டுப்புற இலக்கியம் இவைகளைப் பற்றிய நூல்களும் உண்டு. மொரிசியஸ் தமிழர்களுக்கிடையே எழுத்தாளர்களும் கவிஞர்களும் உண்டு. தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஆனால் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கற்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். தமிழர் பண்பாட்டோடு மொழி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் ஆசிரியர்களே தங்கள் கருத்துக்களை முழுமையாகத் தமிழில் வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். மிகச் சிலரே பிழை இல்லாமல் தமிழ் எழுதுகின்றனர். இதன் காரணமாக மொழிச் சிதைவு ஏற்பட்டுள்ளது. மொரிசியஸ் தமிழர்களிடையே தாய்மொழி இழப்பு குறித்து அவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இந்த நிலைமை நீடிக்குமானால் பிஜித் தமிழர்களைப் போல இவர்கள் நிலைமை ஆகிவிடும் என்பதில் ஐயமில்லை.



ரீயூனியன்:
ரீயூனியன் தீவில் 30 சதவீதத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். வணிகம், தொழில், அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் செல்வாக்கு உடையவர்களாக அவர்கள் திகழ்கிறார்கள். மொரிசியஸ் தமிழர்களைப் போலவே ரீயூனியன் தமிழர்களும் அங்கு புலம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள். கிரியோலி மொழியே பரவலாகப் புழக்கத்தில் உள்ளது. தமிழர்களில் 95 சதவீதத்தினர் தமிழ் பேசத் தெரியாதவர்கள். 5-6 தலைமுறைக்கு அவர்கள் தங்கள் மொழியை இழந்துவிட்டார்கள். மொரிசியஸ் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றை ரீயூனியன் தமிழர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அண்மையில் இங்கு 3 உயர்நிலைப் பள்ளிகளிலும் ஒரு கல்லூரியிலும் தமிழ் விருப்பப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.



சிசேல்ஸ்:
சிசேல்ஸ் தீவில் தமிழர்கள் மிகவும் சிறுபான்மையினர் ஆவார்கள். அவர்கள் தங்கள் மொழியை முற்றிலுமாக இழந்து கிரியோலி மொழி மட்டுமே பேசுகிறார்கள், ஆனால் சிசேல்சில் வாழும் தமிழர்களில் 30 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் சற்று திரிபடைந்த தமிழ்ப் பெயர்களையே சூட்டிக் கொண்டுள்ளனர்.



கரிபியன் தீவுகள்:
இங்குள்ள தமிழர்களும் மொரிசியஸ், பிஜி தமிழர்களைப் போலவே புலம் பெயர்ந்தவர்கள். அவர்கள் முற்றிலுமாக தங்கள் தாய் மொழியை இழந்து விட்டார்கள். கயானா, டிரிநாட் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் முழுமையாகத் தங்கள் தாய் மொழியைத் தொலைத்து விட்டார்கள். இங்குள்ள தமிழர்கள் பல மத விழாக்களை அவற்றின் அர்த்தம் புரியாமலேயே கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் பிரஞ்சு மொழியைப் பேசுகிறார்கள். சிலர் ஆங்கிலத்திலும் பேசுகிறார்கள். புதுச்சேரியிலிருந்து குடியேறிய தமிழர்கள் தற்போது பிரஞ்சுக்காரர்களாகவே ஆகிவிட்டார்கள். அவர்கள் தமிழ் பேசுவதில்லை. தமிழில் கூட சிந்திப்பதில்லை. பல தமிழர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கும் தமிழ் தெரியாது. 4 தலைமுறை காலத்திற்குள் இவர்கள் தங்கள் மொழியை இழந்து விட்டார்கள். கல்வித் திட்டத்திற்காக இந்துத் தமிழர்கள் பலரும் கிறித்துவ மதத்திற்கு மாறிவிட்டார்கள். கத்தோலிக்க மதப் படிப்புடன் பிரஞ்சு மொழியை அவர்கள் கற்கிறார்கள். இங்குள்ள தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினர் வீடுகளில் தமிழுக்குப் பதில் பிரஞ்சு மொழி பேசப்படுகிறது. தமிழர்களின் பெயர்கள் திரிபடைந்து உச்சரிப்பு கூட மாறிவிட்டது. சூரினாம், சமைக்கா, பிரிட்டிஷ் கயானா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் முழுவதுமாக தங்கள் தாய்மொழியை இழந்து விட்டார்கள். அவர்கள் தமிழ் மொழியை மீண்டும் கற்பது என்பதற்கான வாய்ப்பே இல்லை.



தென் ஆப்பிரிக்கா:
தென் ஆப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவு தமிழர்கள் வாழ்கிறார்கள். ஏராளமான இந்துக் கோயில்கள், மத அமைப்புகள், தமிழ் மொழி அமைப்புகள் உள்ளன. இவை இருந்தும் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் தங்கள் தாய் மொழியை வேகமாக இழந்து விட்டார்கள். தமிழைக் கற்பதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் மூத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் ஓரளவிற்கு தமிழில் பேசுகிறார்கள். நல்ல தமிழில் பேச ஆர்வம் காட்டுகிறார்கள். தாய்மொழியை இழந்துவிட்டாலும் மத சம்பந்தமான சடங்குகளையும் கலாச்சார நடவடிக்கைகளையும் போற்றிப் பாதுகாத்தால் மட்டுமே தங்களுடைய இன அடையாளத்தைப் பாதுகாக்க முடியும் என அவர்கள் கருதுகிறார்கள். தென்ஆப்பிரிக்காவில் 200 பள்ளிக் கூடங்களில் 189 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் 5 பேர் மட்டுமே தமிழ் கற்பிக்கத் தகுதி படைத்தவர்கள். தமிழ் இளங்கலை வகுப்புகள் டர்பன் பல்கலைக் கழகத்திலும் வெஸ்ட் வில்லோ பல்கலைக்கழகத்திலும் 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் போதுமான மாணவர்கள் சேராத காரணத்தினால் 1984ஆம் ஆண்டு இவைகள் மூடப்பட்டன. தமிழர்கள் ஆப்ரிக்காவிலுள்ள பல்வேறு நாடுகளுக்குக் குடி பெயர்ந்த போது தங்களுடைய பொருளாதார உயர்வுக்காகவும் சமூகத் தகுதிக்காகவும் தாய் மொழியினால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து ஆங்கிலம், பிரஞ்சு, கிரியோலி மொழிகளைக் கற்கத் தொடங்கினார்கள். தென்ஆப்பிரிக்காவில் ஆங்கிலம் பொருளாதார உயர்வுக்கு வழி வகுக்கும் என கருதப்பட்டது. தென்ஆப்பிரிக்காவில் சாதிக் கலப்புத் திருமணம் - இனக் கலப்புத் திருமணம் சர்வசாதாரணம். இத்திருமணங்களின் விளைவாக குடும்பங்களில் ஆங்கிலமே வீட்டு மொழியாகி விட்டது. தென்ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளையர்கள் அங்குள்ள தமிழர்களைக் கூலிகள் என்றும் அவர்கள் பேசும் மொழியை கூலி மொழி என்றும் இழிவு படுத்தியதால் தமிழர்கள் தங்கள் மொழியிலேயே பேசுவதற்கு வெட்கப்பட்டார்கள். இந்த நிலைமை தொடருமானால் தென்ஆப்பிரிக்காவில் அடுத்த இரு தலைமுறைகளுக்குள் தமிழ் முற்றிலுமாக மறைந்து போய் ஆங்கிலமே தமிழர்களின் மொழியாக மாறும்.

மலேசியா:
மலேசியாவில் 1969ஆம் ஆண்டில் மலாய் மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. எனவே அரசு ஊழியர்கள் அனைவரும் மலாய் மொழி படித்தே தீரவேண்டிய நிலை உருவாயிற்று. பள்ளிக்கூடங்களில் மலாய் மொழியே கல்வி மொழியாக ஆகிவிட்டது. இதன் விளைவாக இந்திய மற்றும் சீன மொழிகள் முக்கியத்துவம் இழந்தன. மலேசியாவிலுள்ள இந்தியர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மாத ஊதியத்தை எதிர்பார்த்து வாழ்பவர்கள். எனவே, மலாய் மொழி ஆங்கிலத்துடன் தமிழையும் கற்க இயலாதவர்கள். இதன் விளைவாகத் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்பட்டு வந்தது. ஆனால் தமிழ் பத்திரிகைகள் ஏராளமாக வெளியாகின்றன. தமிழ் பேசுபவர்களும் படிப்பவர்களும் இன்னமும் உள்ளனர்.

இந்தோனேசியாவில் தமிழர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியேறினார்கள். 1946ஆம் ஆண்டில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் தாயகம் திரும்பினார்கள். அதற்குப்பிறகு ஜாகர்தா நகரில் குடியேறிய தமிழர்கள் தங்கள் மொழியை அடியோடு இழந்து விட்டார்கள்.

1830ஆம் ஆண்டில் தாய்லாந்தில் குடியேறிய தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது 200 பேர்கள் மட்டுமே அங்கு வாழ்கிறார்கள். அவர்கள் அந்த நாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்டு மொழியை அடியோடு இழந்து விட்டார்கள்.

கென்யாவிலுள்ள தமிழர்களில் தற்போது யாருக்கும் தமிழ் பேசத் தெரியாது.

சிங்கப்பூர் :

சிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குகிறது. இந்தியாவில் கூட தேசிய அளவில் தமிழுக்கு அந்த தகுதி கிடைக்கவில்லை. சிங்கப்பூரில் பல மொழி கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் தாய் மொழி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றால் போதும் என அரசு கருதுகிறது. தமிழுக்கு முதல் மொழித் தகுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழர்களின் ஆர்வமின்மை காரணமாக அது இப்போது இரண்டாவது மொழி ஆகிவிட்டது. தேசிய அளவில் தமிழ் படிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறார்கள். சிங்கப்பூரிலுள்ள இந்தியர்களில் 65 சதவீதத்துக்கு மேலானவர்கள் தமிழர்கள் ஆவார்கள். தமிழ் வளர்ச்சிக்கு இது நிச்சயமாக உதவும். ஆனால் தமிழர்கள் சீன மொழி, மலாய் மொழிகள் தமிழை விட தங்களுக்குப் பயனளிக்கும் மொழிகள் எனக் கருதுகிறார்கள். இதன் விளைவாக சிங்கப்பூர் மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் மட்டுமே தமிழ் பேசுகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 4.8 சதவீதம் தமிழர்கள் இருந்தும் பயனில்லை. சிங்கப்பூரில் வாழும் தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் மொழியை இழந்து விட்டார்கள். சீன மொழி, மலாய் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது. ஆனால் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இந்துக் கோயில்களில் கூட குருக்கள் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். தமிழ்க் குழந்தைகள் தங்களின் பெற்றோருடன் மற்றும் பெரியவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவதையே விரும்புகிறார்கள். இந்த நிலைமை நீடிக்குமானால் சிங்கப்பூர் தமிழர்கள் சில தலைமுறைகளிலேயே தமிழை இழந்து விடும் பயம் உண்டு. தங்கள் தாய்மொழிக்கு எதிரான தமிழர்களின் இந்தப் போக்கு வளருமேயானால் இன்னும் ஓரிரண்டு தலைமுறைகளில் சிங்கப்பூரிலிருந்து தமிழ் அடியோடு மறைந்து போகும்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழின் நிலை

இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் ஆவர். சில இடங்களில் அவர்கள் தங்கள் தாய் மொழியை இழந்துள்ளனர். வேறு சில இடங்களில் தாய் மொழியைக் காப்பாற்றி வருகின்றனர். கேரள மாநிலத்தில் பாலக்காடு, திருவனந்தபுரம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு வாழ்கின்றனர். சித்தூர், பாலக்காடு தாலுக்காக்கள் தமிழக எல்லைகளையொட்டி அமைந்துள்ளன. எனவே, இங்கு வாழும் தமிழர்களில் பெரும்பான்மையினர் தமிழ் மட்டுமே பேசி வருகின்றனர். தெற்கே உள்ள தமிழ்நாட்டு பகுதிகளுக்கு வணிகம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்காகச் சென்றுவர வேண்டிய தேவை இருப்பதால் இவர்கள் தமிழைச் சகல துறைகளிலும் பயன்படுத்தி வருகின்றனர். பாலக்காட்டிலுள்ள பார்ப்பனர்கள் கூட வீட்டிற்குள் தமிழையும் வெளியே மலையாளமும் பேசுகின்றனர்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களின் பேச்சு மொழியாக மலையாளம் நாளடைவில் ஆகிவிட்டது.

இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் தங்களுக்குள் தமிழிலும் பிறரிடம் மலையாளத்திலும் பேசுகின்றனர்.


தாயகத் தமிழர்களின் அலட்சியப் போக்கு

அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை இழக்க நேர்ந்ததற்கு தாய்த் தமிழகத்தின் அலட்சியப் போக்கு முக்கியக் காரணமாகும். தங்கள் மொழியைக் கற்பதற்குத் தேவையான கல்விச் சாதனங்கள், தமிழ் தட்டச்சு இயந்திரம், ஒலி-ஒளி குறுந்தட்டுகள் இவற்றை தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அயலகத் தமிழர்கள் விடுத்த வேண்டுகோள் தாய்த் தமிழகத்தினால் சரிவர கவனிக்கப்படவில்லை. ஆனால் இதற்கு எதிர்மாறாக இந்தித் திரைப்படங்கள் அயல் நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள தொலைக்காட்சிகளிலும் திரையரங்குகளிலும் காட்டப்படுகின்றன. இந்தி பேசும் மக்கள் மட்டுமல்ல தமிழர்கள் உட்பட இந்திய மொழிகளைப் பேசும் பிறமக்களும் விரும்பிப் பார்க்கின்றனர். தமிழ்த் திரைப்படங்கள் அவ்வாறு காட்டப்படுவதில்லை. இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் மொரிசியசு நாட்டிலுள்ள திரையிடுபவர்களுக்குமிடையே நல்ல உறவு உள்ளது. அதே அளவு உறவு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் திரையிடுபவர்களுக்கும் இடையே இல்லை.

தென்ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. போதுமான மாணவர்கள் தமிழ் கற்க முன்வராததன் விளைவாக இந்நாடுகளில் தமிழ் கற்றுக் கொடுப்பது கைவிடப்பட்டுள்ளது. ஆங்கிலமோ அல்லது பிரஞ்சு மொழியோ கற்று பிரிட்டன் அல்லது பிரான்சு நாட்டுக்கு வேலைவாய்ப்பு தேடி செல்லவே இளைஞர்கள் விரும்புகிறார்கள். தமிழைக் கற்றுக் கொண்டு இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டுக்குச் செல்ல அவர்கள் விரும்பவில்லை.

சிங்கப்பூரில் தமிழ் தான் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் வாய்ப்பு அறவே இல்லை. தென்ஆப்பிரிக்காவில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தங்கள் மொழியைக் கற்க வேண்டும் என்பது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அமெரிக்காவில் வாழும் புதிய தலைமுறையினர் அமெரிக்கர்களாக வாழ்வதில் பெருமைப்பட்டுக் கொள்கின்றனரே தவிர தங்கள் தாய் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஒருபோதும் நினைப்பதில்லை.

ஆசுதிரேலியாவில் வாழும் தமிழர்களில் 25 சதவீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் தமிழில் பேசத் தெரியாதவர்கள்.

பிஜி மற்றும் பல கரிபியன் தீவுகளில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் தாய் மொழியை அறவே இழந்து விட்டனர்.

அதே வேளையில் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் நடுவில் தங்களுடைய தாய் மொழி, பண்பாடு ஆகியவற்றைப் பேண வேண்டும் என்ற எண்ணம் மேலோட்டமாக மட்டும் உள்ளது. இவர்களுடைய தாய் மொழி இழப்பு என்பது மிக வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் அதே வேளையில் அமெரிக்காவில் வாழும் ஸ்பானியர்கள், சீனர்கள், கொரியர்கள், இத்தாலியர்கள் ஆகியோரைப் போன்றவர்கள் தங்கள் தாய்மொழியை ஒருபோதும் இழக்கவில்லை. அவர்கள் குறைந்தபட்சம் தங்கள் வீடுகளுக்குள் தாய்மொழியில் பேசுகிறார்கள். அமெரிக்காவிற்குத் தாங்கள் வருவதற்கு முன்னாலேயே ஆங்கில மொழியில் தங்களுக்குச் சிறந்த புலமை இருந்ததனால் உள்ளூர் மக்களிடம் சுலபமாகப் பேசிப் பழக முடிந்ததாக அமெரிக்கவாழ் தமிழர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் ஆங்கில மொழியின் மூலம் மட்டுமே தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நினைப்பதால் தங்களது தாய்மொழியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு அவசியமற்றுவிட்டது.


தமிழர்களின் அழிந்துவரும் மொழி உணர்வு

Language Attitude Of the Dispersed Tamils and the Neo-Tamils என்னும் தலைப்பில் முனைவர் ஜே. நீதிவாணன் அவர்கள் சிறந்ததொரு ஆய்வு நூலைப் படைத்துள்ளார்.

கடந்த நூற்றாண்டுகளில் ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அதைப்போல அண்டை மாநிலங்களைச் சேர்ந்த தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் தமிழ்நாட்டில் குடியேறி தமிழகத்தையே தங்கள் தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மொழி உணர்வு பற்றிய சிறந்த ஆய்வினை மேற்கொண்டு முனைவர் ஜே. நீதிவாணன் எழுதியுள்ள நூலே இதுவாகும். முதல்முறையாக இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இந்த நூலின் சிறப்பு மேலும் கூடுகிறது. இந்த ஆய்வினை அவர் மேற்கொள்வதற்கு புதுச்சேரி மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் உதவி செய்துள்ளது.

உலக மொழிகளில் ஒன்றாக தமிழ் ஆகியுள்ளது. உலகம் முழுவதும் பரவிய இனங்களில் ஒன்றாக தமிழ் இனம் விளங்குகின்றது. உலகத் தமிழர்களின் நிலை குறித்து பலரும் நூல்கள் எழுதியுள்ளனர். ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் வந்தேறிகளாக உள்ள சிறுபான்மை மொழியினர் ஆகியோரின் மொழி உணர்வு குறித்து யாரும் ஆய்வு செய்யவில்லை என்ற குறையை முனைவர் ஜே. நீதிவாணன் அவர்கள் போக்கியுள்ளார். உலக மொழியாக தமிழ் உயர்ந்துள்ள இந்த வேளையில் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் சிறிதுசிறிதாக தங்கள் மொழியை இழந்து வருகிற அவல நிலையை ஆதாரப்பூர்வமாக இந்நூல் படம்பிடித்துக்காட்டுகிறது. இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் உலகத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை அறவே இழக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதை ஆசிரியர் எடுத்துக்கூறும் விதம் நம்மை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்குகிறது. ஆனால் நமது உள்ளங்களைச் சுடும் இந்த உண்மையை உணர்ந்து நமது மொழிக்கு வரவிருக்கும் அழிவினைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு. அந்தக் கடமையைச் செய்வதற்கு குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் முன்வரவேண்டும்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்த நூல் விரைவில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டாகவேண்டும். அப்பொழுதுதான் மிகப்பெரும்பாலான தமிழர்கள் இந்த உண்மைகளை அறிய முடியும்.

சிறந்ததொரு ஆய்வினை மேற்கொண்டு இந்த நூலினைப் படைத்துள்ள முனைவர் ஜே. நீதிவாணன் உலகத் தமிழர்கள் அனைவரின் பாராட்டிற்குரியவர்.

Monday, June 23, 2008

அமேரிக்க! ஓநாய் மீண்டும் உறுமுகிறது - பழ.நெடுமாறன்

இந்தியாவின் மீது அமெரிக்கா மீண்டும் பாய்ந்துள்ளது. இந்தியாவிலிருந்து சாதாரக அரிசி மற்றும் சில உணவுப் பொருள்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



இதைக்கண்டு அமெரிக்கா ஆத்திரம் அடைந்துள்ளது. அமெரிக்க உயர் அதிகாரியான கிரிஸ்டோபர் பாடில்லா என்பவர் “அரிசி உள்ளிட்ட உணவு தானியப் பொருள்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், அண்டைய நாடுகளில் கடும் உணவு தட்டுப்பாட்டை உண்டாக்கி விலை உயர்வுக்கு வழி வகுக்கும் என்று எச்சரித்துள்ளனர்.



அமெரிக்காவின் கோபத்திற்கு உண்மையான காரணம் வேறு. அரிசியை ஒரு போதும் அமெரிக்கர்கள் உபயோகிப் பதில்லை. அமெரிக்காவில் வாழும் இந்தி யர்களும் பிற ஆசிய ஆப்பிரிக்க மக் களும் உயர்ரக அரிசிகளையே உண்ணுகி ன்றனர். அவர்களும் சாதாரக அரிசியை ஒரு போதும் பயன்படுத்துவது இல்லை.



இந்தியா அரிசி உற்பத்தியில் உலகில் 2வது இடத்தில் உள்ளது. கோதுமை, உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், மக்காச் சோள உற்பத்தியில் ஏழாவது இடத்திலும் உள்ளது. அமெரிக் காவுக்கு அரிசியோ, கோதுமையோ வேண்டியதில்லை. பின் எதற்காக அமெரிக்கா இந்தியாவின் மீது பாய்கிறது?



இந்தியாவில் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் சாதாரக அரிசியை யும், சோளத்தையும் இதர புன்செய் தானியங்களையுமே உணவுக்காகப் பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களுக்குத் தேவையான மேற்கண்ட தானியங்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது நியாயமானது மட்டுமல்ல. தன் மக்களின் நலனை கருத்தில் கொண்டதுமாகும்.



இதை கண்டிக்கும் தகுதி அமெரிக்காவிற்கோ வேறு எந்த நாட்டிற்கோ கிடையாது. ஒவ்வொரு நாடும் அதன் மக்களின் நலனை மனதில் கொண்டே செயல்படுகின்றன.



1960களில் உலகெங்கும் பல நாடுகளில் கடுமையான கோதுமைப் பஞ்சம் ஏற்பட்ட போது இதே அமெரிக்கா கோதுமை விலையை உயர்த்துவதற்காக கோடிக்கணக்கான டன்கள் கோதுமையை கடலில் கொட்டி வீணாக்கியது. அந்த அமெரிக்கா இப்போது இந்தியர்களின் பசியைத் தீர்க்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கி இருப்பதைக் கண்டித்திருக்கிறது.



அமெரிக்காவின் உண்மையான நோக்கம் அரிசி ஏற்றுமதி தடையைப் பற்றியல்ல. இந்தியாவில் ஏராளமாக விளையும் சோளம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டதனால் சோளம் கிடைக்காமல் போய்விடுமே என அமெரிக்கா கவலைப்படுகிறது. அமெரிக்க மக்களின் உணவுக்காக இந்திய சோளம் தேவைப்படுமானால் அம்மக்களின் பசி தீர்க்க அதை நாம் அனுப்பலாம். ஆனால் எத்தனால் தயாரிப்பதற்காக சோளம் அமெரிக்கா வுக்குத் தேவைப்படுகிறது.



அமெரிக்காவில் சோளம், புஷல், கணக்கில் அளக்கப்படுகிறது. ஒரு புஷல் என்பது 25.4 கிலோ கிராம்கள் ஆகும். ஒரு புஷல் சோளத்திலிருந்து 11.37 லிட்டர் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.



அமெரிக்காவில் தனி நபர் ஒருவருக்கு மாதந்தோறும் 63.27 கிலோ கிராம் அல்லது 139.5 பவுண்ட் சோளம் தேவைப்படுகிறது. ஆனால் இந்தியா வில் தனி நபருக்கு ஆண்டுக்கு 29 பவுண்டு சோளம் தேவைப்படுகிறது.



அமெரிக்காவில் எத்தனால் மூலம் ஓடும் செவர்லட் காரின் டேங்க் 90.4 லிட்டர் கொள்ளும். இதற்குத் தேவையான எத்தனாலை உற்பத்தி செய்ய 203.2 கிலோ கிராம் சோளம் தேவை.



அதாவது 203.2 கிலோ கிராம் அளவு சோளத்தை ஒரு அமெரிக்கர் 3.2 மாதங்களுக்கு உண்ணலாம். அதே அளவு சோளத்தை இந்தியர் ஒருவர் 15 ஆண்டுகளுக்கு மேல் உண்ணலாம்.



அமெரிக்காவின் ஆத்திரத்திற்கு காரணம் என்ன என்பது இப்போதுப் புரிகிறதா? பெட்ரோல், டீசல் ஆகிய வற்றின் விலை உயர்வினால் அமெரிக் கர்கள் தங்களது வாகனங்களுக்கு எத்தனாலைப் பயன்படுத்தி வருகிறார் கள். அதற்கு சோளம் நிறைய தேவை.



ஏற்றுமதித் தடையின் காரணமாக இந்திய சோளம் அமெரிக்காவுக்கு கிடைக்க வழியில்லை. எனவே இந்தியாவை நோக்கி அமெரிக்க ஓநாய் மறுபடியும் உறுமுகிறது.



தன் கண்ணில் உள்ள உத்தி ரத்தை எடுத்து விட்டு அடுத்தவர் கண் ணில் உள்ள துரும்பை அகற்ற வேண் டும் என இயேசுபிரான் கூறினார். இயே சுவைப் பின்பற்றுவதாகக் கூறும் அமெ ரிக்கா அவரது அறிவுரையைப் புறக்கணிக்கிறது.



