Monday, November 23, 2009

உயிர்நீத்த தமிழர்களுக்காகத் தியாகத் தீபங்கள் ஏற்றுவீர்!

உயிர்நீத்த தமிழர்களுக்காகத் தியாகத் தீபங்கள் ஏற்றுவீர்! இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பழ.நெடுமாறன் வேண்டுகோள்

இலங்கையில் நடைபெற்றபோரில் சிங்களப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் வருகிற நவம்பர் 27ஆம் தேதியன்று தமிழகமெங்கும் அமைதி ஊர்வலங்களையும், அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்துமாறு அனைத்துத் தமிழர்களையும் வேண்டிக் கொள்கிறேன். அன்றிரவு தமிழர் வீடுகளில் தியாகத் தீபங்கள் ஏற்றி மறைந்தவர்களின் நினைவைப் போற்றுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

அத்துடன் இலங்கை இனவெறி அரசு முப்படை கொண்டு நடத்திய மூர்க்கத்தனமான போரில் குண்டடி பட்டு காயமடைந்து, உடல் உறுப்புகளையும், குடியிருப்புகளையும் இழந்து, இன்றும் சித்திரவதைக் கூடங்களில் அளவிட முடியாத கொடுமைகளை அனுபவித்து வரும் இலங்கைத் தமிழ் மக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் உறுதி ஏற்க வேண்டுகிறோம்.

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

Friday, August 14, 2009

இலங்கையில் சுமூக நிலையா? - கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

‘‘இலங்கையில் இப்போது சுமூக நிலை ஏற்பட்ட விட்டப் பிறகும் கூட அந்த பிரச்னையை கிளறிவிட்டுக் கொண்டிருப்பவர்களை எனக்குத் தெரியும்’’ என முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கூறியிருப்பது தமிழர்கள் அனைவரையும் வேதனை அடைய செய்துள்ளது.

ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை சுமூக நிலை என்று கருதுகிறாரா? அல்லது 3 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி வதை முகாம்களுக்குள் முடக்கப்பட்டு உணவு, குடிநீர் மருந்தில்லாமல் தினமும் 200 பேருக்கு மேல் செத்துக் கொண்டிருக்கிறார்களே, அதை சுமூக நிலை என்று கருதுகிறாரா? தமிழர்களுக்கு என்று தனித் தாயகம் எதுவும் கிடையாது என்று கூறி தமிழர் பகுதிகளில் சிங்களரைக் குடியேற்றுவதைச் சுமூக நிலை என்று கருதுகிறாரா? எது சுமூக நிலை?

இவ்வளவு கொடுமைகள் இலங்கையில் நடந்துக் கொண்டிருக்கும் போது அதைக் கண்டித்து ஒரு வார்த்தை இது வரை சொல்லாதவர் இப்போது அங்கு சுமூக நிலை நிலவுகிறது என்று கூறுவதின் மூலம் இராசபக்சே நடத்தி வரும் அட்டூழியங்களை மறைப்பதற்குத் துணை செய்யும் வகையில் செயல்படுகிறார். கருணாநிதியின் இந்தத் துரோகத்தைத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.

Thursday, July 2, 2009

சிங்களருக்கு வெண்சாமரம் வீசும் கருணாநிதி - பழ.நெடுமாறன் கண்டனம்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

‘ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகதான் அதைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது.’ என முதல்வர் கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.

ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்த இராஜபக்சேக்கும் அவருடைய கூட்டத்திற்கும் ஆத்திரமூட்டும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டுமென தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியிருக்கிறார். அதாவது உதைக்கிற காலுக்கு முத்தமிட வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறார்.

கன்னடர்களுக்கு கோபமூட்டாமல் காவிரிப் பிரச்னையிலும், மலையாளிகளுக்கு கோபமூட்டாமல் முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நீக்குப் போக்குடன் கருணாநிதி நடந்து கொண்டதினால்தான் அப்பிரச்னைகளில் தமிழகம் மிகப் பெரிய இழப்புகளுக்கு ஆளாக நேரிட்டது.

ஈழத் தமிழர் பிரச்னையிலும் காங்கிரசுக் கட்சிக்குக் கோபமூட்டி அதன் விளைவாக தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என்பதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அது மட்டுமல்ல, ‘தமிழீழத் தனி நாடு இனி சாத்தியமானது அல்ல. சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு வேண்டி சிங்களரிடம் மண்டியிட வேண்டு’மென்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார். ‘கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். திராவிட நாடு கொள்கையை தி.மு..க கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்த போது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது. எனவே முதலில் கட்சிதான் வேண்டுமென்று முடிவெடுத்ததாக’வும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.

