Showing posts with label பழ.நெடுமாறன். Show all posts
Showing posts with label பழ.நெடுமாறன். Show all posts

Monday, November 23, 2009

உயிர்நீத்த தமிழர்களுக்காகத் தியாகத் தீபங்கள் ஏற்றுவீர்!

உயிர்நீத்த தமிழர்களுக்காகத் தியாகத் தீபங்கள் ஏற்றுவீர்! இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பழ.நெடுமாறன் வேண்டுகோள்

இலங்கையில் நடைபெற்றபோரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் வருகிற நவம்பர் 27ஆம் தேதியன்று தமிழகமெங்கும் அமைதி ஊர்வலங்களையும், அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்துமாறு அனைத்துத் தமிழர்களையும் வேண்டிக் கொள்கிறேன். அன்றிரவு தமிழர் வீடுகளில் தியாகத் தீபங்கள் ஏற்றி மறைந்தவர்களின் நினைவைப் போற்றுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

அத்துடன் இலங்கை இனவெறி அரசு முப்படை கொண்டு நடத்திய மூர்க்கத்தனமான போரில் குண்டடி பட்டு காயமடைந்து, உடல் உறுப்புகளையும், குடியிருப்புகளையும் இழந்து, இன்றும் சித்திரவதைக் கூடங்களில் அளவிட முடியாத கொடுமைகளை அனுபவித்து வரும் இலங்கைத் தமிழ் மக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் உறுதி ஏற்க வேண்டுகிறோம்.

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

Friday, August 14, 2009

இலங்கையில் சுமூக நிலையா? - கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

‘‘இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்த பிரச்னையை கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்’’ என முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை சுமூக நிலை என்று கருதுகிறாரா? அல்லது 3 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்தில்லாமல் தினமும் 200 பேருக்கு மேல் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அதை சுமூக நிலை என்று கருதுகிறாரா? தமிழர்களுக்கு என்று தனித் தாயகம் எதுவும் கிடையாது என்று கூறி தமிழர் பகுதிகளில் சிங்களரைக் குடியேற்றுவதைச் சுமூக நிலை என்று கருதுகிறாரா? எது சுமூக நிலை?

இவ்வளவு கொடுமைகள் இலங்கையில் நடந்துக் கொண்டிருக்கும் போது அதைக் கண்டித்து ஒரு வார்த்தை இது வரை சொல்லாதவர் இப்போது அங்கு சுமூக நிலை நிலவுகிறது என்று கூறுவதின் மூலம் இராசபக்சே நடத்தி வரும் அட்டூழியங்களை மறைப்பதற்குத் துணை செய்யும் வகையில் செயல்படுகிறார். கருணாநிதியின் இந்தத் துரோகத்தைத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.

Thursday, July 2, 2009

சிங்களருக்கு வெண்சாமரம் வீசும் கருணாநிதி - பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

‘ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகதான் அதைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது.’ என முதல்வர் கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்த இராஜபக்சேக்கும் அவருடைய கூட்டத்திற்கும் ஆத்திரமூட்டும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டுமென தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியிருக்கிறார். அதாவது உதைக்கிற காலுக்கு முத்தமிட வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறார்.

கன்னடர்களுக்கு கோபமூட்டாமல் காவிரிப் பிரச்னையிலும், மலையாளிகளுக்கு கோபமூட்டாமல் முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நீக்குப் போக்குடன் கருணாநிதி நடந்து கொண்டதினால்தான் அப்பிரச்னைகளில் தமிழகம் மிகப் பெரிய இழப்புகளுக்கு ஆளாக நேரிட்டது.

ஈழத் தமிழர் பிரச்னையிலும் காங்கிரசுக் கட்சிக்குக் கோபமூட்டி அதன் விளைவாக தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என்பதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அது மட்டுமல்ல, ‘தமிழீழத் தனி நாடு இனி சாத்தியமானது அல்ல. சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு வேண்டி சிங்களரிடம் மண்டியிட வேண்டு’மென்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார். ‘கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். திராவிட நாடு கொள்கையை தி.மு..க கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்த போது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது. எனவே முதலில் கட்சிதான் வேண்டுமென்று முடிவெடுத்ததாக’வும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.