சர்வதேச வணிக – பொருளா தார மய்யத்தின் செயலாளர் நாயகமான பிரதீப் எஸ்மேத்தா என்பவர் பின் வருமாறு கூறியுள்ளது சிந்திக்கத் தக்கதாகும்.



நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்தியர்களின் உடல் எடையைப் போல அமெரிக்கர்கள் தங்கள் உடல் எடையை குறைத்துக் கொள்வார்களானால் ஆப்பிரிக்காவில் உள்ள கோடான கோடி பசித்த மக்கள் தங்களுக்குத் தேவையான உணவைச் சிறிதளவாவது பெறுவார்கள். தங்கள் உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதற்காக அமெரிக் கர்கள் செலவிடும் பணத்தை பசியால் வாடும் மக்களுக்கு அளிப்பார்களானால் ஏராளமானவர்கள் பசியாறுவார்கள். என்றும் கூறியுள்ளார்.



உணவு தானிய ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையினால் உலகில் உணவுப் பொருட்களின் விலை உயரும் என அமெரிக்காக் கூறுவது வெறும் பிதற்றலாகும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளிலும் ‘எத்தனால், மற்றும் உயிரி எரிபொருள் தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் சோளம் போன்ற தானியங் களை உற்பத்தி செய்யுமாறு விவசாயிகள் தூண்டப்பட்டு அதற்காக ஏராளமான மானியமும் அளிக்கப்படுகிறது.



இதனால் அந்நாடுகளை சேர்ந்த விவசாயிகள் உணவு தானிய உற்பத்தியை நிறுத்தி விட்டு உயிரி எரிபொருள் உற்பத்திக்குத் தேவையான தானியங்களைப் பயிரிடுகிறார்கள். இதன் காரணமாகவும் அமெரிக்காவும் அய்ரோப்பிய ஒன்றியமும் விதித்துள்ள வணிகத் தடைகளின் காரணமாகவும் உலக நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை ஏறியிருக்கிறது என்பதுதான் உண்மை யாகும். இதை மறைப்பதற்கு அமெரிக்கா இந்தியாவின் மீதும் மற்றும் வளரும் நாடு களின் மீதும் வீண் பழியை சுமத்துகிறது. வளரும் நாடுகள் மேலும் மேலும் வளர்ச்சிப் பாதையில், செல்வதுவும் அவர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாவதும் புதிய அரசியல் இலக் கணம் ஆகும். அதைத் தடுக்க யாராலும் முடியாது.

Sunday, June 15, 2008

உலகத் தமிழர் பேரமைப்பு இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தோற்றம்

உலகத் தமிழர் பேரமைப்பில் இணைந்த தமிழ்ச் சங்கங்களின் கூட்டம் 24-05-08 அன்று திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அ. பத்மனாபன், மா.செ. தமிழ்மணி, பேரா. மருதமுத்து, சின்னப்பத் தமிழர், தம்பி பழனிச்சாமி, தங்கதுரை, இளங்கண்ணன், க. சச்சிதானந்தன், செங்கொடி, பரணன், காமராசன், அசோக்குமார், முத்து, நிலவழகன், அரணமுறுவல் உட்பட பலர் உரையாற்றினர்.

இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு இக் கூட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக மறவன்புலவு க. சச்சிதானந் தம், துணைத் தலைவர்களாக புலவர் க. சுப்பிரமணியம் (கர்நாடகம்) மு. முத்துராமன் (கேரளா) ஆ. நெடுஞ்சேரலாதன், மா.செ. தமிழ்மணி பொதுச்செயலாளர்களாக தி. அழகிரிசாமி, அரணமுறுவல், பொருளாளராக பொன்னிறைவன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக வ. வேம்பையன், மரு. வே. குழந்தைவேலு, நாக.இரகுபதி, திருமதி. தமித்தலெட்சுமி, தம்பி பழனிச்சாமி, ந.மு. தமிழ்மணி, பேரா. அறிவரசன், சின்னப்ப தமிழர், சி. தங்கதுரை, முத்துச்செல்வன், ஆ. கருப்பையா, திருமதி. அ. செங்கொடி, மு.வ. பரணன், மரு. பழனிச்சாமி, சக்தி காமராசன், நிலவழகன், இரா. சோ. ராமசாமி, தமிழ்வேங்கை, வேலுமணி ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. அயலகத் தமிழர்களுக்கு இடஒதுக்கீடு

உலகெங்கும் வாழும் எட்டுகோடி தமிழர்களில் 2 கோடி பேர் தமிழ்நாடு தவிர்த்த பிற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். அயல்நாடுகளில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் 5 விழுக்காடு இடங்களையும் வேலை வாய்ப்பில் 5 விழுக்காட்டு இடங்களையும் ஒதுக்குவதோடு. இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் 5 விழுக் காட்டு இடங்களையும் வேலைவாய்ப்பில் 5 விழுக்காட்டு இடங்களையும் ஒதுக்கித் தமிழர்களின் தாயகம் தமிழ்நாடு என்பதை உறுதி செய்ய வேண்டுமாய்த் தமிழக அரசை இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.

2. பிறமாநிலங்களில் இடஒதுக்கீடு

மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவை பிரிந்தபோது அந்தந்த மாநிலங்களில் உள்ள சாதி வாரிப் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தமிழர்களின் சாதிப்பெயர்கள் இடம்பெறவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பழைய ஒன்றுபட்ட சென்னை மாகாண சாதிப்பட்டியல் அப்படியே வைக்கப்பெற்று இல்லாத சாதிகளுக்கும் கல்வியிலும் வேலையிலும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் உள்ள தமிழர்களை அந்தந்த மாநிலங்களிலுள்ள பட்டியலில் சேர்த்துக்கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாட்டரசு நடவடிக்கை மேற்கொள்ள இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.


3. ஈழத்தமிழ் அகதிகள்

ஐ.நா. பேரவையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஐ.நா. அகதிகள் ஆணையம் உலகநாடுகளில் உள்ள அகதிகளுக்குச் செய்யவேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து வருகிறது. இந்த ஆணையப் பட்டயத்தை ஏற்று பல்வேறு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இன்னும் ஏற்றுக் கையொப்பம் இடவில்லை. இதனால் இலங்கையிலிருந்து வந்து தமிழ் அகதிகளுக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் உதவமுடிய வில்லை. இந்திய அரசு அகதிகள் ஆணையத்தை ஏற்றுக்கொள்வதுடன் இலங்கை அகதிகளுக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் வழங்கும் உதவிகளைப் பெற்றுத் தர செய்ய வேண்டும் என்று இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.

4. பிறமாநிலத்தவர்களுக்கு தமிழ்வழிக்கல்வி

தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, உருது, மராட்டி போன்ற மொழிபேசும் சிறுபான்மையினர் தங்களுக்குரிய கல்வி, வேலைவாய்ப்பு கலை, பண்பாடு உள்ளிட்ட அனைத்து வாழ்வியல் உரிமைகளையும் தாராளமாகப் பெற்றுவரும் அதே நேரத்தில் அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள எந்த உரிமையையும் அனுபவிக்க முடியாமல் அல்லலுறுகிறார்கள். தாய்மொழியில் கற்கும் அடிப்படை உரிமையைக் கூட பெறமுடியாமல் உள்ளார்கள். இந்தியாவின் பிறமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் மொழிச் சிறுபான்மையினருக்கான உரிமைகளை வழங்க இந்திய அரசு ஏற்பாடு செய்வதுடன் அதைக் கண் காணிக்கவும் வழிவகை செய்ய வேண்டுமென்று இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.

5. உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்

இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்துள்ள இந்த நேரத்தில் உலகெங்கும் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ்மொழிக்கு ஆய்வு இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ்ப்பட்ட, மேற்பட்ட, ஆய்வுப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டுமென்று இந்திய அரசை இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக் கொள்கிறது.

6. தமிழக மீனவர்கள் நிலை

இந்திய அரசு கச்சத்தீவை இலங்கை அரசுக்குத் தாரை வார்த்ததின் காரணமாகத் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை பறிபோய்விட்டது. அன்றாடம் கைது, வலைபறிப்பு, கொலை என்று மீனவர்கள் சீரழிந்து கொண்டுள்ளார்கள். தமிழக மீனவர்களை தனது குடிமக்கள் என்று இந்திய அரசு கொஞ்சமும் கருதிப்பார்க்காமல் தொடர்ந்து இலங்கை அரசின் ஆணவப் போக்கிற்குத் துணைபோய்க் கொண்டுள்ளது. இந்திய அரசு இலங்கைக்குச் செய்துவரும் எல்லா உதவிகளையும் நிறுத்திவிட்டு இலங்கை அரசை எச்சரிக்கை செய்வதுடன் கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்குள்ள உரிமையை நிலைநாட்டத் துணை நிற்க வேண்டுமென்று இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.


7. தமிழ்வழிப் பள்ளிகளுக்கு ஆதரவு

தமிழ்நாட்டில் தமிழக அரசு மக்கள் தொகைப் பெருக்கத்துக்கேற்பத் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்க வில்லை. கல்வி வழங்கும் உரிமையை தனியார்களிடம் விட்டதின் விளைவாக அவர்கள் ஆங்கில வழிப் பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ளையடித்து வருகிறார்கள். ஆனால் தமிழக அரசு செய்யவேண்டிய பணியைச் செய்துவரும்-தமிழ்வழிப் பள்ளிகளை நடத்திவரும் தமிழர்களை ஊக்குவிப் பதற்கு மாறாக அரசு தொல்லைகொடுத்து வருகிறது. தமிழ்வழிப் பள்ளிகளை நடத்திவரும் தமிழர்களுக்கு அரசு எல்லா வகையிலும் உதவிசெய்யவேண்டு மென்று இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக் கொள்கிறது.

Saturday, May 17, 2008

புலிகளுக்கு எதிராக இந்தியா! பகத்சிங்கின் குடும்பத்தினர் எதிர்ப்பு

இந்தியாவின் மிகவும் ஈர்க்கப்பட்ட விடுதலை வீரரான பகத்சிங்கின் குடும்பத்தினர் இந்திய இராணுவம் இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங் ஆவார். இவரது மகன் மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அண்மையில் இதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய இராணுவ அதிகாரியாக தான் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதை எனது தந்தை விரும்பவில்லை. 'எனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இந்தியாவின் இந்த நடவடிக்கையை நியாயத்திற்காக போராடும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதினர்' என்கிறார் அவர்.

யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கு எதிரான போரில் சிறந்த பணி புரிந்தமைக்காக மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங்கிற்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் விழாவிற்கு அவரது தந்தை வர மறுத்துவிட்டார். 'அங்கீகரிக்கப்படாமலே போய்விட்ட பெரும் தியாகங்களை புரிந்தவர் களுக்கு எதிராக தன் மகன் போரிட்டதற்காக கெளரவிக்கப் படுவதை என் தந்தையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை' என்கிறார் அவர்.

பிரிட்டிசாரிடமிருந்து இலங்கை விடுதலை பெறுவதற்கு முந்தைய காலக்கட்டத்திலிருந்தே ஈழத் தமிழர்கள் இந்திய விடுதலை வீரர்கள் மீது பெரும் பற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் வீடுகளில் இந்திய விடுதலை வீரர்களின் படங்கள் மாட்டப் பட்டிருக்கும்.

கர்னல் கிட்டுவின் தந்தை ஒரு காந்தியவாதி. தன் மூத்த மகனுக்கு காந்தி என்றே பெயரிட்டார். அவர் வீட்டில் காந்தி, நேரு, திலகர் ஆகிய இந்திய தலைவர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. கிட்டு தன் பங்கிற்கு பகத்சிங்கின் படத்தையும் மாட்டினார். தளபதி பண்டிதரின் வீட்டில் பகத்சிங், நேதாஜி ஆகியோரின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 1980களில் 'சண்டே' ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணலில், தன்னை மிகவும் கவர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களில் பகத்சிங்கை முதன்மைப் படுத்தி கூறியிருந்தார். அத்தோடு நேதாஜியையும் குறிப்பிட்டிருந்தார்.

இன்றளவிலும் பாரதியின் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' போன்ற விடுதலைப் பாடல்கள் ஈழத்தில் பாடப்படுகின்றன. பழ. நெடுமாறன் அவர்கள் ஈழத்தில் செய்த முதல் சுற்றுப்பயணத்தின் ஒளிப்படத்திற்கு பிரபாகரன் 'சுதந்திர தாகம்' என்றே பெயரிட்டார். இந்த குறிப்பிட்ட பாடலின் அடிப்படையிலேயே 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்ற முழக்கம் அமைக்கப்பட்டது.

இந்த அளவிற்கு இந்திய விடுதலை வீரர்களை நேசித்த, தங்களவர்களாக நினைத்த ஈழத்தமிழர்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் தான் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. அதிலும் "உலகில் எந்த மூலையில் சுதந்திரப் போராட்டம் நடந்தாலும் அதனை ஆதரிப்பதே எங்கள் வெளியுறவுக் கொள்கை" என பிரதமராக தனது முதல் உரையிலேயே அறிவித்த ஜவகர்லால் நேருவின் பேரன் இராஜீவ் காந்தியின் காலத்தில் ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டது மிகக் கொடுமையானது.

விடுதலை வேட்கை கொண்ட ஒவ்வொருவரும், மானுட விடுதலையை வேண்டும் ஒவ்வொருவரும், உலகில் எங்கு விடுதலைப் போராட்டம் நடந்தாலும் அதற்கு ஆதரவாகவே நிற்பார்கள் என்பதற்கு பகத்சிங்கின் குடும்பத்தினரே சான்று.

தென்செய்திக்காக பூங்குழலி

Monday, May 5, 2008

சாதிவெறி மின்வேலி - சேரிக்கும் ஊருக்குமிடையே

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி மேற்கு நாடுகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே பங்கிடப் பட்டது. அப்போது பெர்லின் நகரில் ஒரு பகுதி சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப் பட்டது. மேற்கு நாடுகள் வசமிருந்த பகுதிக்கும் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதிக்கும் இடையே ஒரு சுவர் கட்டப்பட்டது. பெர்லின் நகர மக்கள் ஒருவருடன் மற்றொருவர் தொடர்பு கொள்வதை அந்த சுவர் தடுத்தது. ஜெர்மானிய மக்களின் வெறுப்புக்கு ஆளான பெர்லின் சுவர் 1995லிஆம் ஆண்டில் மக்களால் இடித்து தகர்க்கப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டில் சிற்றூர் ஒன்றில் பெர்லின் சுவர் ஒன்று எழுப்பப்பட்டு அதற்கு மேலாக மின் வேலியும் அமைக்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது.

நாட்டின் எல்லைகளில் மின்வேலிகள் அமைக்கப்படுவதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஊருக்கும் சேரிக்கும் இடையே மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் இதோ :

மதுரை மாவட்டத்தில் உள்ள உத்தபுரம் கிராமத்தில் 2000 தலித் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் இங்கு பிற சாதியினரைவிட எண்ணிக்கையில் அதிகம் உள்ளனர். தலித்துகளுக்கு எதிராக நீண்ட நாட்களாக சாதி வெறுப்பு இருப்பதால், பொதுப் பாதைகள் அனைத்தும் 600 மீட்டர் நீள சுவரால் தடுக்கப்பட்டிருக்கிறது,

இச்சுவர் 1990 முதலே இருக்கிறது. ஆனால் கடந்த 10 நாட்களாக இச்சுவரில் இரும்புக் கம்பிகள் மூலம் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. தலித்துகள் சாதி இந்துக்களின் பகுதிக்குள் வருவதைத் தடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

தேநீர்க் கடைகளிலும் சமூகக் கூடங்களிலும், சுடு காடுகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் தலித்களுக்கு அனுமதி இல்லை. உத்தபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் மாரிமுத்து என்பவர் தலித் தான். அவர், இங்குள்ள தலித்கள் பொருளாதார ரீதியில் முன்னேறியும் அவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை என்று கூறுகிறார்.

கோயில் திருவிழாக்களின்போது தலித்துகள் அதில் பங்கேற்கவோ, தேர் வடம் பிடிக்கவோ அனுமதி இல்லை. பொது சொத்து ஆதாரங்களுக்கான அனைத்து உரிமைகளும் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டுள்ளன.

ஆதிக்க சாதி வெறியின் அடையாளமாகத் திகழும் உத்தபுரம் சுவரை இடித்துத் தகர்க்க தமிழ்த் தேசிய இன உணர்வாளர்கள் முன் வர வேண்டும். தமிழினத்திற்கு என்றும் அழியாத அவமானத்தை சாதி வெறியர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதை அகற்றித் தீர வேண்டியது நமது நீங்காதக் கடமையாகும்.

Monday, April 21, 2008

அடையாள அரசியலும் "இந்து"வின் ஆத்திரமும் - பேரா. மருதமுத்து

அடையாள அரசியலுக்கு எதிராக-குறிப்பாக மொழிவழித் தேசிய (மாநில) அரசியலுக்கு எதிராக-இந்து நாளேடு நஞ்சைக் கக்கியுள்ளது.

26-03-08 அன்று அந்த ஏட்டின் தலையங்கத்துக்கு எதிர்ப்பக்கக் கட்டுரை ஒன்றில் இந்த நஞ்சு நிரம்பி வழிகிறது. "அடையாளமும் பிரிவினைவாதமும்: இனவழித் தேசியத்தின் அரசியல்" என்பது கட்டுரைத்தலைப்பு இக்கட்டுரையுடன் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒளிப்படத்தில் அசாமிலிருந்து அசாமிய உரிமை கோருவோரால் விரட்டப்பட்ட ஏழை பீகாரிகள் சிலர் பரிதாபகரமாகக் காட்சியளிக்கின்றார்கள்.

அடடா, இந்துவுக்குத்தான் ஏழை எளியோர் மீது எவ்வளவு அக்கறை, கருணை?

அசாம் மாநிலத்தின் உரிமை கோருவோர் ஏழை எளியோர்க்குப் பெரும் எதிரிகளாவர் என்று பிரச்சாரம் செய்கிறது இந்துவின் படத்தோடுகூடிய இந்தக் கட்டுரை.

"உனது மொழிவழிமாநிலத்தில் உனக்குப் பிழைக்க வழியில்லை யென்றால். நீ வேறு எங்காவது போய் எப்படியாவது பிழைத்துகொள். மத்திய, மாநில அரசுகள் உனக்குப் பொறுப்பில்லை. போகிற இடத்தில் குறைந்த கூலிக்குக் கொத்தடிமையாக வேலை செய்துகொள். உன்னால் வேலைவாய்ப்பு பறிபோகும் அல்லது கூலியில் குறைவு ஏற்படும் நிலையிலுள்ள அந்தந்த மாநிலத்து ஏழை மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் போராடக்கூடாது. அப்படியே போராடுவது தேசிய நலன்களுக்கு எதிரானது. அந்த பாதிப்பில் வரும் எதிர்ப்பு என்பது மொழிவழித் தேசிய அரசியல். அது வன்முறை அரசியல்," என்கிறது இந்தக் கட்டுரை.

உழைக்கும் மக்கள் தங்கள் மொழிவழிச் சமூகத்திலிருந்து வேரோடு பறித்தெடுக்கப்பட்டு வேறுவேறு பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அநாதைகளாகக் குடியமர்த்தப்பட்டு ஒட்டச் சுரண்டப்பட்டது முன்பு காலனியாட்சிக் காலத்தில் நிகழ்ந்த கொடுமை. அதன் விளைவுகளை மலேசியா போன்ற நாடுகளில் இன்றளவும் அனுபவித்து வருகிறார்கள் சாமானிய மக்கள். வரலாற்றுப் பூர்வமாக நேர்ந்துவிட்ட இந்தக் கொடுமைகளிலிருந்து மீண்டுவர ஜனநாயக சக்திகளும், மனித நேய வாதிகளும் பெருமுயற்சி செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் இந்திய மேல்தட்டினர் பழைய காலனியாதிக்க முறைகளுக்குப் புதிய தேசிய முலாம் பூசித் தொடர்ந்து கையாண்டு வருகிறார்கள். இதன்மூலம் புதுப்புதுச் சிக்கல்களை மக்கள் மத்தியில் உருவாக்கிப் பிரிவுகளையும், பிளவுகளையும் ஓயாமல் தோற்றுவித்தபடி யிருக்கிறார்கள்.

இந்திய உழைக்கும் மக்களை (மொழிவழி) மாநிலத்துக்கு மாநிலம் பந்தாடுவதால் உழைப்பாளிகளின் ஒட்டுமொத்த வர்க்க நலன்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

முதலாவதாக வேற்றுமொழி மாநிலத்துக்கு இடம்பெயரும் ஏழைகள் சமூகச் சூழலில் ஒட்டி உறவாட முடியாத நிலை ஏற்படுகிறது. மொழி மற்றும் பண்பாடு வேறுபடுவதால் இப்படி ஏற்படுகிறது. இதன் காரணமாக, அநத மாநில அரசியலில் மக்கள் சக்தி ஒன்றுபட்டுத் திரண்டெழ முற்படுகையில், இந்த வெளியார் அதற்குத் தடையாக மாறுகிறார்கள். தாங்கள் குடியேறிய மாநிலத்தின் மொழியும், பண்பாடும் பேணிப் பாதுகாக்கப் படுவதில் அக்கறை யற்றவர்களாகவும் அமைகிறார்கள். மலேசியாவின் நிலைமை வேறு. அங்கே விடுதலை பெற்ற பின் பெரும்பான்மையினர் ஜனநாயகத்தைப் புறக்கணித்துவிட்டு சிறுபான்மைத் தமிழரை ஒடுக்குகின்றனர். இங்கே இந்தியாவில் பல்வேறு மொழிவழி மாநிலத்தவர் அகில இந்திய ஆதிக்கச் சக்திகளுக்கெதிரான போராட்டத்தில் உள்ளனர். ஆதிக்கச் சக்திகளே மொழிவழி அடையாள அரசியலை முறியடிக்க வேறுபட்ட மொழி பேசும் ஏழை எளியோரைப் பயன்படுத்த முனைந்துள்ளனர். இந்த வெளியார் தாம் குடியேறிய மாநிலத்தவரின் உரிமைப் போராட்டத்தில் அக்கறை காட்டுவதில்லை என்பதோடு கூட அகில இந்திய ஆதிக்கத்தின் வாக்குவங்கிகளாகவும் செயல்படுகிறார்கள்.

உழைக்கும் மக்களின் போராட்டங்களை முறியடிக்க, காலங்காலமாக உடைமைவாதிகள் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்திவந்துள்ளார்கள் என்பது வரலாற்று உண்மை. முன்னாளில் தஞ்சைவட்டார மிட்டா மிராசுகள் தங்கள் பகுதியின் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளிகளை அடக்கி ஒடுக்கவும், கூலியைக் குறைக்கவும் வேண்டி இராமநாதபுரம் போன்ற தென்மாவட்ட ஏழைகளை இறக்குமதி செய்வதும், காரியம் முடிந்ததும் விரட்டிவிடுவதும் நடைமுறையாக இருந்துள்ளது. அதே முறையை மொழிவழிமாநிலச் சக்திகளை ஒடுக்குவதற்குப் பயன்படுத்துகிறார்கள் இந்திய மேல்தட்டினர். "பெருமுதலாளிகள் இந்தியா முழுவதிலும் கட்டற்ற முறையில் வேட்டையாடலாம்", என்பதை மறைத்துவிட்டு "ஏழை எளியோர் எந்த மாநிலத்திலும் சென்று உழைத்துப் பிழைக்கலாம்" என்பதை முன்நிறுத்தி ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஏழைகள் தங்கள் மொழிவழிச் சமூகத்திலேயே உழைத்து வாழ வழி செய்தாக வேண்டும் என்பதே ஜனநாயகக் கோரிக்கை. அதற்குப் பதிலாக அவர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாங்குவங்கி அடிமைகளாக, ஆதிக்க விளையாட்டின் பகடைக்காய்களாக மாற்றப் பார்க்கிறார்கள்.

இந்திய மக்களின் அடிப்படைத் தேவை மொழிவழி (மாநில) அடையாள மும் அதன் வழி அரசியல் அதிகாரமும். குறிப்பாக ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இது உயிராதாரமான தேவை.

ஆனால் இந்த மொழிவழி அடையாளத்துக்கு எதிராக இந்தியன் என்ற இல்லாத ஒன்றை அடையாளத்தை முன்வைக்கிறது "இந்து" வகையறா.

இந்த அகில இந்திய அடை யாளந்தான் என்ன என்று ஆராய்ந்தால் அது இந்திய குபேரர்களின் அடை யாளமாகவும், ஆங்கிலம், இந்தி இவற்றின் மூலம் தம்மை ஆதிக்க நிலைக்கு உயர்த்திக் கொண்டிருக்கும் மேல்நடுத்தரவர்க்கத்தின் அடை யாளமாகவும், மேற்கத்திய-இந்துத்துவ கலவைக் கலாச்சாரத்தின் அடையாளமாகவும் உள்ளது.

இந்த ஆதிக்க அடையாளத்துக்கு எதிரான மொழிவழி, மக்கள் சார்ந்த அடையாள அரசியலை இந்திய மேல்தட்டினர் அடியோடு வெறுக்கிறார்கள். அதுகுறித்து அவதூறு பரப்புகிறார்கள். இந்த வெறுப்பும், அச்சமும் ஈழப்பிரச்சினையில் தெளிவாக வெளிப்படுகின்றன. இப்போது திபெத் பிரச்சினையிலும் வெளியாகியுள்ளன. இதே 26-3-08 தேதியிட்ட இந்து ஏட்டின் தலையங்கமும் இதற்கு எடுத்துக்காட்டு துணைத் தலையங்கம் ஏதுமின்றி மிக நீளமாக அமைந்துள்ள இத்தலையங்கம் "திபெத் பிரச்சினை" என்று தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. திபெத் மக்களின் மொழிவழித் தேசிய உரிமையை சீனா தன் காலின் கீழ்ப்போட்டு மிதித்து நசுக்கிவைத்திருப்பதை இந்த "இந்து" தலையங்கம் முழுமையாக ஆதரித்துள்ளது.


இந்து கூறுகிறது:-சீனத்தின் ஆட்சியில் திபெத் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.

இந்து மறைக்கிறது:-திபெத் வளர்ச்சியின் பயனை அனுபவித்துவருபவர்கள் திபெத்தில் குடியேறியுள்ள பெரும் எண்ணிக்கையிலான சீனர்கள்.

இந்து கூறுகிறது:-திபெத் மாநிலத்தில் வாழும் திபெத்தியர் எண்ணிக்கை 26 இலட்சம்தான். மொத்த திபெத்தியர்களோ 65 லட்சம் பேர் அதாவது திபெத்தியர்களில் 100க்கு 60 பேர் சீனாவின் பிற மாநிலங்களில் வசிக்கிறார்கள். எனவே அவர்கள் வாழும் சீன மாநிலங்களைப் பிரித்து திபெத்துடன் இணைத்துத் தருமாறு சீனத்திடம் கோருவது தவறு. ஏனெனில் அது சீனாவின் அரசியல் அமைப்பபை பாதிப்பதாக அமையும்.

இந்து மறைப்பது:-சீனத்தின் சமூக அமைப்பு உண்மையான சோசலிச முறையன்று. அங்கே அரசும் பெருமுதலாளித்துவமும் கைகோர்த்து இயங்கி வருகின்றன. அரசியலில் எந்த உரிமையும் யாருக்கும் கிடையாது. இம் என்றால் சிறைவாசம, ஏன் என்றால் வனவாசம் நிலைமைதான். இந்நிலையில் திபெத் அவர்கள் கையில் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை எவரும் எளிதில் ஊகிக்கலாம். திபெத்துக்குள் சீன ஹான் இனத்தவரைத் திட்டமிட்டுக் குடியமர்த்துவதும், திபெத்தியர்களைப் பிழைப்புக்காக அண்டை மாநிலங்களில் சென்று அடையாளமிழந்து வசிக்கச் செய்வதும் அரசின் முக்கிய கொள்கைகளாக இருந்து வந்திருக்கின்றன. (இந்திய மேல்தட்டு இப்படிப்பட்ட மக்கள் குடியேற்றக் கொள்கையைத்தான் நுட்பமாகக் கடைப்பிடித்துவருகிறது).

இப்போது திபெத்தியர்களின் தாயகத்தை மறுசீரமைப்புச் செய்வதென்றால் அதில் எந்தப் பெரிய தடையும் இல்லை. யார் இந்த அலங்கோல நிலையை ஏற்படுத்தினார்களோ அவர்களே செய்துவிடமுடியும். அதற்கான அதிகாரம் அவர்களிடம் உள்ளது. ஆதிக்க ஆசை மட்டுமே தடுக்கிறது.

இந்தப் பின்னணியில் இந்து பத்திரிகை இந்திய அரசுக்குப் பரிந்துரை செய்கிறது:- திபெத் பிரச்சினையில் சீனத்துக்குத் துணையாகச் செயல்படுங்கள். (சிங்கள அரசுக்குத் துணை போவதிலும் இந்துக்கு இதே நிலைப்பாடுதான்.)

இதே தேதியிட்ட இந்து நாளேட்டின் 12-ம் பக்கத்தில் ஒரு செய்தியை மகிழ்ச்சியோடு வெளியிட்டிருக்கிறார்கள்.

லீ ஜின்ஜுன். இவர் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக் குழுவில் முக்கிய பொறுப்பு வகிப்பவர். இவர் காங்கிரஸ் கட்சித் தலைமை நிலையத்துக்கு நேரில் சென்று பேசியிருக்கிறார். 1988ல், அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி சீனத்திற்கு வந்ததை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகத் தங்கள் கட்சி கருதுவதாகவும் அந்த நிகழ்வின் 20-ஆம் ஆண்டுவிழாவை சீனக்கட்சி கொண்டாட விருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அந்நிகழ்வுக்கு வரும் இந்தியப் பிரதிநிதிகளின் தலைவராக ராகுல்காந்தி வந்து சிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

1988ல் ராஜீவ் சீனாவுக்குச் சென்று "வரலாற்று முக்கியத்துவமிக்க" முறையில் உறவாடியபோது இங்கே ஈழப்பிரச்சினையில் இந்திய அரசு வரலாற்றுத் தவற்றைச் செய்துகொண்டிருந்தது. இப்போது மீண்டும் இந்திய அரசு அதே தவற்றைச் செய்து வருகையில் சீனமும் திபெத்தில் "வரலாறு" படைத்திருக்கிறது.

இந்துவோ எல்லாம் ஏழைகளைக் காப்பாற்றத்தான் நடக்கிறது என்றும் உரிமைகளை விட்டுக்கொடுத்து விட்டால் வளர்ச்சி நிச்சயம் என்றும், வளர்ச்சி அதிகரித்தால் ஆளுக்குக் கொஞ்சம் பிட்டுப்பிட்டு வீசுவோம், பொறுக்கிக் கொள்ளலாம என்றும் சத்தியம் செய்கிறது. ஆனால்-ஈழத்தவரும், திபெத்தியர்களும், இந்தியாவின் மொழிவழி மாநில ஜனநாயகவாதிகளும் பொறுக்கித் தின்னும் முடிவில் இல்லை.

Thursday, April 3, 2008

பேரணிக்கு "மழையின் காரணமாகத் தடை!"

பேரணிக்கு "மழையின் காரணமாகத் தடை!" கலைஞரின் அரசு கண்டுபிடித்த புதிய காரணம்!

22-03-08 அன்று மாலை 4 மணிக்கு சென்னை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்திய அரசுக்கு எதிராக நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அரசு தடைவிதித்தது அனைவரும் அறிந்ததாகும்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள்-மாநாடுகளுக்கு தி.மு.க. அரசு தடைவிதிக்கும் போது எல்லாம் சொல்லாத புதிய காரணத்தை இப்போது கண்டுபிடித்துச் சொல்லியுள்ளது. காவல்துறை ஆணையாளர் அளித்துள்ள தடை ஆணையில் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது.

"கடந்த இரு நாட்களாக தொடர்ந்து அதிக அளவு மழை பெய்து வருவதாலும் மேலும் வலுவான மழைபெய்ய சாத்தியக்கூறுகள் உள்ளதாலும் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி அதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்துப் பிரச்னையும் மற்றும் அதன் தொடர்பால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க வேண்டியதாலும், மேலும் மனுதாரர் கோரியுள்ள இடம் அனுமதிக்கப்பட்ட இடமாக இருப்பினும் மேற்படி மழையின் காரணமா ஏற்பட்ட பிரச்சினையில் 22-03-08 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க இயலாத சூழ்நிலை உள்ளது மேலும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத் சமூக விரோதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தின் போது மறைமுகமாக ஊடுருவி சட்டம் ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தி அதன் மூலம் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் உள்ளது எனவே மேற்கூறிய காரணங்களால் மனுதாரர் 22-03-08 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ள மனுவானது நிராகரிக்கப்படுகிறது."

மழையை காரணமாக காட்டி ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதிக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதன்முறையாகும். மழைபெய்தால் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் தாமாகவே முன்வந்து அதை ஒத்திவைப்பதுதான் வழக்கம். ஆனால் கருணையே வடிவமான கலைஞரின் அரசு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் மழையில் நனைந்துவிடக்கூடது என அதிகமான அக்கரையை எடுத்துக்கொண்டு அவர்களின் நலன்காக்க தடைவிதித்துள்ளது.

மழைக் காலத்தில் மழை காரணமா தடை, இனி வெயில் காலத்தில் வெயிலின் காரணமாகத் தடை, பனிக்காலத்தில் பனிகாரமாகத் தடை, இனி வெயிலோ, மழையோ, பனியோ இல்லாத காலத்தில்தான் நாம் நிகழ்ச்சிகள் நடத்தவேண்டியிருக்கும். அரசியல் கட்சிகள் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தும்போது அதற்குரிய பாதுகாப்பு கொடுப்பது காவல்துறையினரின் நீங்காத கடமையாகும். ஆனால் சென்னை மாநகர காவல்துறையோ சமூக விரோதிகளின் ஊடுருவலை தன்னால் தடுக்க முடியாது என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு அதன் காரணமாக ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்துள்ளது.

நல்ல அரசு! நல்ல காவல் துறை!!

Monday, March 3, 2008

இன்று கொசோவா நாளை தமிழீழம் - பழ. நெடுமாறன்

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு 1946ஆம் ஆண்டில் ஆறுதேசிய இனங்கள் ஒன்று சேர்ந்து யூகோசுலேவியா குடியரசு உருவாக்கப்பட்டது. இந்நாடுகளை ஆக்கிரமித்து இருந்த செர்மானிய இராணுவத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய மார்சல் டிட்டோவின் முயற்சியினால் யூகோசுலேவியா பிறந்தது என்றுதான் சொல்லவேண்டும். அவரது ஆளுமையின் விளைவாக இந்நாடு உருவாக்கப்பட்டாலும் இந்த ஆறு தேசிய இனங்களின் உணர்வுகள் மங்கிவிடவில்லை. மார்சல் டிட்டோ மரணத்திற்குப் பிறகு ஒவ்வொரு தேசிய இனமும் தங்களது தனித்தன்மையையும் இறைமையையும் நிலைநாட்ட முயன்று வெற்றி பெற்றன.

1991ஆம் ஆண்டில் சுலோவேனியா, மாசிடோனியா, குரேசியா ஆகியவை தனி நாடுகளாகத் தங்களை அறிவித்துக்கொண்டு யூகோசுலேவியா குடியரசிலிருந்து பிரிந்து சென்றன.

1992ம் ஆண்டு போசுனியா விடுதலை முழக்கம் செய்தது. எஞ்சிய செர்பியா, மான்டோனக்ராஆகியவை மடடுமே யூகோசுலேவியாவில் நீடித்தன. ஆனால் 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செர்பியாவிலிருந்து கொசோவா பிரிந்து தன்னைத் தனி நாடாக அறிவித்துக் கொண்டது.

இதற்கு முன்னோடியான வரலாற்றினை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 1913ஆம் ஆண்டில் அல்பேனிய மக்களைப் பெரும்பாலும் கொண்ட கொசோவா செர்பியாவுடன் இணைக்கப்பட்டது. செர்பியர்கள் செர்பியன் மொழியைப் பேசும் தனி தேசிய இனத்தவர். மதத்தால் கிறித்தவர்கள். கொசோவாவில் வாழும் மக்களில் பெரும்பாலோர் அல்பேனியன் மொழி பேசுபவர்கள். மதத்தால் முசுலிம்கள். எனவே, செர்பிய தேசிய இன மக்களுக்கும் அல்பேனிய தேசிய இன மக்களுக்குமிடையே மோதல்கள் வெடித்தன. செர்பிய நாட்டிற்குள் தன்னாட்சி அதிகாரம் படைத்த ஒரு மாநிலமாக கொசோவோ விளங்கியது. ஆனால் செர்பிய அரசு அந்த தன்னாட்சி அதிகாரத்தை இரத்து செய்தது. தங்கள் உரிமை மறுக்கப் பட்டதைக் கண்டித்து கொசோவோ மக்கள் போராடினார்கள். செர்பிய இராணுவம் கொசோவா மக்களைத் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாக்கியது. சுமார் 10 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன.

1999ஆம் ஆண்டில் இந்த படுகொலைக்கு எதிராக உலக நாடுகள் தலையிட்டன. செர்பிய அரசு நிர்வாகத்திலிருந்து கொசோவா விடுவிக்கப்பட்டு ஐ.நா.வின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

ஐ.நா. போர்க் குற்றவாளிகள் நீதிமன்றம் செர்பிய குடியரசுத் தலைவர் சுலோபோடான் மிலேசெவிக் மீது திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தியதாகக் குற்றம் சாட்டியது.

1999ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் 1244இன் கீழ் கொசோவா ஐ.நா.வின் கீழ் பாதுகாப்புக்கு உட்பட்ட ஒரு பகுதி என அறிவிக்கப்பட்டது. எனவே, கொசோவாவின் விடுதலைப் பிரகடனம் என்பது ஏற்கப்பட முடியாதது என செர்பியாவும் மற்றும் சில நாடுகளும் கூறுகின்ற வாதத்தில் எத்தகைய சத்தும் இல்லை. கொசோவா பிரச்சனை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சர்வதேச ஆணைக்குழு அங்கு நேடோ படைகள் தலையிட்டது சட்ட விரோதமானது என்று கூறியது. ஆனால் மிலோசேவிக் ஆட்சியின்போது பெருமளவில் கொசோவா மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படு கொலைகளையும் அட்டுழியங்களையும் தடுத்து நிறுத்தி ஐ.நா. பாதுகாப்புக் குழு தலையிட்டது சர்வதேச சட்டப்படி சரியானதே என்றும் அரசியல் சட்ட அறிஞர்கள் கருதுகிறார்கள்.

கொசோவாவின் விடுதலை அறிவிப்பிற்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள பிரிட்டன், பிரான்சு, செர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் அதே வேளையில் ஸ்பெயின், கிரீசு, பல்கேரியா, உருசியா, சீனா, பிலிப்பைன்சு போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


ஸ்பெயின் நாட்டிலுள்ள லொகடேனியா பகுதி மக்கள் தனி நாடு கேட்டுப் போராடி வருகிறார்கள். அதைப்போல தெற்கு பிலிப்பைன்சில் வாழும் முப்பது இலட்சத்திற்கு மேற்பட்ட இசுலாமியர்கள் விடுதலைக்காகப் போராடி வருகிறார்கள். கிரீசு, சைப்ரசு போன்ற நாடுகளிலும் தேசிய இனப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உருசியாவிலுள்ள சிறுபான்மை தேசிய இனங்களும் போராடி வருகின்றன. சீனாவிலுள்ள மங்கோலியர்கள், திபெத்தியர்கள் ஆகியோரும் தங்கள் தனித்தன்மையை நிலைநிறுத்தப் போராடி வருகிறார்கள். ஆகவே, தங்கள் நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய இனப் போராட்டங்களை கொசோவா விடுதலை முழக்கம் விரைவுபடுத்தி விடும். எனவே, அதை அங்கீகரிக்க இந்த நாடுகள் மறுத்து வருகின்றன.

இதற்கிடையில் ஐ.நா. பேரவையின் பொதுச்செயலாளா பான்-கீ-மூன் பின்வருமாறு அறிவித்துள்ளார். "கொசோவா தனி நாடு அறிவிப்பு சட்டவகையில் சரியானதா அல்ல தவறானதா என்பதை என்னால் கூற இயலாது. ஆனால் கொசோவா நாட்டின் அறிவிப்பை உலக நாடுகள் பல வரவேற்று உள்ளன. செர்பிய அதிபரிடம் அமைதி காக்கும் படியும், எந்தவிதமான வேண்டாத நிகழ்வுகள் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டுள்ளேன். கொசோவா நாட்டுக்கு முழு ஆதரவினை ஐ.நா. வழங்கும் கொசோவாவின் அறிவிப்பு குறித்து ஐ.நா. பாதுகாப்புக் குழு விரைவில் ஆய்வு செய்யும்."

இந்தியாவின் நிலைப்பாடு

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி மற்றும் பிரேசில் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் செல்சோ அமோலைன் ஆகியோர் பிப்ரவரி இருபதாம் தேதியன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் "செர்பியாவிலிருந்து பிரிந்து கொசோவா தனி நாடாக அறிவித் துக் கொண்டதை ஏற்றுக்கொள்கிறோம். அதே வேளையில், அதிலுள்ள சட்டச் சிக்கல்கள் மற்றும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்" என்று அறிவித்துள்ளனர். இந்தியாவின் இந்த அறிவிப்பு பிற ஆசிய நாடுகளையும் கொசோவாவை ஏற்கும்படி தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்களர் எதிர்ப்பு

ஆனால் கொசோவா மக்களின் விடுதலைப் பிரகடனத்தைக் கண்டு சிங்கள அரசு நடுக்கம் அடைந்துள்ளது. இது குறித்து அந்த அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: "கொசோவா தன்னிச்சையாக வெளியிட்டுள்ள விடுதலைப் பிரகடனம் சமாளிக்க முடியாத அளவுக்கு சர்வதேச உறவுகளில் நெருக்கடியை ஏற்படுத்தும். பல்வேறு நாடுகளில் இறையாண்மைக்கு இந்த பிரகடனம் அறைகூவல் விடுத்துள்ளது. இதன் மூலம் உலக அமைதிக்கும் பாதுாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் செர்பிய நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஒப்புதல் இல்லாமல் கொசோவா தனிநாடு பிரகடனம் செய்து இருப்பதை நாங்கள் கண்டிக்கிறோம்."

சிங்கள அரசின் இந்த அறிவிப்பு பெரும் நகைப்புக்கிடமானது. ஒரு நாட்டிலுள்ள பெரும்பான்மை தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களின் சம்மதம் இல்லாமல் அந்நாட்டில் வாழும் சிறுபான்மை தேசிய இனத்தவர் பிரிந்து செல்லக் கூடாது என்ற புதிய தத்துவத்தைச் சிங்கள அரசு வெளியிட்டுள்ளது. பெரும்பான்மை தேசிய இனத்தின் மேலாதிக்கப் போக்குக்கு எதிராகத்தான் சிறுபான்மை தேசிய இனம் விடுதலை பெறப்போராடுகிறது என்ற அடிப்படை உண்மையைக்கூட உணராமல் சிங்களர் உள்ளனர்.

இந்த தத்துவத்தின்படி பார்த்தால் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை இந்துக்களின் ஒப்புதல் இல்லாமல் பாகிசுதான் தனி நாடானது தவறு என்று ஆகிவிடும். அதைப் போல பாகிசுதானில் வாழும் பெரும்பான்மை மக்களின் சம்மதம் இல்லாமல் வங்காள தேச மக்கள் பிரிந்து சென்றதும் தவறு என்று ஆகிவிடும். அதுமட்டுமல்ல 1983ஆம் ஆண்டில் சைப்ரசு நாட்டின் வட பகுதியில் வாழ்ந்த துருக்கி இனத்தவர் அந்நாட்டின் பெரும்பான்மை இனத்தவரான கிரேக்க இனத்தைச் சேர்ந்தவர்களின் சம்மதம் இல்லாமல் பிரிந்து சென்றதும் தவறாகிவிடும். 1993ஆம் ஆண்டு எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியா பிரிந்து சென்றதும் இதன் அடிப்படையில் தவறாகிவிடும். 2002ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலிருந்து கிழக்கு தைமூர் பிரிந்து சென்றதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகிவிடும். இத்தகைய அபத்தமான வாதத்தைச் சிங்கள அரசு முன்வைப்பதற்கு அடிப்படைக் காரணமே கொசோவாவின் விடுதலைப் பிரகடனம் தமிழீழத்தின் விடுதலைப் பிரகடனத்திற்கு முன்மாதிரியாக ஆகிவிடக்கூடாது என்ற பதற்றமே ஆகும்.

கொசோவாவில் வாழும் அல்பேனிய மக்கள் தனித் தேசிய இனம் என்பதை உலகறியச் செய்துள்ளனர். ஐ.நா. அதை ஏற்றுக்கொண்டுள்ளது. அதைப்போல இலங்கை வடக்கு-கிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்கள் தனித் தேசிய இனத்தவர் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். எனவே தான் சிங்கள தேசிய இனத்தவரும் தமிழ்த் தேசிய இனத்தவரும் கூடிப்பேசி இந்த பிரச்சனையை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. சிங்களரும் தமிழரும் தனித்தனி தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்நாடுகள் உணர்ந்து இருந்த காரணத்தினாலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தி வருகின்றன. உலகம் பூராவிலும் அந்தந்த தேசிய இன மக்கள் தங்களுக்கு என்று ஒரு நாட்டையும் இறைமையும் உள்ள அரசையும் அமைத்துகொள்வதை ஐ.நா. பிரகடனமே வரவேற்கிறது. இந்த சூழ்நிலையில் கொசோவா மக்களின் தனி நாடு பிரகடனம் என்பது ஐ.நா. பட்டயத்தில் கூறப்பட்டுள்ளதற்கு ஏற்றதே ஆகும். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, செர்மனி, இந்தியா போன்ற நாடுகள் இதை ஏற்றுக் கொண்டிருப்பதற்கும் இதுவே அடிப்படைக் காரணமாகும். எனவே இன்று கொசோவா நாளை தமிழீழம் என்ற நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சிங்களப் பேரினவாத அரசு இதற்கு எதிராகப் புலம்புகிறது.

அரசியலில் இரட்டை அணுகுமுறைகளும் நேர்மாறன கொள்கைகளும் உள்ளன என்பது வெளிப்பட்டு உள்ளது. கொசோவாவில் விடுதலைப் பிரகடனத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, செர்மனி, இந்தியா போன்ற நாடுகள் அதைப்போன்ற தமிழீழப் பிரச்சனையில் எதிர்மாறான கொள்கையைக் கொண்டுள்ளன என்பது ஏன்? கொசோவாவுக்குச் சுதந்திரம் வழங்கப்படுவதன் மூலமே அந்த பகுதியில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்ற யதார்த்தமான உண்மையை அமெரிக்கா முதலான நாடுகள் உணர்ந்து இருப்பதன் விளைவாகவே அதற்கு அங்கீகாரம் தர முன்வந்துள்ளன.

அதைப் போலவே, இந்துமாக்கடல் பகுதியில் அமைதி நிலவ வேண்டுமானால் அதற்கு தமிழீழ விடுதலையை அங்கீகரிப்பதன் மூலமே அது சாத்தியம் ஆகும் என்பதை உலக நாடுகள் உணரவேண்டும். எனவே, சிங்கள இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பாகிசுதான் போன்ற நாடுகள் ஒரு சார்பான நிலை எடுத்து சிங்களப் பேரினவாதப் போக்கினை ஊக்குவிக்கும் வகையில் அந்த அரசுக்கு ஆயுதங்களை யும் பணத்தையும் அள்ளி அள்ளித் தருகின்றன. இந்துமாக்கடல் பகுதியில் ஆயுதங்கள் குவிக்கப்படுவதையும் இராணுவ ரீதியான தலையீடுகளையும் எதிர்க்க வேண்டிய இந்திய அரசு வாய்மூடி மெளனம் சாதிப்பது மட்டுமல்ல போட்டி போட்டிக்கொண்டு சிங்கள பேரினவாத அரசுக்கு ஆயுத உதவிகளை அளித்திருக்கிறது. சின்னஞ்சிறிய நாடான இலங்கையில் ஆயுதங்கள் குவிக்கப்படுவது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து மட்டுமல்ல இந்துமாக் கடல் பகுதியையே இராணுவ மோதல்களுக்குரிய களமாக மாற்றிவிடும். அப்பகுதியில் அமைதி சீர்குலையும். இந்த உண்மையை அமெரிக்க முதலிய நாடு களும் இந்தியாவும் எண்ணிப் பார்க்க வேண்டும். எண்ணிப் பார்க்கத் தவறுவார் களேயானால் இந்துமாக்கடல் பகுதி போர்க்களமாக மாறும் என்பதில் ஐயமில்லை.


விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு பொறுப்புணர்வும் தொலைநோக்கப் பார்வையும் அதிகம் இருக்கிற காரணத்தினால் இந்தியாவுக்கு எதிரான நாடுளிடம் எந்த உதவிகளும் பெறவிரும்பவில்லை. அப்படிப் பெறுவதன் மூலம் இந்தியாவுக்கு அறைகூவல் விடுக்கவும் அவர்கள் முயலவில்லை. ஆனால் சிங்கள அரசு இந்தியாவுக்கு எதிரான நாடுகளிடம் ஆயுத உதவி உள்ளிட்ட எல்லாவகை உதவிகளையும் பெற்றுக்கொள்கிறது. இந்தியாவின் பகைவர்கள் தனக்கு நண்பர்கள் என சிங்கள அரசு கருதுகிறது. தன்னை அடித்தளமாகக் கொண்ட இந்துமாக்கடல் பகுதியைப் போராட்டக்களமாக்க மேற்கு நாடுகளும் சீனா, பாகிசுதான் போன்ற நாடுகளும் முயல்கின்றன என்பது நன்கு தெரிந்தே சிங்கள அரசு அவர்களுடன் கரம் கோத்து நிற்கிறது. இந்த நிலைப்பாடு என்பது இறுதியில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடாக மாறும் என்பது சிங்கள அரசுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் அதே வேளையில் இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனிடமிருந்தும் ஆயுத உதவி உள்பட எந்த உதவியும் பெறுவதற்கு முயலுவதற்கோ அல்லது அது குறித்து எண்ணிப் பார்க்கக் கூட இதுவரை புலிகள் முன்வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். இத்தகைய உதவிகளைப் பெறுவது எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எதிரான போராட்டத்தில் தங்களை இறக்கிவிட்டுவிடும் என்பதையும் இந்துமாக்கடல் பகுதி அன்னிய அரசு களின் போராட்டக்களம் ஆக்கப்பட்டு விடும் என்பதையும் அவர்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே தான் அவர்கள் தங்கள் வலிமையையும் உலகத் தமிழர்களின் உதவியையும், ஆதரவை யும் மட்டுமே நம்பிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மையை எவ்வளவு விரைவில் இந்தியா உணருகிறதோ அவ்வளவுக்கு நல்லது. இல்லையென்றால் வேண்டாத விளைவுகள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது. கொசோவா விடுதலைப் பிரகடனத்தை மேற்கு நாடுகள் ஆதரிக்க முன்வந்திருப்பதன் அடிப்படையே ஐரோப்பாவில் மீண்டும் ஒரு போர் சூழல் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான். இதே அடிப்படை தமிழீழத்திற்கும் பொருந்தும்.

Thursday, February 21, 2008

இந்தியப் பெருமுதலாளிகளுக்கு வலை விரிக்கும் சிங்கள அரசு

இந்திய அரசை தன்பால் முழுமையாக ஈர்ப்பதற்கு சிங்கள அரசு இடைவிடாது முயற்சி செய்துவருகிறது. இலங்கையில் உள்ள தமிழர்களைக் கொன்று குவிக்கும் தனது இனஒழிப்புத் திட்டத்திற்கு இந்திய அரசு குறுக்கே வந்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு மாய்மாலங்களை அது செய்கிறது.

இந்தியப் பெருமுதலாளிகளை இலங்கையில் தொழில்தொடங்க முன்வருமாறு சிங்கள அரசு அழைப்புக்குமேல் அழைப்பு விடுத்து வருகிறது. இந்த அழைப்பினை ஏற்று இத்திட்டம் குறித்துப் பேசுவதற்காக மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேசு என்பவர் தலைமையில் உயர் அதிகாரிளை கொண்ட குழு ஒன்று இலங்கை வர இருக்கிறது என சிங்கள அரசு அறிவித்துள்ளது.

இந்தக் குழுவுடன் இந்தியப் பெருமுதலாளிகளான ரிலையன்சு, மகிந்திரா, பிர்லா, வர்த்தமான், அரவிந்த், இந்திய எண்ணெய் நிறுவனம் போன்றவற்றின் பிரதிநிதிகளும் செல்ல இருக்கிறார்கள்.

இந்தியா-இலங்கைக்கு இடையே சுங்கத்தீர்வையற்ற வணிக உடன்பாடு ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கு இலங்கை முதலீட்டு வாரியம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

ஏற்கனவே இலங்கையில் கறுப்புக் கார்பன் ஆலையை ரூபாய்.480 கோடி செலவில் அமைக்க ஆதித்தியா பிர்லா குழுமம் முன்வந்துள்ளது.

சிங்கள பேரினவாத அரசு இந்தியப் பெருமுதலாளிகளுக்கு விரித்துள்ள இந்த வலைப்பின்னலுக்குப் பின்னே ஆழமான நோக்கம் உள்ளது. இந்திய தொழில்-வணிக நிறுவனங்கள் இலங்கையில் நிறுவப்பட்ட பிறகு தங்கள் தொழிலையும், வணிகத்தையும் பாதுகாக்கவும் பெருக்கிக்கொள்ளவும், இந்தியப் பெருமுதலாளிகள் விரும்புவார்கள. அப்போது அவர்கள் மூலம் இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்துத் தனக்கு ஆதரவாகத் திருப்பிக்கொள்ள முடியும் என சிங்கள அரசு கருதுகிறது. அதன் காரணமாகவே இந்திய முதலாளித்துவக் கும்பலுக்கு சிங்கள அரசு இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்க முற்பட்டுள்ளது.

Saturday, February 9, 2008

அமைதிக்கு எதிரி இராசபக்சே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் குற்றச்சாற்று

இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிக்கு ராஜபக்சே அதிபராக உள்ள இலங்கை அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று இங்கிலாந்து அமைச்சர் குற்றம் சாற்றியுள்ளார்.

இலங்கை இனச்சிக்கலைத் தீர்க்க அங்கு வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஹிம்ஹாவல் வலியுறுத்தியுள்ளார். இலங்கை இனச்சிக்கலைத் தீர்ப்பதற்கான அமைதி ஏற்படுத்தும் முயற்சிக்கு உதவவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் விவாதம்

இலங்கை இனச்சிக்கல் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பல்வேறு கட்சியினரும் பங்கேற்றுப் பேசினார்கள். இலங்கை இனச்சிக்கலைத் தீர்க்க இங்கிலாந்து தலையிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அதற்கு விடையளித்து வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் ஹிம் ஹாவல் ஆற்றிய உரை:

போர் மூலம் எதையும்சாதிக்க இயலாது இலங்கையில் போர்நிறுத்த உடன்பாட்டை ராஜபக்சே அரசு கைவிட்டிருப்பது கவலை அளிக்கிறது. இதனால் இலங்கை மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவே செய்யும். போர் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது என்பதை இலங்கை அரசு உணரவேண்டும். இதே செய்தியை விடுதலைப்புலிகளுக்கும் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறாம். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படாமல் பாதுகாப்பதற்காகக் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க இங்கிலாந்து ஆதரவளிக்கும்.

இங்கிலாந்து தயாராக உள்ளது

இலங்கை இனச்சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கான அமைதி முயற்சியில் ஈடுபட இங்கிலாந்து அரசு எப்போதும் தயாராகவே உள்ளது. இலங்கை அரசு இப்போது அழைத்தாலும் அமைதி முயற்சியில் ஈடுபடத் தயாராக உள்ளோம். ஆனால் இலங்கை அரசில் உள்ள சிலர் இங்கிலாந்தின் தலையீட்டை விரும்புவதில்லை. அவர்கள் எதார்த்த நிலையை உணராமல் இங்கிலாந்தை எதிர்க்கின்றனர். இலங்கை இனச்சிக்கலில் இங்கிலாந்து தலையிட்டால் அது அமைதியை ஏற்படுத்துவதற்காக மட்டுமே இருக்கும்; வேறு எந்த நோக்கமும் இங்கிலாந்துக்கு இல்லை.

தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமை

தமிழர்களின் போராட்டத்திற்குக் காரணம் அவர்களுக்குப் போதிய அதிகாரம் அளிக்கப்படாததுதான். அவர்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதன் மூலம், இலங்கை இனச்சிக்கலை எளிதில் தீர்க்கலாம். தனி மாநிலங்களை ஏற்படுத்தி அதிகாரப் பகிர்வு வழங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இது போதுமானதல்ல. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய மாநில அரசு அமைத்துத் தரப்படவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இலங்கை அதிபர் ராஜபக்சே துணிவுடன் மேற்கொள்ள வேண்டும். அதற்கு மற்ற நாடுகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக்கட்சிக் குழுவில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்க்காதது மிகப்பெரிய குறையாகும். இன்னும் ஒரு வாரத்திற்குள் அக்குழு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை வழங்க உள்ளது. அக்குழுவின் பரிந்துரைகள் சிறுபான்மை யினரான தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும வகையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஹிம்ஹாவல் பேசினார்.

பாலஸ்தீன மக்களுக்காகக் கண்ணீர்! தமிழீழ மக்களிடம் பாராமுகம்

பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதிக்கு எதிராக இஸ்ரேல் பொருளாதாரத் தடை நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதை இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மிகக்கடுமையாகக் கண்டித்துள்ளது. "காசா பகுதியில் வாழும் 15 இலட்சம் மக்களை பட்டினிபோட்டுப் பணிய வைக்க இஸ்ரேல் செய்யும் முயற்சி சர்வதேச சட்டங்களுக்கும் மனித நேய நடைமுறைகளுக்கும் எதிரானது. ஏகாதிபத்திய அரசுகளைவிட மிகமோசமான முறையில் இஸ்ரேல் நடந்துகொள்கிறது என அக்கண்டனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, January 15, 2008

புலிகளுக்குத் தடை-ஒரு மாபெரும் தவறு

புலிகளுக்குத் தடை-ஒரு மாபெரும் தவறு
சவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் கருத்து

"கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெரும் தவறு செய்து விட்டன" எனத் தில்லியைச் சேர்ந்த பேராசிரியர் பி.சகாதேவன் கூறியுள்ளார்.

சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தென் ஆசிய ஆய்வு மையத் திற்குத் தலைவராக இவர் உள்ளார். இவர் எழுதியுள்ள கட்டுரை குறித்து கொழும்புவில் உள்ள தென் அமெரிக்க நாடு ஒன்றின் தூதுவர் ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார்: "பேராசிரியர் சகாதேவன் வெளியிட்டுள்ள கருத்துகள் துணிகரமானது என்பது மட்டுமல்ல இந்திய பாதுகாப்புத் துறை அமைப்பு களும் மேற்கத்திய ஆய்வுக் குழுக்களும் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு முற்றிலும் மாறானதுமாகும் பேராசிரியர் சகாதேவன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப் பிட்டுள்ளார்: நார்வே பிரதிநிதிகள் மேற் கொண்ட அமைதிக்கான முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்த காரணத்தால் முழுமையாகத் தோல்வி அடைந்து விட்டன. சர்வதேச சமூகம் முன்வந்து சிங்களருக்கும் தமிழருக்கும் இடையே சமரசம் ஏற்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் போது இலங்கையின் உள்நாட்டில் எதிர்ப்பு ஏற்படலாம். ஆனால் ஐரோப்பாவிலுள்ள சனநாயகச் சக்திகள் அதை சமாளிக்கும் திறன் பெற்றவை. விருப்பு வெறுப்பற்ற அரசி யல் ரீதியான அணுகுமுறை கடைப் பிடிக்கப்பட வேண்டும். தென் இலங்கையில் அதாவது சிங்களவர் களுக்கு நடுவே அமைதி முயற்சிக்கான கருத்தொற்றுமை உருவாக வேண்டும்.
விடுதலைப் புலிகளைக் குறித்து சர்வதேச சமூகம் சரியாகப் புரிந்து கொண்டுள்ளதா என்பது ஐயத்திற் குரியது. தமிழீழ இலட்சியத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அமைப்பு அது. அதற்காகத் தன்னை முழுமையாகத் தியாகம் செய்து கொள்வதற்கும் அது துணிந்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைமை எத்தகைய சமரசத்திற்கும் சுலபத்தில் பணிந்துவிடாது.


அமைதிக்கான சமரச முயற்சி யின் போது ஒரு தரப்பினரை நிர்ப்பந்தப் படுத்தலாம். ஆனால் அந்தத் தரப்பைத் தண்டிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் நேர்மாறான விளைவுகள் ஏற்பட்டு விடும். விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதித்தது சமரச முயற்சிகளைப் பலி வாங்கி விட்டது. இதன் விளைவாக சமரச முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. இந்த நடவடிக்கை தவிர்க்கக் கூடியது என ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் சில நாடுகள் கருதுகின்றன. விடுதலைப் புலிகளின் மீது வல்லரசு நாடுகள் சில மேற்கொண்ட நிர்ப்பந்த முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு அந்நாடுகள் கைக்கொண்ட ஒரு சார்பான அணுகுமுறையே காரணமாகும். புலிகளை நிர்ப்பந்தப்படுத்திய இந்த வல்லரசுகள் சிங்கள அரசை நிர்ப்பந்தப் படுத்துவதில் தவறிவிட்டன.
சர்வதேச சமூகம் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரில் யாரிடமும் ஒரு சார்பாக நடந்து கொள்வதோ அல்லது ஒருவருக்கு எதிராக மற்றொரு வருக்குச் சாதகம் காட்டுவதோ சமரச முயற்சிகளை சந்தேகத்திற்குரியதாக ஆக்கி செயல்பட முடியாததாக்கி விடும்.

"தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும்" பேரழிவைத் தடுப்பது எப்படி?
விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்துவதும் அதற்கு எதிராக சிங்களருக்கு இராணுவ ரீதியான உதவிகளை சர்வதேச சமூகம் செய்வதும் புலிகளையும் அவர்களுக்கு ஆதரவான மக்களையும் தனிமைப்படுத்திவிடும். மேலும் புலிகளும் தமிழ் மக்களும் நிலைமையை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு ஆளாக்கிவிடும். புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப் பைக் கேள்விக்குறி ஆக்கிவிடும். இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடுவே உள்ள இடைவெளி என்பது நிலைமையைச் சீராக்குவதில் பெரும் முட்டுக் கட்டையாக விளங்கும். பாக் சலசந்தியின் இரு பக்கமும் வாழும் தமிழர்களைச் சினம் கொண்ட மக்களாக மாற்றுவது இந்தியாவின் பாதுகாப்புக்கு நல்லதல்ல. 1949ஆம் ஆண்டு யாழ்ப் பாணத்திலிருந்து வெளிவந்த "இந்து சாதனம்" என்னும் தமிழ்ப் பத்திரிகை தனது வைரவிழாவைக் கொண்டாடியது. 1889ஆம் ஆண்டு ஆறுமுக நாவலரால் இந்தப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகையின் துணை நிறுவனமான யாழ் இந்து கல்லூரித்
திடலில் விவேகானந்தருக்கும் மகாத்மா காந்திக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் வைர விழாவிற்கு இந்திய இலங்கை கவர்னர் செனரல்கள் வாழ்த்து அனுப்பினார்கள். இலங்கை சுதந்திரம் பெற்று ஓராண்டிற்குப் பின் நடைபெற்ற இந்த விழாவிற்கு இந்தியா வின் கவர்னர் செனரல் வாழ்த்துச் செய்தி அனுப்பியது என்பது மிக முக்கிய மானதாகும். இலங்கைத் தமிழர்களை இந்தியா எப்படி மதிக்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.


இலங்கை விடுதலை பெற்ற அன்று இந்திய வம்சாவழித் தமிழர்கள் அதிகமாக இருந்தனர். இந்தியாவின் மீது மிகுந்த அனுதாபம் கொண்ட அவர்களை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து இந்தியாவின் மற்றும் தென் ஆசியாவின் பாதுகாப்பு நலன்களுடன் இணைந்து செயல்படுமாறு செய்திருக்கமுடியும். ஆனால் இந்திய அரசு சிங்களத் தலைவர்களை தாசா செய்யும் நடைமுறைக்கு ஒவ்வாத வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடித்தது. அத னால் சிங்களத் தலைவர்களும் இந்தியா வைச் சந்தேகத்துடனும் வெறுப்புடனும் பார்த்தார்கள்.


1950களிலும் 1960களிலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது கீழ்க்கண்ட முக்கியமான அம்சங்களைக் கொண்டிருந்தது. அணிசேராக் கொள்கையும் சீனாவைக் குறித்த அணுகுமுறையுமே அவையாகும். இதற்கு இலங்கையின் ஆதரவை இந்தியா நாடியது. இதற்குப் பதிலாகத் தங்கள் தமிழர் விரோதப் போக்குக்கு இந்தியா ஆதரவு தரவேண்டும் என இலங்கைத் தலைவர்கள் வற்புறுத்தித் தங்கள் விருப்பத்தினை நிறைவேற்றிக் கொண்டனர். இதன் விளைவாக 1949ஆம் ஆண்டு இந்திய வம்சா வழியினர் குடியுரிமையை சிங்கள அரசு பறித்தது. 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டுமே இலங்கையின் ஆட்சி மொழி என்ற சட்டத்தை நிறைவேற்றியது. 1983ஆம் ஆண்டில் தமிழருக்கு எதிரான இனக் கலவரத்தை நடத்தியது. 1954ஆம் ஆண்டிலும் 66ஆம் ஆண்டிலும் இந்திய வம்சாவழி மக்களை நாடு கடத்துவது என்ற ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு இந்தியா கையெழுத்திட்டது. 1972ஆம் ஆண்டு இலங்கை சிங்கள புத்த நாடு எனப் பிரகடனம் செய்யும் அரசியல் சட்டத்தை நிறைவேற்றியது.

சிங்களத் தலைவர்களின் தாளத்திற்கு இந்தியா ஆடியது. இந்தியாவின் மீது மிகுந்த நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்த இலங்கைவாழ் தமிழ் மக்களின் நலன்களைப் பலி கொடுக்க இந்தியா தயங்கவில்லை. சிங்கள மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தனது உண்மை யான கூட்டாளியான தமிழர்களை இந்தியா கைவிட்டது. ஆனால் சிங்களத் தலைவர்கள் ஒரு போதும் இந்தியாவுக்கு நன்றியுடன் இல்லை.

இலங்கை சீனாவுக்கு முக்கிய மான இடம் கொடுத்துக் கெளரவித்தது. வங்காள தேசத்தின் போராட்டத் தின்போது பாகிசுதான் உளவு விமானங் கள் இலங்கைக்குப் பறந்து வந்து பெட்ரோல் போட்டுக்கொள்ள இலங்கை அனுமதித்தது. இலங்கையைத் தாசா செய்யும் இந்தியாவின் கொள்கையில் 1980களின் தொடக்கத்தில் ஒரே ஒருமுறை மாற்றம் ஏற்பட்டது. பிரதமர் இந்திராகாந்தியின் காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு வலுவான காரணங்கள் இருந்தன.

1977ஆம் ஆண்டு இலங்கையில் செயவர்த்தனாவின் ஆட்சி நடைபெற்ற போது அவரின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கை என்பது இந்தி யாவின் நலன்களுக்கு எதிராக அமைந் தது. 1977 மற்றும் 1983ஆம் ஆண்டு களில் தமிழர்களுக்கு எதிராக நடை பெற்ற இனப் படுகொலைக்கு எதிராகத் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கிய நிகழ்ச்சி கண்ட தில்லி பதட்டம் அடைந்தது. ஆரம்ப காலத்திலேயே தமிழ்ப் போராளிகளையும் சிங்கள அரசையும் கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் இந்திராகாந்தி முடிவு செய்தார். இலங்கையை இரு நாடுகளாகப் பிரிப்பதற்கு இந்திராகாந்தி ஒருபோதும் ஆதரவாக இல்லை. ஆனால் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப் படும் அரசியல் தீர்வுக்கு இலங்கை அரசை சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்ப் போராளி களுக்கு உதவ முன் வந்தார். இம்முயற்சி தோற்குமானால் ஒரு தீர்வைக் கொண்டு வர அங்கு இந்தியா தலையிடுவது நியாயமானது என்ற எண்ணம் உருவாகும். பல்வேறு போராளிகளுக்கும் அவர் உதவினார். அதற்கு நோக்கம் இருந்தது. இதற்கான முயற்சிகள் முற்றுப் பெறும் கட்டத்தில் 1984ஆம் ஆண்டு நவம்பரில் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டார்.

நடைபெறாத நிகழ்ச்சிகள் குறித்து தீர்ப்புக் கூற வரலாற்றுத் துறையால் இயலாது. ஆனாலும் இந்திராகாந்தி உயி ரோடு இருந்திருப்பாரேயானால் தென் ஆசிய நலன்களுக்கு ஏற்ற வகையில் இலங்கை இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்பட்டிருக்கக் கூடும். சிங்கள அரசோ அல்லது போராளிகுழுக்களோ தென் ஆசிய நலன்களுக்கு அப்பால் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு வலிமை பெற்றி ருக்கவில்லை. வல்லரசுகளுக்கிடையே மறைமுகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. தென் ஆசியாவின் காவல்காரனாக இந்தியா செயல்பட்ட நேரமும் அதுதான்.

இந்திராகாந்திக்குப் பின்னால் பிரதமர் பொறுப்பை ஏற்ற அவரது மகன் இராசீவ் காந்தி தனது தாயார் தவறான கொள்கையைக் கையாண்டதாகவும் அவரது ஆலோசகர்கள் அவருக்கு தவறான ஆலோசனையை வழங்கியதாக வும் நினைத்தார். ஆனால் இது உண் மைக்கு முற்றிலும் மாறானதாகும். உண்மையில் அவர் தான் அவருடைய ஆலோசகர்களால் தவறாக வழி நடத்தப்பட்டார்.

இலங்கை அரசிடமிருந்து பணம் பெறுவோர் பட்டியலில் இந்திய உளவுத் துறை அதிகாரிகள், வெளியுறவு அதிகாரி கள் இருந்தார்கள் என அப்போது குற்றம் சாட்டப்பட்டது.

இராசீவ்காந்தி அரசின் வெளியுறவுக் கொள்கை உருப்படாத கொள்கை என்பதை முதன்முதலாக விடுதலைப் புலிகள் உணர்ந்தனர். மற்ற போராளிக் குழுக்கள் உணரவில்லை. எனவே புலிகள் மாற்று நடவடிக்கைகளுக்கு திட்டம் தீட்டினர். 1985ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தென் ஆசியாவுக்கு வெளியே உள்ள பல நாடுகளில் விடுதலைப் புலிகள் தங்கள் அலுவலகங் களைத் திறந்தனர். இசுரேல் நாட்டில் பயிற்சி பெறத் தங்கள் உறுப்பினர்களைப் புலிகள் இயக்கம் அனுப்பி வைத்தது. ஆனால் அதே நேரத் தில் சிங்கள இராணுவத்திற்கும் இசுரேல் பயிற்சி அளித்தது என்ற உண்மை பின்னால் தெரிய வந்தது. முதன்முதலாக இந்தியா வுக்கும் தென்ஆசியாவுக்கும் வெளியே இந்த பிரச்சினை கொண்டு செல்லப் பட்டது.
1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படை இலங்கைக்கு அனுப்பப் பட்டது தவறான காலம் தாழ்ந்த நடவடிக்கை ஆகும் 1984ஆம் ஆண்டு க்கும் 1987ஆம் ஆண்டுக்கும் இடையே செயலற்றுப் போன இந்தியாவின் கொள்கை மீது பல போராளி இயக்கங்கள் தங்கள் நம்பிக்கையை இழந்து விட்டன. விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றிலு மாக விலகி நின்று மற்ற போராளி இயக்கங்களைவிட வலிமையில் விஞ்சி நின்றது. போட்டி போராளி இயக்கங் களையும் அரசியல் கட்சித் தலைவர் களையும் விடுதலைப் புலியினர் கட்டுப்படுத்த அல்லது அப்புறப்படுத்த முடிந்தது. சிங்கள இராணுவம் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளின் விளைவாக வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்த மக்களும் சர்வதேச நாடுகளிடையே இதற்கான எதிரொலியை ஏற்படுத்தினார்கள்.


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கையெழுத்திடப்பட்ட உடன்பாடு இந்தச் சூழ்நிலையில் நிலைமையைச் சமாளிப்பதற்குரியதாக இல்லை. தமிழர்களுக்கு இந்தியா அளிப்பதற்கு முன்வந்தவை போதுமானவையாகவும் இல்லை. இந்தியா வாக்களித்த மிகச் சொற்பமானவற்றைக் கூட சிங்கள அரசியல்வாதிகள் நிறைவேற்ற முன்வர வில்லை. இந்தியாவின் சார்பில் பிரச்சினையைச் சந்திக்க அனுப்பப்பட்ட வர்களும் திறமையற்றவர்களாக இருந் தார்கள். மீண்டும் ஒரு முறை சிங்களத் தலைவர்கள் தாங்கள் சிறந்த இராசதந்திரி கள் என்பதை நிலைநாட்டி விட்டார்கள்.

தங்கள் மீது நம்பிக்கை வைத் திருந்த தமிழ் மக்களின் நலன்களைக் காக்க இந்தியா தவறிவிட்டது. 1987ஆம் ஆண்டில் தன்னால் தீர்க்கக் கூடிய அளவு இருந்த இனப் பிரச்சி னையைத் தீர்ப்பதற்கான வாய்ப்பு களையும் இந்தியா நழுவ விட்டுவிட்டது. தென் ஆசியப் பகுதியின் பாதுகாப்பைப் பொறுத்த வரையில் இந்தியா பெரும் இழப்புக்கு உரியதாக ஆயிற்று. ஆனால் தான் கொண்ட குறிக் கோளுக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதியாக நின்று எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாமல் தன் வழியே சென்றது. தங்களுடைய துயரங் களிலிருந்து தங்களை விடுவிக்கும்
வலிமை படைத்தவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே என நம்பிய தமிழர்கள் அனைவரும் அதற்குப் பேராதரவை அளித்தார்கள். இதன் மூலம் அதன் வலிமை பெருகிற்று.

ஆனால் இலங்கை இனப் பிரச்சினை இலங்கைக்குள்ளாகவே அல்லது தென் ஆசியாவுக்குள்ளாகவே தீர்க்கப்படாமல் போனதன் விளைவாக அது சர்வதேச அரசியல் சூழலில் சிக்கிக் கொண்டுள்ளது. இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பை நிறைவேற்ற சர்வதேச சமூகம் முன் வரவேண்டும் என வேண்டிக்கொண்டதில் விடுதலைப் புலிகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் அதே வேளையில் தங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விடுதலைப் புலிகள் கடமைப்பட்டுள்ளனர்.

ஆனால் இராணுவ ரீதியில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சிங்கள அரசுக்கு சர்வதேச சமூகம் உதவிகள் செய்து வருகின்றது. ஆனால் உலகில் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல் விடுதலைப் புலிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் விடுதலைப் புலிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவான மக்களுக்கும் நிலைமையை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இதன் விளைவு என்பது இந்தியாவின் பாதுகாப்புக்குப் பேரபாயமாக எதிர்காலத்தில் விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கையில் துன்பப்படும் மக்களுக்கு பேரழிவு ஏற்படாத வகையில் தடுக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு உண்டு. இந்தியாவும் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. சிங்கள அரசுகளுடன் செய்து கொண்ட இரகசிய உடன்பாடுகளும் இரகசிய உதவிகளும் வேண்டாத விளைவுகளையே தரும். இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளி என்பது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முட்டுக்கட்டையாக விளங்கும். பாக் சலசந்தியின் இரு புறமும் வாழும் தமிழர் களைக் கோபம் அடைய வைப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்றதல்ல.