பிரிவினைக் கேட்கும் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற சட்டம் கொண்டு வரப் படவில்லை. பிரிவினைக் கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு இச்சட்டம் தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கை குழி தோண்டி புதைக்கப்பட்டது. வரலாற்றுப் பூர்வமான இந்த உண்மையைத் திரித்து பேசுகிறார் கருணாநிதி.

30 ஆண்டு காலம் அற வழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள். எதுவுமே கிடைக்காத காலக்கட்டத்தில் ஆயுதம் தாங்கியப் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தார்கள். தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை. இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உலகத்தின் பல நாடுகள் இராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் அவருக்கு வெண்சாமரம் வீசும் வேளையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானதாகும். இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத் தமிழர் போராட்டம் குறித்து ஒரு தவறானக் கண்ணோட்டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றி பெறப் போவதில்ல. ஈழத் தமிழரின் மன உறுதி ஒரு போதும் தளரப் போவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் போரட்டங்களும் ஓயப் போவதில்லை.

Wednesday, April 29, 2009

ஆயிரக்கணக்கான மக்கள் கொலை - போர் நிறுத்தம் ஏற்படவில்லை

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை!

தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக அமுல் படுத்தப்படும் என முதலமைச்சர் கருணாநிதி நம்பிக்கைத் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் சிங்கள அரசு நேற்று பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி 5000-க்கும் மேற்பட்ட குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. ஆனால் இதை மழைக்குப் பின் ஏற்படும் தூவானமாக சொல்லி கருணாநிதி அலட்சியப்படுத்துகிறார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு தமிழக மக்களையும் ஏமாற்றுவதற்கு கருணாநிதி முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் முடிவுகளை இலங்கைத் தமிழர் பிரச்னை எந்த அளவிலும் பாதிக்காது என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார்.

அப்படியானால் தேர்தல் வேளையில் எதற்காக உண்ணாவிரதம் இருந்தார் என்பதையும் அவசரம் அவசரமாக உதவிப் பொருட்களை தேர்தல் வேளையில் இலங்கைக்கு அனுப்பி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது ஏன் என்பதையும் அவர் விளக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னைதான் மிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவோ அல்லது அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தவோ காங்கிரசுக் கட்சியின் தலைமையில் இயங்கும் மத்திய அரசு எதையும் செய்யவில்லை என்பதையும் மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு கருணாநிதி துணை நிற்கிறார் என்பதையும் தமிழக மக்கள் நன்கு புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எச்சரிக்கிறேன்.

Tuesday, April 21, 2009

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இலங்கையில் வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்த வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பணயக்கைதிகளாக முன்னிறுத்தி சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 2000 க்கும் மேற்பட்டத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3000 க்கும் மேற்பட்டத் தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். மக்கள் இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து கொத்துக் குண்டுகளை சிங்கள இராணுவம் வீசி வருகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஒரே நாளில் இவ்வளவு பெருந்தொகையான மக்கள் எந்த நாட்டிலும் படுகொலை செய்யப்பட்டதில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

ஐ. நா. பேரவை உட்பட உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தம் செய்புமாறு விடுத்த வேண்டுகோளை கொஞ்சமும் மதிக்காமல் சிங்கள் அரசு தமிழர்களை அடியோடு அழிக்க முயலுகிறது. 2000 க்கும் மேற்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்ததை மறைக்கவும் திசை திருப்பவும் பிரபாகரன் இருப்பிடத்தை சுற்றி வளைத்து விட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறது. 25 ஆண்டுகாலத்திற்கு மேலாக மக்கள் துணையுடன் போராடி வரும் விடுதலைப்புலிகள் தங்கள் போராட்டத்தை வெற்றிகரமாக தொடர்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.

இந்த மனிதப் பேரழிவைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு முன் வராததைக் கண்டிக்கும் வகையிலும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்துகிற வகையிலும் வருகிற ஏப்ரல் 24 ந் தேதி வெள்ளிக்கிழமையன்று மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை தமிழகமெங்கும் கறுப்புக்கொடி ஊர்வலங்களை நடத்துமாறும் சரியாக 6 மணிக்கு அனைவரும் ஒன்று கூடி அமைதி அஞ்சலி செலுத்துமாறும் வேண்டிக்கொள்கிறேன். அமைதி அஞ்சலி செலுத்தும் வேளையில் சகலப் போக்குவரத்தையும் நிறுத்தி அவரவர்கள் இருந்த இடத்திலிருந்தும் வீடுகளில் இருப்போர் வீட்டுக்குள்ளேயும் ஐந்து நிமிட நேரம் அஞ்சலி செலுத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.

Sunday, April 12, 2009

தேர்தல் தோல்வி பயத்தில் போர் நிறுத்தம் பற்றி பேசுகிறார் சிதம்பரம் - பழ. நெடுமாறன் அறிக்கை

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்யும். இல்லாவிட்டால் செய்யாது என இராஜபக்சேயின் இறுமாப்புக் குரலில் சில வாரங்களுக்கு முன்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்துவிடும் என்ற அச்சத்தில் இப்போது வேறு குரலில் பேசுகிறார்.

இலங்கையில் இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென இந்திய அரசு இரு நாட்களுக்கு முன்பாகவே வேண்டுகோள் விடுத்திருப்பதாக சிவகங்கையில் நேற்று சிதம்பரம் கூறியுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சரோ பிரதமரோ எதுவும் கூறாமல் மவுனம் சாதிக்கும் நிலையில் ப. சிதம்பரம் திடீரென இவ்வாறு கூறுவதன் பின்னணி என்ன?

போர் நிறுத்தத்தில் இந்திய அரசுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் இலங்கைக்கு அளிக்கும் ஆயுத உதவி, நிதி உதவி ஆகியவற்றை உடனடியாக நிறுத்துவதாக அறிவிக்க வேண்டும். ஆனால் இரு நாட்களுக்கு முன்பாக இந்திய அரசு 5,800 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. அந்த பணத்தைக் கொண்டு சிங்கள அரசு ஆயுதங்களை வாங்கி தமிழர்களை கொன்று குவிக்கும் என்பதில் அய்யமில்லை. இந்த நிதி உதவியை நிறுத்தி வைக்க இந்திய அரசு தயாரா?

போர் நிறுத்தத்தில் இந்திய அரசுக்கு நம்பிக்கை இருந்தால் இலங்கை கடலில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய போர்க் கப்பல்களைத் திரும்பப் பெற வேண்டும். இவற்றையெல்லாம் இந்திய அரசு செய்தால் ஒழிய இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாது.

இந்திய அரசின் இந்த வேண்டுகோளுக்குப் பிறகும் இரு நாட்கள் மட்டுமே தாக்குதலை நிறுத்தப் போவதாக இராஜபக்சே அரசு அறிவிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இந்திய அரசு நடத்தும் நாடகத்தை ஒரு போதும் யாரும் நம்பப் போவதில்லை என்பதை சிதம்பரம் உணர வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவிற்கு இந்திய அரசு முக்கியமான பொறுப்பாகும். இந்த துரோகத்தின் விளைவை நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு அணி சந்திக்கும்.

Friday, April 10, 2009

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

""தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால் அவரைக் கெளரவமாக நடத்த வேண்டும்'' என முதல்வர் கருணாநிதி விடுத்திருக்கும் வேண்டுகோள் விஷமத்தனமானது. தீய உள்நோக்கம் கொண்டது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்திய, சீன, பாகிஸ்தான் நாடுகள் வாரி வழங்கியுள்ள நவீன ஆயுதங்களை ஏந்திப் போராடும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் நடத்தி வருகிறார்கள்.

நமது மக்களைக் காப்பாற்றப் போராடும் புலிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூறவோ அல்லது ஈழத்தமிழர்கள் மீது நச்சு வாயுக் குண்டுகளை வீசி கொடூரமாகக் கொலை செய்யும் சிங்கள வெறியர்களைக் கண்டிப்பதற்கோ இதுவரை முன்வராத கருணாநிதி அவர்களின் முதுகில் குத்துவதைப் போன்று பேசியிருப்பதைத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

கருணாநிதியின் விஷமத்தனமான விருப்பம் ஒரு போதும் நிறைவேறப்போவது இல்லை. பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகளும் ஈழத்தமிழர்களும் வெற்றி பெறப்போவது உறுதி. கருணாநிதி தன் வாழ்நாளிலேயே அதைக் காண்பார்.

இங்ஙனம்
பழ. நெடுமாறன்
தலைவர்

Thursday, January 29, 2009

போராளி முத்துக்குமரனின் மரண கோரிக்கை தமிழ் மக்களை நோக்கி

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...

அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...

வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?

ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...

பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.

ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.

இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்' என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...

உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.

தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...

உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...

அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.

அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,

உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.

புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)

இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.

இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.

காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.

1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.

3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.

8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்றும் அன்புடன்,

அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99

அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

Wednesday, January 28, 2009

ஈழத்திற்காக தன்னையே எரியூட்டிக் கொண்ட இளம் பத்திரிகையாளர்

முத்துக்குமார் என்ற இளம் பத்திரிகையாளர், இன்று காலை சென்னையில் உள்ள இந்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு தன்னை எரியூட்டிக் கொண்டார்.

ஈழச் சிக்கலில் இந்திய அரசின் நிலைப்பாட்டினை கண்டித்து முழக்கம் எழுப்பிய அவர்.. அதற்காக இந்திய அரசைக் கண்டித்து தான் தற்கொலை செய்வதாக முழக்கமிட்டுக் கொண்டே.. தன் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொண்டார்.
75 விழுக்காடு தீப்புண்கள் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு மிக ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Friday, January 23, 2009

சட்டக் கல்லூரி சாகும் வரை பட்டினிப் போராட்டம்

ஈழ மக்களின் துயரை நீக்கக் கோரி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் நேற்று முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி வாசலில் நடக்கும் இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் :

1. கெம்ப குமார் - தொடர்பு எண் : 92455-81684
2. திருமுருன்
3. விஜயகுமார்
4. மணிவேல்
5. பிரவீன்
6. சுரேஷ்
7. ராஜா
8. ராஜ்குமார்
9. முஜிபுர் ரகுமான்
10. முனிஷ் குமார்
11. நவீன்
12. பிரியன்
13. பிரபு
14. ஆறுமுக நயினார்

திரு. கெம்ப குமாரிடம் பேசிய போது, 'ஈழத்தில் துன்புறும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக உதவ வேண்டும். இந்திய அரசு சிங்கள அரசுக்கு செய்யும் உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. எத்தனை நாட்களானாலும் எங்கள் போராட்டத்தை நாங்கள் உறுதியாகத் தொடருவோம். எங்களை கைது செய்தாலும் சிறையிலும் எங்கள் உண்ணாவிரதம் தொடரும்' என்று உறுதியோடு கூறினார்.

Update 1:

நேற்று (23 ஜனவரி 2009) மாலை முதல் மேலும் 3 மாணவர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் பெயர் வருமாறு :
15. அன்பரசு தொடர்பு எண் : 98940-45451
16. சரவணன்
17. கே. சி. ராஜா

Update 2:-
நான்கு நாட்களாக பட்டினி போராட்டத்தில் இருக்கும் 17 மாணவர்களில் 5 பேர் இன்று(24 ஜனவரி 2009) இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

விழுப்புரம் மற்றும் நெய்வேலி பள்ளி மாணவர்கள் போராட்டம்!

விழுப்புரம் மற்றும் நெய்வேலி பள்ளி மாணவர்கள் போராட்டம்! ஒளி-ஒலி படம்.

Thursday, January 22, 2009





விழுப்புரத்தில் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்து, மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்

இலங்கையில் நாள்தோறும் அப்பாவிதமிழர்கள்மீது சிங்கள அரசு குண்டுமழை பொழிந்து கொன்று குவித்துவருகிறது தமிழக சட்டமன்றத்திலே அனைத்துகட்சிகளும் போரை நிறுத்தவலியுறுத்தி தீர்மானம் போட்டும் தமிழகத்திலே அனத்துகட்சிகளும் மனித சங்கிலி,உண்ணாவிரதம் ,கண்டனஆர்ப்பாட்டங்கள் ந்டத்தியும் திருமாவளவன்போன்றோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் இந்திய அரசின் பதில் திருப்தி அளிககாதநிலையில் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் வகுப்புகளை புறக்கணிப்பது என்று முடிவுசெய்து இன்று விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவிகள் சுமார் 2000ம் பேர் வகுப்புகளை புறக்கணித்தனர் மேலும் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவிகள்,சுமார் 700க்கும் மேற்பட்டவர்களும் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர்கள் சுமார் 600க்கும் மேற்ப்பட்டவர்கள் தங்களுடைய வகுப்புகளை இன்று புறக்கணித்தனர் நாளையும் இந்தபோராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்


விழுப்புரம் ஜோதிநரசிம்மன்



விருதாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இலங்கையிலே அப்பாவிதமிழர்கள் மீதான போரை நிறுத்த வலியுருத்தி வகுப்புகளை புறக்கணித்து பேரணி நடத்தினர்

Wednesday, January 21, 2009

த‌மிழக‌ம் முழுவது‌ம் மாணவ‌ர்க‌ள் வகு‌ப்பு புற‌க்க‌ணி‌ப்பு

சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்

அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்குத் துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்தக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு முழக்கங்கள் எழுப்பினர்.

செ‌ன்னை‌யி‌ல் லயோலா கல்லூரி, மா‌நில‌க் க‌ல்லூ‌ரி, ப‌ச்சைய‌ப்ப‌ன் க‌ல்லூ‌ரி, ந‌ந்தன‌ம் கலை‌ க‌ல்லூ‌ரி உ‌ள்பட ப‌ல்வேறு க‌ல்லூ‌ரிகளை சே‌ர்‌ந்த மாணவ‌ர்க‌ள் இ‌ன்று வகு‌ப்புகளை புற‌க்க‌ணி‌த்து ‌வி‌ட்டு அம‌ை‌தியான முறை‌யி‌ல் ம‌த்‌திய அரசு‌க்கு த‌ங்களது எ‌தி‌ர்‌ப்பை கா‌‌ட்டின‌ர்.

திருச்சியில் மாணவர் தலைவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் கலைக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் சிங்கள அரசின் கொடி எரிக்கப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு, உடுமலை, ஊட்டி உள்ளிட்ட பலப் பகுதிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் மாணவர்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.

கும்பகோணம், தஞ்சை, மன்னார்குடி, சிவகங்கை, திருவாரூர், மதுரை, தூ‌த்து‌‌க்குடி, ‌திருநெ‌ல்வே‌லி, ‌விழு‌ப்புர‌ம், கடலூ‌ர், த‌ர்மபு‌ரி, ‌கிரு‌‌ஷ்ண‌கி‌ரி, புதுவை உட்பட பலப் பகுதிகளில் மாணவர்களை வகுப்புகளைப் புறக்கணித்து பல்வேறு வடிவங்களில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

முன்னதாக, மாணவர்களின் இப்போராட்டத்திற்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு, உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் தங்களின் ஆதரவைத் தெரிவித்திருந்தன. அந்த அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் பெருந்திரளாக இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நாளையும் நாளை மறுநாள் வெள்ளியன்றும் மாணவர் போராட்டம் தொடருமென எதிர்ப்பார்க்கப் படுகிறது.


























கோவையில் மாணவர்கள் நடத்தியப் போராட்டதின் படங்கள்

Monday, January 19, 2009

ஈழத் தமிழரைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்

அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு பத்திரிகைச் செய்திஈழத் தமிழரைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்.

தமிழகமெங்கும் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் வருமாறு :

  1. தமிழகமெங்கும் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக சென்னைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் கே. வெங்கடாசலம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  2. சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்து கூட்டமைப்பின் சார்பில் வரும் ஜனவரி 21 முதல் தமிழகமெங்கும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. சாவின் விளிம்பில் நிற்கும் ஈழத் தமிழ் மக்களைக் காக்க நடக்கும் இப்போராட்டத்திற்கு அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும், மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் அனைத்து ஜனநாயக மாணவர் அமைப்புகளும் இந்தப் போராட்டத்திற்கு தங்கள் பேராதரவினைத் தரவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறோம்.

(ஒருங்கிணைப்பாளர்)
கே. வெங்கடாசலம் - 94443-18945

மேலும் தொடர்புக்கு :
பா. பாக்கியராஜ் (திருச்சி) - 98658-62861
செந்தில் (சென்னை) - 94445-04767
இனியன் (சென்னை) - 98845-27997
பன்னீர்செல்வம் (கோவை) - 98944-53095

Thursday, January 8, 2009

மன்மோகன் சிங்கிற்கு கருப்புக் கொடி 2000-க்கும் மேற்பட்டவர்கள் கைது

சென்னை சன 8: சிங்களப் பேரினவாத அரசுக்கு துணையாக ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் வழங்கி தமிழர்களின் இனப் படுகொலைக்கு ஆதரவாக இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக கருப்புக் கொடி காட்ட
முயன்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டிற்காக சென்னை வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அந்த வழியாக பயணிப்பதை ஒட்டி அவருக்கு அங்கு கருப்புக் கொடி காட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கோடு இன்று காலை 8 மணிக்கு சென்னை, சைதாப்பேட்டை அருகே பெண்கள், குழந்தைகள் உட்பட பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் கூடினர்.

மன்மோகன் சிங்கே திரும்பிப் போ!
இந்திய அரசே இலங்கைக்கு ஆயுத் தராதே!
சிங்களன் உனக்கு பங்காளியா தமிழன் உனக்கு பகையாளியா!
காங்கிரஸ் கைக்கூலி கருணாநிதியே ஒழிக!
தமழின விரோத காங்கிரசை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்!
விடுதலைப் புலிகளை ஆதரிப்போம்! பிரபாகரனை அதரிப்போம்!
தமிழீழத்தை அங்கீகரி!

என பல்வேறு முழக்கங்களை எழுச்சியுடன் எழுப்பினர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுவை,மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நெல்லை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தமிழின உணர்வாளர்கள் கொந்தளிப்போடு திரண்டிருந்தனர்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத்தின் ஆனூர் ஜெகதீசன், கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேச விடுதலைக் கட்சியின் தியாகு, அகில இந்திய சமதாக் கட்சி துணைத் தலைவர் குமரி நம்பி, பார்வர்டு பிளாக்கின் ஆனந்த முருகன், தமிழ்த் தேசப் மார்க்சியக் கட்சியின் இராசேந்திர சோழன், தமிழர் தன்னுரிமை இயக்கத்தின் பாவலர் இராமச்சந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் வைகறை, உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் மெல்கியோர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் கவிஞர் தமிழேந்தி, வாலாஜா வல்லவன், தலைநகர் தமிழ்ச்சங்கத்தின் உஞ்ஞை அரசன் மற்றும் தேனிசைச் செல்லப்பா, சந்திரேசன், பொன்னிறைவன், அற்புதம் அம்மாள் உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர்.

மன்மோகன் சிங் அவ்விடத்தை கடக்கும் நேரம் நெருங்கியவுடன் காவல்துறையினர் கூடியிருந்த அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 22 பேருந்துகளில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள 8 திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

Friday, January 2, 2009

தமிழர்களை மதியாத மன்மோகன் சிங்கிற்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

தமிழர்களை மதியாத மன்மோகன் சிங்கிற்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தமிழர்களுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவி சாய்க்கவில்லை.

இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை.

இந்த நிலைமையில் ஜனவரி 7-ஆம் தேதி சென்னைக்கு வர இருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் இப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்.

பழ. நெடுமாறன்

Thursday, January 1, 2009

திசை திருப்புபவர்களின் வலையில் விழாதீர் - பழ. நெடுமாறன் வேண்டுகோள்


இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு இராணுவ ரீதியான உதவிகள் அளிக்கக் கூடாது ஆகிய இரு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகத்தில் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களைச் சீர்குலைக்கும் வகையிலும் பிரச்னையைத் திசை திருப்பவும் தமிழகக் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர் செயல்பட்டு வருகின்றனர். தமிழகமே ஒன்றுபட்டு நிற்கும்போது இவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சிங்கள அரசுக்கு ஆதரவான போக்கில் நடந்து கொள்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஈழத் தமிழர்களின் துயரைத் துடைப்பதற்காக மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கக் கூடிய பல தலைவர்களைக் கைது செய்ய வேண்டுமென இவர்கள் கூக்குரல் இடுகின்றனர்.

இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை பறிக்கும் வகையில் செயல்படும் இவர்களின் அநீதியான கோரிக்கைக்கு தமிழக அரசு பணிந்து பல தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அப்பட்டமான ஜனநாயக உரிமைகள் மீறலாகும்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திரண்டு வரும் உணர்வை மேலும் மேலும் பெருக்கி அதன் மூலம் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நிர்ப்பந்தங்களை உருவாக்கி சரியான வழியில் செயல்பட வைப்பதே நமது முக்கிய நோக்கம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட்டாக வேண்டும். பிரச்னையை திசை திருப்பி நமக்கு ஆத்திரமூட்டி குழப்புவதற்கு முயற்சி செய்பவர்களின் வலையில் நாம் விழுந்து விடக் கூடாது. தமிழர்களை ஒன்று திரட்டும் பணியில் முழு மூச்சுடன் செயல்படுமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.