Friday, August 14, 2009

இலங்கையில் சுமூக நிலையா? - கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

‘‘இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்த பிரச்னையை கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்’’ என முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை சுமூக நிலை என்று கருதுகிறாரா? அல்லது 3 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்தில்லாமல் தினமும் 200 பேருக்கு மேல் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அதை சுமூக நிலை என்று கருதுகிறாரா? தமிழர்களுக்கு என்று தனித் தாயகம் எதுவும் கிடையாது என்று கூறி தமிழர் பகுதிகளில் சிங்களரைக் குடியேற்றுவதைச் சுமூக நிலை என்று கருதுகிறாரா? எது சுமூக நிலை?

இவ்வளவு கொடுமைகள் இலங்கையில் நடந்துக் கொண்டிருக்கும் போது அதைக் கண்டித்து ஒரு வார்த்தை இது வரை சொல்லாதவர் இப்போது அங்கு சுமூக நிலை நிலவுகிறது என்று கூறுவதின் மூலம் இராசபக்சே நடத்தி வரும் அட்டூழியங்களை மறைப்பதற்குத் துணை செய்யும் வகையில் செயல்படுகிறார். கருணாநிதியின் இந்தத் துரோகத்தைத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.