Thursday, January 8, 2009

மன்மோகன் சிங்கிற்கு கருப்புக் கொடி 2000-க்கும் மேற்பட்டவர்கள் கைது

சென்னை சன 8: சிங்களப் பேரினவாத அரசுக்கு துணையாக ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் வழங்கி தமிழர்களின் இனப் படுகொலைக்கு ஆதரவாக இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக கருப்புக் கொடி காட்ட
முயன்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் இன்று சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டிற்காக சென்னை வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அந்த வழியாக பயணிப்பதை ஒட்டி அவருக்கு அங்கு கருப்புக் கொடி காட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கோடு இன்று காலை 8 மணிக்கு சென்னை, சைதாப்பேட்டை அருகே பெண்கள், குழந்தைகள் உட்பட பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் கூடினர்.

மன்மோகன் சிங்கே திரும்பிப் போ!
இந்திய அரசே இலங்கைக்கு ஆயுத் தராதே!
சிங்களன் உனக்கு பங்காளியா தமிழன் உனக்கு பகையாளியா!
காங்கிரஸ் கைக்கூலி கருணாநிதியே ஒழிக!
தமழின விரோத காங்கிரசை தமிழ்நாட்டை விட்டு விரட்டுவோம்!
விடுதலைப் புலிகளை ஆதரிப்போம்! பிரபாகரனை அதரிப்போம்!
தமிழீழத்தை அங்கீகரி!

என பல்வேறு முழக்கங்களை எழுச்சியுடன் எழுப்பினர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுவை,மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, நெல்லை உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தமிழின உணர்வாளர்கள் கொந்தளிப்போடு திரண்டிருந்தனர்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத்தின் ஆனூர் ஜெகதீசன், கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், தமிழ்த் தேச விடுதலைக் கட்சியின் தியாகு, அகில இந்திய சமதாக் கட்சி துணைத் தலைவர் குமரி நம்பி, பார்வர்டு பிளாக்கின் ஆனந்த முருகன், தமிழ்த் தேசப் மார்க்சியக் கட்சியின் இராசேந்திர சோழன், தமிழர் தன்னுரிமை இயக்கத்தின் பாவலர் இராமச்சந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் வைகறை, உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தின் மெல்கியோர், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் கவிஞர் தமிழேந்தி, வாலாஜா வல்லவன், தலைநகர் தமிழ்ச்சங்கத்தின் உஞ்ஞை அரசன் மற்றும் தேனிசைச் செல்லப்பா, சந்திரேசன், பொன்னிறைவன், அற்புதம் அம்மாள் உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் கலந்து கொண்டனர்.

மன்மோகன் சிங் அவ்விடத்தை கடக்கும் நேரம் நெருங்கியவுடன் காவல்துறையினர் கூடியிருந்த அனைவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 22 பேருந்துகளில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள 8 திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

Friday, January 2, 2009

தமிழர்களை மதியாத மன்மோகன் சிங்கிற்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

தமிழர்களை மதியாத மன்மோகன் சிங்கிற்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தமிழர்களுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவி சாய்க்கவில்லை.

இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை.

இந்த நிலைமையில் ஜனவரி 7-ஆம் தேதி சென்னைக்கு வர இருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் இப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்.

பழ. நெடுமாறன்

Thursday, January 1, 2009

திசை திருப்புபவர்களின் வலையில் விழாதீர் - பழ. நெடுமாறன் வேண்டுகோள்


இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு இராணுவ ரீதியான உதவிகள் அளிக்கக் கூடாது ஆகிய இரு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழகத்தில் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களைச் சீர்குலைக்கும் வகையிலும் பிரச்னையைத் திசை திருப்பவும் தமிழகக் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர் செயல்பட்டு வருகின்றனர். தமிழகமே ஒன்றுபட்டு நிற்கும்போது இவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சிங்கள அரசுக்கு ஆதரவான போக்கில் நடந்து கொள்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஈழத் தமிழர்களின் துயரைத் துடைப்பதற்காக மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கக் கூடிய பல தலைவர்களைக் கைது செய்ய வேண்டுமென இவர்கள் கூக்குரல் இடுகின்றனர்.

இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை பறிக்கும் வகையில் செயல்படும் இவர்களின் அநீதியான கோரிக்கைக்கு தமிழக அரசு பணிந்து பல தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அப்பட்டமான ஜனநாயக உரிமைகள் மீறலாகும்.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் திரண்டு வரும் உணர்வை மேலும் மேலும் பெருக்கி அதன் மூலம் இந்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் நிர்ப்பந்தங்களை உருவாக்கி சரியான வழியில் செயல்பட வைப்பதே நமது முக்கிய நோக்கம் என்பதை உணர்ந்து நாம் செயல்பட்டாக வேண்டும். பிரச்னையை திசை திருப்பி நமக்கு ஆத்திரமூட்டி குழப்புவதற்கு முயற்சி செய்பவர்களின் வலையில் நாம் விழுந்து விடக் கூடாது. தமிழர்களை ஒன்று திரட்டும் பணியில் முழு மூச்சுடன் செயல்படுமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

Monday, December 8, 2008

தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்!

