Wednesday, April 29, 2009

ஆயிரக்கணக்கான மக்கள் கொலை - போர் நிறுத்தம் ஏற்படவில்லை

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை!

தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக அமுல் படுத்தப்படும் என முதலமைச்சர் கருணாநிதி நம்பிக்கைத் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் சிங்கள அரசு நேற்று பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி 5000-க்கும் மேற்பட்ட குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. ஆனால் இதை மழைக்குப் பின் ஏற்படும் தூவானமாக சொல்லி கருணாநிதி அலட்சியப்படுத்துகிறார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு தமிழக மக்களையும் ஏமாற்றுவதற்கு கருணாநிதி முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் முடிவுகளை இலங்கைத் தமிழர் பிரச்னை எந்த அளவிலும் பாதிக்காது என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார்.

அப்படியானால் தேர்தல் வேளையில் எதற்காக உண்ணாவிரதம் இருந்தார் என்பதையும் அவசரம் அவசரமாக உதவிப் பொருட்களை தேர்தல் வேளையில் இலங்கைக்கு அனுப்பி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது ஏன் என்பதையும் அவர் விளக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னைதான் மிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவோ அல்லது அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தவோ காங்கிரசுக் கட்சியின் தலைமையில் இயங்கும் மத்திய அரசு எதையும் செய்யவில்லை என்பதையும் மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு கருணாநிதி துணை நிற்கிறார் என்பதையும் தமிழக மக்கள் நன்கு புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எச்சரிக்கிறேன்.

Tuesday, April 21, 2009

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இலங்கையில் வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்த வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பணயக்கைதிகளாக முன்னிறுத்தி சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 2000 க்கும் மேற்பட்டத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3000 க்கும் மேற்பட்டத் தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். மக்கள் இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து கொத்துக் குண்டுகளை சிங்கள இராணுவம் வீசி வருகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஒரே நாளில் இவ்வளவு பெருந்தொகையான மக்கள் எந்த நாட்டிலும் படுகொலை செய்யப்பட்டதில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

ஐ. நா. பேரவை உட்பட உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தம் செய்புமாறு விடுத்த வேண்டுகோளை கொஞ்சமும் மதிக்காமல் சிங்கள் அரசு தமிழர்களை அடியோடு அழிக்க முயலுகிறது. 2000 க்கும் மேற்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்ததை மறைக்கவும் திசை திருப்பவும் பிரபாகரன் இருப்பிடத்தை சுற்றி வளைத்து விட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறது. 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக மக்கள் துணையுடன் போராடி வரும் விடுதலைப்புலிகள் தங்கள் போராட்டத்தை வெற்றிகரமாக தொடர்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.

இந்த மனிதப் பேரழிவைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு முன் வராததைக் கண்டிக்கும் வகையிலும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற வகையிலும் வருகிற ஏப்ரல் 24 ந் தேதி வெள்ளிக்கிழமையன்று மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை தமிழகமெங்கும் கறுப்புக்கொடி ஊர்வலங்களை நடத்துமாறும் சரியாக 6 மணிக்கு அனைவரும் ஒன்று கூடி அமைதி அஞ்சலி செலுத்துமாறும் வேண்டிக்கொள்கிறேன். அமைதி அஞ்சலி செலுத்தும் வேளையில் சகலப் போக்குவரத்தையும் நிறுத்தி அவரவர்கள் இருந்த இடத்திலிருந்தும் வீடுகளில் இருப்போர் வீட்டுக்குள்ளேயும் ஐந்து நிமிட நேரம் அஞ்சலி செலுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.

Sunday, April 12, 2009

தேர்தல் தோல்வி பயத்தில் போர் நிறுத்தம் பற்றி பேசுகிறார் சிதம்பரம் - பழ. நெடுமாறன் அறிக்கை

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்யும். இல்லாவிட்டால் செய்யாது என இராஜபக்சேயின் இறுமாப்புக் குரலில் சில வாரங்களுக்கு முன்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்துவிடும் என்ற அச்சத்தில் இப்போது வேறு குரலில் பேசுகிறார்.

இலங்கையில் இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென இந்திய அரசு இரு நாட்களுக்கு முன்பாகவே வேண்டுகோள் விடுத்திருப்பதாக சிவகங்கையில் நேற்று சிதம்பரம் கூறியுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சரோ பிரதமரோ எதுவும் கூறாமல் மவுனம் சாதிக்கும் நிலையில் ப. சிதம்பரம் திடீரென இவ்வாறு கூறுவதன் பின்னணி என்ன?

போர் நிறுத்தத்தில் இந்திய அரசுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் இலங்கைக்கு அளிக்கும் ஆயுத உதவி, நிதி உதவி ஆகியவற்றை உடனடியாக நிறுத்துவதாக அறிவிக்க வேண்டும். ஆனால் இரு நாட்களுக்கு முன்பாக இந்திய அரசு 5,800 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. அந்த பணத்தைக் கொண்டு சிங்கள அரசு ஆயுதங்களை வாங்கி தமிழர்களை கொன்று குவிக்கும் என்பதில் அய்யமில்லை. இந்த நிதி உதவியை நிறுத்தி வைக்க இந்திய அரசு தயாரா?

போர் நிறுத்தத்தில் இந்திய அரசுக்கு நம்பிக்கை இருந்தால் இலங்கை கடலில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய போர்க் கப்பல்களைத் திரும்பப் பெற வேண்டும். இவற்றையெல்லாம் இந்திய அரசு செய்தால் ஒழிய இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாது.

இந்திய அரசின் இந்த வேண்டுகோளுக்குப் பிறகும் இரு நாட்கள் மட்டுமே தாக்குதலை நிறுத்தப் போவதாக இராஜபக்சே அரசு அறிவிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இந்திய அரசு நடத்தும் நாடகத்தை ஒரு போதும் யாரும் நம்பப் போவதில்லை என்பதை சிதம்பரம் உணர வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவிற்கு இந்திய அரசு முக்கியமான பொறுப்பாகும். இந்த துரோகத்தின் விளைவை நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு அணி சந்திக்கும்.

Friday, April 10, 2009

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

""தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால் அவரைக் கெளரவமாக நடத்த வேண்டும்'' என முதல்வர் கருணாநிதி விடுத்திருக்கும் வேண்டுகோள் விஷமத்தனமானது. தீய உள்நோக்கம் கொண்டது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்திய, சீன, பாகிஸ்தான் நாடுகள் வாரி வழங்கியுள்ள நவீன ஆயுதங்களை ஏந்திப் போராடும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்தி வருகிறார்கள்.

நமது மக்களைக் காப்பாற்றப் போராடும் புலிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூறவோ அல்லது ஈழத்தமிழர்கள் மீது நச்சு வாயுக் குண்டுகளை வீசி கொடூரமாகக் கொலை செய்யும் சிங்கள வெறியர்களைக் கண்டிப்பதற்கோ இதுவரை முன்வராத கருணாநிதி அவர்களின் முதுகில் குத்துவதைப் போன்று பேசியிருப்பதைத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

கருணாநிதியின் விஷமத்தனமான விருப்பம் ஒரு போதும் நிறைவேறப்போவது இல்லை. பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகளும் ஈழத்தமிழர்களும் வெற்றி பெறப்போவது உறுதி. கருணாநிதி தன் வாழ்நாளிலேயே அதைக் காண்பார்.

இங்ஙனம்
பழ. நெடுமாறன்
தலைவர்