Sunday, April 12, 2009

தேர்தல் தோல்வி பயத்தில் போர் நிறுத்தம் பற்றி பேசுகிறார் சிதம்பரம் - பழ. நெடுமாறன் அறிக்கை

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்யும். இல்லாவிட்டால் செய்யாது என இராஜபக்சேயின் இறுமாப்புக் குரலில் சில வாரங்களுக்கு முன்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்துவிடும் என்ற அச்சத்தில் இப்போது வேறு குரலில் பேசுகிறார்.

இலங்கையில் இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென இந்திய அரசு இரு நாட்களுக்கு முன்பாகவே வேண்டுகோள் விடுத்திருப்பதாக சிவகங்கையில் நேற்று சிதம்பரம் கூறியுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சரோ பிரதமரோ எதுவும் கூறாமல் மவுனம் சாதிக்கும் நிலையில் ப. சிதம்பரம் திடீரென இவ்வாறு கூறுவதன் பின்னணி என்ன?

போர் நிறுத்தத்தில் இந்திய அரசுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் இலங்கைக்கு அளிக்கும் ஆயுத உதவி, நிதி உதவி ஆகியவற்றை உடனடியாக நிறுத்துவதாக அறிவிக்க வேண்டும். ஆனால் இரு நாட்களுக்கு முன்பாக இந்திய அரசு 5,800 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. அந்த பணத்தைக் கொண்டு சிங்கள அரசு ஆயுதங்களை வாங்கி தமிழர்களை கொன்று குவிக்கும் என்பதில் அய்யமில்லை. இந்த நிதி உதவியை நிறுத்தி வைக்க இந்திய அரசு தயாரா?

போர் நிறுத்தத்தில் இந்திய அரசுக்கு நம்பிக்கை இருந்தால் இலங்கை கடலில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய போர்க் கப்பல்களைத் திரும்பப் பெற வேண்டும். இவற்றையெல்லாம் இந்திய அரசு செய்தால் ஒழிய இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாது.

இந்திய அரசின் இந்த வேண்டுகோளுக்குப் பிறகும் இரு நாட்கள் மட்டுமே தாக்குதலை நிறுத்தப் போவதாக இராஜபக்சே அரசு அறிவிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இந்திய அரசு நடத்தும் நாடகத்தை ஒரு போதும் யாரும் நம்பப் போவதில்லை என்பதை சிதம்பரம் உணர வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவிற்கு இந்திய அரசு முக்கியமான பொறுப்பாகும். இந்த துரோகத்தின் விளைவை நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு அணி சந்திக்கும்.

0 comments: