Saturday, May 17, 2008

புலிகளுக்கு எதிராக இந்தியா! பகத்சிங்கின் குடும்பத்தினர் எதிர்ப்பு

இந்தியாவின் மிகவும் ஈர்க்கப்பட்ட விடுதலை வீரரான பகத்சிங்கின் குடும்பத்தினர் இந்திய இராணுவம் இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங் ஆவார். இவரது மகன் மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அண்மையில் இதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய இராணுவ அதிகாரியாக தான் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதை எனது தந்தை விரும்பவில்லை. 'எனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இந்தியாவின் இந்த நடவடிக்கையை நியாயத்திற்காக போராடும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதினர்' என்கிறார் அவர்.

யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கு எதிரான போரில் சிறந்த பணி புரிந்தமைக்காக மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங்கிற்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் விழாவிற்கு அவரது தந்தை வர மறுத்துவிட்டார். 'அங்கீகரிக்கப்படாமலே போய்விட்ட பெரும் தியாகங்களை புரிந்தவர் களுக்கு எதிராக தன் மகன் போரிட்டதற்காக கெளரவிக்கப் படுவதை என் தந்தையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை' என்கிறார் அவர்.

பிரிட்டிசாரிடமிருந்து இலங்கை விடுதலை பெறுவதற்கு முந்தைய காலக்கட்டத்திலிருந்தே ஈழத் தமிழர்கள் இந்திய விடுதலை வீரர்கள் மீது பெரும் பற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் வீடுகளில் இந்திய விடுதலை வீரர்களின் படங்கள் மாட்டப் பட்டிருக்கும்.

கர்னல் கிட்டுவின் தந்தை ஒரு காந்தியவாதி. தன் மூத்த மகனுக்கு காந்தி என்றே பெயரிட்டார். அவர் வீட்டில் காந்தி, நேரு, திலகர் ஆகிய இந்திய தலைவர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. கிட்டு தன் பங்கிற்கு பகத்சிங்கின் படத்தையும் மாட்டினார். தளபதி பண்டிதரின் வீட்டில் பகத்சிங், நேதாஜி ஆகியோரின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 1980களில் 'சண்டே' ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணலில், தன்னை மிகவும் கவர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களில் பகத்சிங்கை முதன்மைப் படுத்தி கூறியிருந்தார். அத்தோடு நேதாஜியையும் குறிப்பிட்டிருந்தார்.

இன்றளவிலும் பாரதியின் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' போன்ற விடுதலைப் பாடல்கள் ஈழத்தில் பாடப்படுகின்றன. பழ. நெடுமாறன் அவர்கள் ஈழத்தில் செய்த முதல் சுற்றுப்பயணத்தின் ஒளிப்படத்திற்கு பிரபாகரன் 'சுதந்திர தாகம்' என்றே பெயரிட்டார். இந்த குறிப்பிட்ட பாடலின் அடிப்படையிலேயே 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்ற முழக்கம் அமைக்கப்பட்டது.

இந்த அளவிற்கு இந்திய விடுதலை வீரர்களை நேசித்த, தங்களவர்களாக நினைத்த ஈழத்தமிழர்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் தான் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. அதிலும் "உலகில் எந்த மூலையில் சுதந்திரப் போராட்டம் நடந்தாலும் அதனை ஆதரிப்பதே எங்கள் வெளியுறவுக் கொள்கை" என பிரதமராக தனது முதல் உரையிலேயே அறிவித்த ஜவகர்லால் நேருவின் பேரன் இராஜீவ் காந்தியின் காலத்தில் ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டது மிகக் கொடுமையானது.

விடுதலை வேட்கை கொண்ட ஒவ்வொருவரும், மானுட விடுதலையை வேண்டும் ஒவ்வொருவரும், உலகில் எங்கு விடுதலைப் போராட்டம் நடந்தாலும் அதற்கு ஆதரவாகவே நிற்பார்கள் என்பதற்கு பகத்சிங்கின் குடும்பத்தினரே சான்று.

தென்செய்திக்காக பூங்குழலி

Monday, May 5, 2008

சாதிவெறி மின்வேலி - சேரிக்கும் ஊருக்குமிடையே

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி மேற்கு நாடுகளுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே பங்கிடப் பட்டது. அப்போது பெர்லின் நகரில் ஒரு பகுதி சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப் பட்டது. மேற்கு நாடுகள் வசமிருந்த பகுதிக்கும் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதிக்கும் இடையே ஒரு சுவர் கட்டப்பட்டது. பெர்லின் நகர மக்கள் ஒருவருடன் மற்றொருவர் தொடர்பு கொள்வதை அந்த சுவர் தடுத்தது. ஜெர்மானிய மக்களின் வெறுப்புக்கு ஆளான பெர்லின் சுவர் 1995லிஆம் ஆண்டில் மக்களால் இடித்து தகர்க்கப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டில் சிற்றூர் ஒன்றில் பெர்லின் சுவர் ஒன்று எழுப்பப்பட்டு அதற்கு மேலாக மின் வேலியும் அமைக்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்துள்ளது.

நாட்டின் எல்லைகளில் மின்வேலிகள் அமைக்கப்படுவதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஊருக்கும் சேரிக்கும் இடையே மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் இதோ :

மதுரை மாவட்டத்தில் உள்ள உத்தபுரம் கிராமத்தில் 2000 தலித் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் இங்கு பிற சாதியினரைவிட எண்ணிக்கையில் அதிகம் உள்ளனர். தலித்துகளுக்கு எதிராக நீண்ட நாட்களாக சாதி வெறுப்பு இருப்பதால், பொதுப் பாதைகள் அனைத்தும் 600 மீட்டர் நீள சுவரால் தடுக்கப்பட்டிருக்கிறது,

இச்சுவர் 1990 முதலே இருக்கிறது. ஆனால் கடந்த 10 நாட்களாக இச்சுவரில் இரும்புக் கம்பிகள் மூலம் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது. தலித்துகள் சாதி இந்துக்களின் பகுதிக்குள் வருவதைத் தடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

தேநீர்க் கடைகளிலும் சமூகக் கூடங்களிலும், சுடு காடுகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் தலித்களுக்கு அனுமதி இல்லை. உத்தபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் மாரிமுத்து என்பவர் தலித் தான். அவர், இங்குள்ள தலித்கள் பொருளாதார ரீதியில் முன்னேறியும் அவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை என்று கூறுகிறார்.

கோயில் திருவிழாக்களின்போது தலித்துகள் அதில் பங்கேற்கவோ, தேர் வடம் பிடிக்கவோ அனுமதி இல்லை. பொது சொத்து ஆதாரங்களுக்கான அனைத்து உரிமைகளும் தலித்துகளுக்கு மறுக்கப்பட்டுள்ளன.

ஆதிக்க சாதி வெறியின் அடையாளமாகத் திகழும் உத்தபுரம் சுவரை இடித்துத் தகர்க்க தமிழ்த் தேசிய இன உணர்வாளர்கள் முன் வர வேண்டும். தமிழினத்திற்கு என்றும் அழியாத அவமானத்தை சாதி வெறியர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதை அகற்றித் தீர வேண்டியது நமது நீங்காதக் கடமையாகும்.