பிரிவினைக் கேட்கும் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற சட்டம் கொண்டு வரப் படவில்லை. பிரிவினைக் கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு இச்சட்டம் தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கை குழி தோண்டி புதைக்கப்பட்டது. வரலாற்றுப் பூர்வமான இந்த உண்மையைத் திரித்து பேசுகிறார் கருணாநிதி.

30 ஆண்டு காலம் அற வழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள். எதுவுமே கிடைக்காத காலக்கட்டத்தில் ஆயுதம் தாங்கியப் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தார்கள். தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை. இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உலகத்தின் பல நாடுகள் இராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் அவருக்கு வெண்சாமரம் வீசும் வேளையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானதாகும். இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத் தமிழர் போராட்டம் குறித்து ஒரு தவறானக் கண்ணோட்டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றி பெறப் போவதில்ல. ஈழத் தமிழரின் மன உறுதி ஒரு போதும் தளரப் போவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் போரட்டங்களும் ஓயப் போவதில்லை.

Thursday, April 3, 2008

பேரணிக்கு "மழையின் காரணமாகத் தடை!"

பேரணிக்கு "மழையின் காரணமாகத் தடை!" கலைஞரின் அரசு கண்டுபிடித்த புதிய காரணம்!

22-03-08 அன்று மாலை 4 மணிக்கு சென்னை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்திய அரசுக்கு எதிராக நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அரசு தடைவிதித்தது அனைவரும் அறிந்ததாகும்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள்-மாநாடுகளுக்கு தி.மு.க. அரசு தடைவிதிக்கும் போது எல்லாம் சொல்லாத புதிய காரணத்தை இப்போது கண்டுபிடித்துச் சொல்லியுள்ளது. காவல்துறை ஆணையாளர் அளித்துள்ள தடை ஆணையில் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது.

"கடந்த இரு நாட்களாக தொடர்ந்து அதிக அளவு மழை பெய்து வருவதாலும் மேலும் வலுவான மழைபெய்ய சாத்தியக்கூறுகள் உள்ளதாலும் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி அதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்துப் பிரச்னையும் மற்றும் அதன் தொடர்பால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க வேண்டியதாலும், மேலும் மனுதாரர் கோரியுள்ள இடம் அனுமதிக்கப்பட்ட இடமாக இருப்பினும் மேற்படி மழையின் காரணமா ஏற்பட்ட பிரச்சினையில் 22-03-08 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க இயலாத சூழ்நிலை உள்ளது மேலும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத் சமூக விரோதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தின் போது மறைமுகமாக ஊடுருவி சட்டம் ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தி அதன் மூலம் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் உள்ளது எனவே மேற்கூறிய காரணங்களால் மனுதாரர் 22-03-08 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ள மனுவானது நிராகரிக்கப்படுகிறது."

மழையை காரணமாக காட்டி ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதிக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதன்முறையாகும். மழைபெய்தால் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் தாமாகவே முன்வந்து அதை ஒத்திவைப்பதுதான் வழக்கம். ஆனால் கருணையே வடிவமான கலைஞரின் அரசு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் மழையில் நனைந்துவிடக்கூடது என அதிகமான அக்கரையை எடுத்துக்கொண்டு அவர்களின் நலன்காக்க தடைவிதித்துள்ளது.

மழைக் காலத்தில் மழை காரணமா தடை, இனி வெயில் காலத்தில் வெயிலின் காரணமாகத் தடை, பனிக்காலத்தில் பனிகாரமாகத் தடை, இனி வெயிலோ, மழையோ, பனியோ இல்லாத காலத்தில்தான் நாம் நிகழ்ச்சிகள் நடத்தவேண்டியிருக்கும். அரசியல் கட்சிகள் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தும்போது அதற்குரிய பாதுகாப்பு கொடுப்பது காவல்துறையினரின் நீங்காத கடமையாகும். ஆனால் சென்னை மாநகர காவல்துறையோ சமூக விரோதிகளின் ஊடுருவலை தன்னால் தடுக்க முடியாது என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு அதன் காரணமாக ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்துள்ளது.

நல்ல அரசு! நல்ல காவல் துறை!!