Thursday, April 3, 2008

பேரணிக்கு "மழையின் காரணமாகத் தடை!"

பேரணிக்கு "மழையின் காரணமாகத் தடை!" கலைஞரின் அரசு கண்டுபிடித்த புதிய காரணம்!

22-03-08 அன்று மாலை 4 மணிக்கு சென்னை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்திய அரசுக்கு எதிராக நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அரசு தடைவிதித்தது அனைவரும் அறிந்ததாகும்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள்-மாநாடுகளுக்கு தி.மு.க. அரசு தடைவிதிக்கும் போது எல்லாம் சொல்லாத புதிய காரணத்தை இப்போது கண்டுபிடித்துச் சொல்லியுள்ளது. காவல்துறை ஆணையாளர் அளித்துள்ள தடை ஆணையில் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது.

"கடந்த இரு நாட்களாக தொடர்ந்து அதிக அளவு மழை பெய்து வருவதாலும் மேலும் வலுவான மழைபெய்ய சாத்தியக்கூறுகள் உள்ளதாலும் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி அதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்துப் பிரச்னையும் மற்றும் அதன் தொடர்பால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க வேண்டியதாலும், மேலும் மனுதாரர் கோரியுள்ள இடம் அனுமதிக்கப்பட்ட இடமாக இருப்பினும் மேற்படி மழையின் காரணமா ஏற்பட்ட பிரச்சினையில் 22-03-08 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க இயலாத சூழ்நிலை உள்ளது மேலும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத் சமூக விரோதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தின் போது மறைமுகமாக ஊடுருவி சட்டம் ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தி அதன் மூலம் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் உள்ளது எனவே மேற்கூறிய காரணங்களால் மனுதாரர் 22-03-08 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ள மனுவானது நிராகரிக்கப்படுகிறது."

மழையை காரணமாக காட்டி ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதிக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதன்முறையாகும். மழைபெய்தால் ஆர்ப்பாட்டம் நடத்துவோர் தாமாகவே முன்வந்து அதை ஒத்திவைப்பதுதான் வழக்கம். ஆனால் கருணையே வடிவமான கலைஞரின் அரசு தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் மழையில் நனைந்துவிடக்கூடது என அதிகமான அக்கரையை எடுத்துக்கொண்டு அவர்களின் நலன்காக்க தடைவிதித்துள்ளது.

மழைக் காலத்தில் மழை காரணமா தடை, இனி வெயில் காலத்தில் வெயிலின் காரணமாகத் தடை, பனிக்காலத்தில் பனிகாரமாகத் தடை, இனி வெயிலோ, மழையோ, பனியோ இல்லாத காலத்தில்தான் நாம் நிகழ்ச்சிகள் நடத்தவேண்டியிருக்கும். அரசியல் கட்சிகள் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தும்போது அதற்குரிய பாதுகாப்பு கொடுப்பது காவல்துறையினரின் நீங்காத கடமையாகும். ஆனால் சென்னை மாநகர காவல்துறையோ சமூக விரோதிகளின் ஊடுருவலை தன்னால் தடுக்க முடியாது என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு அதன் காரணமாக ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதித்துள்ளது.

நல்ல அரசு! நல்ல காவல் துறை!!

0 comments: