Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Friday, August 14, 2009

இலங்கையில் சுமூக நிலையா? - கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

‘‘இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்த பிரச்னையை கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்’’ என முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை சுமூக நிலை என்று கருதுகிறாரா? அல்லது 3 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்தில்லாமல் தினமும் 200 பேருக்கு மேல் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அதை சுமூக நிலை என்று கருதுகிறாரா? தமிழர்களுக்கு என்று தனித் தாயகம் எதுவும் கிடையாது என்று கூறி தமிழர் பகுதிகளில் சிங்களரைக் குடியேற்றுவதைச் சுமூக நிலை என்று கருதுகிறாரா? எது சுமூக நிலை?

இவ்வளவு கொடுமைகள் இலங்கையில் நடந்துக் கொண்டிருக்கும் போது அதைக் கண்டித்து ஒரு வார்த்தை இது வரை சொல்லாதவர் இப்போது அங்கு சுமூக நிலை நிலவுகிறது என்று கூறுவதின் மூலம் இராசபக்சே நடத்தி வரும் அட்டூழியங்களை மறைப்பதற்குத் துணை செய்யும் வகையில் செயல்படுகிறார். கருணாநிதியின் இந்தத் துரோகத்தைத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.

Thursday, July 2, 2009

சிங்களருக்கு வெண்சாமரம் வீசும் கருணாநிதி - பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

‘ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகதான் அதைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது.’ என முதல்வர் கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்த இராஜபக்சேக்கும் அவருடைய கூட்டத்திற்கும் ஆத்திரமூட்டும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டுமென தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியிருக்கிறார். அதாவது உதைக்கிற காலுக்கு முத்தமிட வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறார்.

கன்னடர்களுக்கு கோபமூட்டாமல் காவிரிப் பிரச்னையிலும், மலையாளிகளுக்கு கோபமூட்டாமல் முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நீக்குப் போக்குடன் கருணாநிதி நடந்து கொண்டதினால்தான் அப்பிரச்னைகளில் தமிழகம் மிகப் பெரிய இழப்புகளுக்கு ஆளாக நேரிட்டது.

ஈழத் தமிழர் பிரச்னையிலும் காங்கிரசுக் கட்சிக்குக் கோபமூட்டி அதன் விளைவாக தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என்பதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அது மட்டுமல்ல, ‘தமிழீழத் தனி நாடு இனி சாத்தியமானது அல்ல. சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு வேண்டி சிங்களரிடம் மண்டியிட வேண்டு’மென்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார். ‘கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். திராவிட நாடு கொள்கையை தி.மு..க கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்த போது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது. எனவே முதலில் கட்சிதான் வேண்டுமென்று முடிவெடுத்ததாக’வும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.

பிரிவினைக் கேட்கும் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற சட்டம் கொண்டு வரப் படவில்லை. பிரிவினைக் கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு இச்சட்டம் தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கை குழி தோண்டி புதைக்கப்பட்டது. வரலாற்றுப் பூர்வமான இந்த உண்மையைத் திரித்து பேசுகிறார் கருணாநிதி.

30 ஆண்டு காலம் அற வழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள். எதுவுமே கிடைக்காத காலக்கட்டத்தில் ஆயுதம் தாங்கியப் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தார்கள். தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை. இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உலகத்தின் பல நாடுகள் இராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் அவருக்கு வெண்சாமரம் வீசும் வேளையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானதாகும். இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத் தமிழர் போராட்டம் குறித்து ஒரு தவறானக் கண்ணோட்டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றி பெறப் போவதில்ல. ஈழத் தமிழரின் மன உறுதி ஒரு போதும் தளரப் போவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் போரட்டங்களும் ஓயப் போவதில்லை.

Wednesday, April 29, 2009

ஆயிரக்கணக்கான மக்கள் கொலை - போர் நிறுத்தம் ஏற்படவில்லை

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை!

தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக அமுல் படுத்தப்படும் என முதலமைச்சர் கருணாநிதி நம்பிக்கைத் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் சிங்கள அரசு நேற்று பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி 5000-க்கும் மேற்பட்ட குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. ஆனால் இதை மழைக்குப் பின் ஏற்படும் தூவானமாக சொல்லி கருணாநிதி அலட்சியப்படுத்துகிறார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு தமிழக மக்களையும் ஏமாற்றுவதற்கு கருணாநிதி முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் முடிவுகளை இலங்கைத் தமிழர் பிரச்னை எந்த அளவிலும் பாதிக்காது என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார்.

அப்படியானால் தேர்தல் வேளையில் எதற்காக உண்ணாவிரதம் இருந்தார் என்பதையும் அவசரம் அவசரமாக உதவிப் பொருட்களை தேர்தல் வேளையில் இலங்கைக்கு அனுப்பி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது ஏன் என்பதையும் அவர் விளக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னைதான் மிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவோ அல்லது அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தவோ காங்கிரசுக் கட்சியின் தலைமையில் இயங்கும் மத்திய அரசு எதையும் செய்யவில்லை என்பதையும் மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு கருணாநிதி துணை நிற்கிறார் என்பதையும் தமிழக மக்கள் நன்கு புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எச்சரிக்கிறேன்.

Wednesday, January 28, 2009

ஈழத்திற்காக தன்னையே எரியூட்டிக் கொண்ட இளம் பத்திரிகையாளர்

முத்துக்குமார் என்ற இளம் பத்திரிகையாளர், இன்று காலை சென்னையில் உள்ள இந்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு தன்னை எரியூட்டிக் கொண்டார்.

ஈழச் சிக்கலில் இந்திய அரசின் நிலைப்பாட்டினை கண்டித்து முழக்கம் எழுப்பிய அவர்.. அதற்காக இந்திய அரசைக் கண்டித்து தான் தற்கொலை செய்வதாக முழக்கமிட்டுக் கொண்டே.. தன் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொண்டார்.
75 விழுக்காடு தீப்புண்கள் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு மிக ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Thursday, January 8, 2009

மன்மோகன் சிங்கிற்கு கருப்புக் கொடி 2000-க்கும் மேற்பட்டவர்கள் கைது

சென்னை சன 8: சிங்களப் பேரினவாத அரசுக்கு துணையாக ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் வழங்கி தமிழர்களின் இனப் படுகொலைக்கு ஆதரவாக இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக கருப்புக் கொடி காட்ட
முயன்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டிற்காக சென்னை வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அந்த வழியாக பயணிப்பதை ஒட்டி அவருக்கு அங்கு கருப்புக் கொடி காட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கோடு இன்று காலை 8 மணிக்கு சென்னை, சைதாப்பேட்டை அருகே பெண்கள், குழந்தைகள் உட்பட பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் கூடினர்.

மன்மோகன் சிங்கே திரும்பிப் போ!
இந்திய அரசே இலங்கைக்கு ஆயுத் தராதே!
சிங்களன் உனக்கு பங்காளியா தமிழன் உனக்கு பகையாளியா!
காங்கிரஸ் கைக்கூலி கருணாநிதியே ஒழிக!
தமழின விரோத காங்கிரசை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்!
விடுதலைப் புலிகளை ஆதரிப்போம்! பிரபாகரனை அதரிப்போம்!
தமிழீழத்தை அங்கீகரி!

என பல்வேறு முழக்கங்களை எழுச்சியுடன் எழுப்பினர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுவை,மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நெல்லை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தமிழின உணர்வாளர்கள் கொந்தளிப்போடு திரண்டிருந்தனர்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத்தின் ஆனூர் ஜெகதீசன், கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேச விடுதலைக் கட்சியின் தியாகு, அகில இந்திய சமதாக் கட்சி துணைத் தலைவர் குமரி நம்பி, பார்வர்டு பிளாக்கின் ஆனந்த முருகன், தமிழ்த் தேசப் மார்க்சியக் கட்சியின் இராசேந்திர சோழன், தமிழர் தன்னுரிமை இயக்கத்தின் பாவலர் இராமச்சந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் வைகறை, உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் மெல்கியோர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் கவிஞர் தமிழேந்தி, வாலாஜா வல்லவன், தலைநகர் தமிழ்ச்சங்கத்தின் உஞ்ஞை அரசன் மற்றும் தேனிசைச் செல்லப்பா, சந்திரேசன், பொன்னிறைவன், அற்புதம் அம்மாள் உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர்.

மன்மோகன் சிங் அவ்விடத்தை கடக்கும் நேரம் நெருங்கியவுடன் காவல்துறையினர் கூடியிருந்த அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 22 பேருந்துகளில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள 8 திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

Saturday, November 15, 2008

இது மென்பொருள் பொறியாளர்களின் தருணம்!

Thursday, October 16, 2008

ஜெயலலிதாவுக்குக் கண்டனம் பழ. நெடுமாறன் அறிக்கை

இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டுமென்று கேட்பதன் மூலம் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பதாக அ.தி.முக. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஈழத் தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து சிங்கள இராணுவம் நடத்தி வரும் கொடிய போரை உடனடியாக நிறுத்தி அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் இணைந்து கூட்டாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அதைத் திசைத் திருப்பும் வகையில் முதல்வரை மட்டுமே பிரித்துக் குற்றம் சாட்டுவது என்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

தங்கள் மக்களையும் தங்களையும் காப்பாற்றிக் கொள்ள விடுதலைப் புலிகளுக்கு வலிமை உண்டு என்பதை ஜெயலலிதா உணர வேண்டும். உலக நாடுகள் பலவும் சிங்கள அரசின் போர் வெறியைக் கண்டித்துள்ள வேளையில், கொஞ்சமும் மனித நேய உணர்வின்றி சிங்கள அரசுக்கு ஆதரவாகப் பேசுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன் இருந்தே தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவெறிப் படுகொலைகளைச் சிங்கள வெறியர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களிடமிருந்து தங்கள் மக்களைக் காப்பாற்றுவதக்றாகத்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள் என்ற வரலாற்று உண்மையைக் கூட உணராமல் ஜெயலலிதா பேசுவது வெட்கக் கேடானது.

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என ஜெயலலிதா வக்காலத்து வாங்குகிறார். பாகிஸ்தானில் உள்விவகாரத்தில் இந்திய அரசு இராணுவ ரீதியாகத் தலையிட்டு வங்க தேசம் சுதந்திர நாடாக உதவி புரிந்தது என்பதை ஜெயலலிதா உணராமல் போனது ஏன்?
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட்டு சிங்கள இராணுவத்திற்கு ஆயுதங்களை அள்ளித் தந்தும் உளவுத் தகவல்களை அளித்தும் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க உதவி புரியும் இந்திய அரசுக்கு அந்தப் போரை நிறுத்தும்படி கூற அதிகாரம் இல்லை என்று கூறுவது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

தமிழர்களுக்கு எதிரான இன வெறி அழிப்பை நடத்திக் கொண்டிருக்கும் இராபக்சேயின் ஊதுகுழலாக ஜெயலலிதா ஒலிக்கிறார். இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர் அண்டை நாட்டில் நடைபெறும் தமிழர் படுகொலைகளைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமல் தமிழ்ப் பகைவர்களின் கை பொம்மையாக மாறி செயல்படுவதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

Saturday, February 9, 2008

பாலஸ்தீன மக்களுக்காகக் கண்ணீர்! தமிழீழ மக்களிடம் பாராமுகம்

பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதிக்கு எதிராக இஸ்ரேல் பொருளாதாரத் தடை நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதை இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மிகக்கடுமையாகக் கண்டித்துள்ளது. "காசா பகுதியில் வாழும் 15 இலட்சம் மக்களை பட்டினிபோட்டுப் பணிய வைக்க இஸ்ரேல் செய்யும் முயற்சி சர்வதேச சட்டங்களுக்கும் மனித நேய நடைமுறைகளுக்கும் எதிரானது. ஏகாதிபத்திய அரசுகளைவிட மிகமோசமான முறையில் இஸ்ரேல் நடந்துகொள்கிறது என அக்கண்டனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.