இலங்கையில் தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகளை நிறுத்தக் கோரி தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்!

  • OMR சாலையில் டபுள் பெட்ரூம் பிளாட் வாங்குவது பற்றி திட்டமிடுகிறோம் நாம். மேலிருந்து விழும் குண்டுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக குடிசைகளிலிருந்து வெளியேறி காடுகளில் தஞ்சம் புகுகிறார்கள் அவர்கள்.
  • இரவு கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் நாம். பகலில் கடிக்க வரும் பாம்புகளிலிருந்து தப்பிக்கும் வழியறியாது அடர்ந்த வனங்களில் தினமும் இறக்கிறார்கள் அவர்கள்.
  • அடுத்த வேளை உணவு, KFC Chicken- அல்லது Pizza Hut- என்று நண்பர்களுடன் பேசுகிறோம் நாம். நாளைக்காவது ஒரு வேளை உணவு கிடைக்குமா என்று சொந்த நாட்டில் அகதிகளாகத் தவிக்கிறார்கள் அவர்கள்.
  • பொங்கலுக்கு ஊருக்குப் போக இரண்டு மாதங்களுக்கு முன்பே online reservation செய்கிறோம் நாம். எப்போது தாய்நாடு போவோம் என்பது குறித்து யாதொரு நம்பிக்கையுமின்றி அகதிகளாக உலகெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் அவர்கள்.
  • சத்யம் சினிமா, MGM ரிசார்ட், சனிக்கிழமை இரவுக் கொண்டாட்டங்கள் என சுகமாய் வாழ்கிறோம் நாம். ஒவ்வொரு நொடியைக் கழிப்பதும் போராட்டமாய் வாழ்கிறார்கள் அவர்கள்.
  • நாமும் தமிழர்கள், அவர்களும் தமிழர்கள் எனில், அவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் நாம்?
செய்ய வேண்டியது ஆயிரம் இருப்பினும், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான நமது எதிர்ப்பை, ஈழத்தமிழர்களுக்கான நமது ஆதரவைத் தெரிவிக்க ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்போம், வாருங்கள் நண்பர்களே!

நாள்: 13-டிசம்பர்-2008, சனிக்கிழமை
நேரம்: காலை 09:00 - மாலை 06:00
இடம்: Auto garage (பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருந்த இடம்),
Near first signal on the way Koyembedu bus stand to anna nagar, Koyembedu

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்.

Sunday, December 7, 2008

எங்களுக்காக வாழ்க! - பேரா. அறிவரசன்

உலகம் முழுவதும் வாழ்கின்ற
ஒன்பது கோடித் தமிழர்க்கு
நிலமொன் றில்லை; உரிமையுடன்
நிமிர்ந்து வாழவோர் நாடில்லை
பலரும் தமிழரை அடிமையராய்ப்
பார்க்கும் அவலம் தீர்ப்பதற்கு
வலுவுடன் எழுந்து போர் உடற்றும்
மாண்புசேர் தலைவ! வாழியவே!















ஆற்றல் மறவ! அருந்தலைவ!
அன்னைத் தமிழை அரவணைத்துப்
போற்றிக் காத்து வளர்க்கின்ற
புகழ்ப் பிர பாகரப் பெரியோய்! உன்
ஏற்றம் அறிவோம்; பகையிருளை
எற்றித் தள்ளித் தமிழ்ஈழ
நாட்டைத் தருவாய் விராவாக
நல்வோய்! பல்லாண்டு வாழியவே!

வீரம் விளையும் ஈழத்தில்
வேற்றுச் சிங்களர் தமையகற்றிச்
சீரும் சிறப்பும் தமிழர்க்குச்
சேர்த்திட விரும்பி ஆர்த்தெழுந்து
போரினை நடாத்தும் புலிப்படையின்
புகழ்மேம் பட்ட தமிழ்த்தலைவ!
பாரிய வளமுடன் நலம்பெற்றுப்
பல்லாண்டு வாழிய! வாழியவே!

வெல்லுந் திறத்தால் சிறந்தவனே!
வேலுப் பிள்ளை பார்வதித்தாய்
செல்வனாய்ப் பிறந்து தமிழீழத்
தேசியத் தலைவராய் உயர்ந்தவனே!
நல்ல தமிழினம் உரிமையுள
நாட்டை அமைத்திட உழைப்பவனே!
பல்வகைச் சிறப்பும் நீபெற்றுப்
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

கார்த்திகைத் திங்களில் நீ பிறந்தாய்
காரிருள் நீக்கிட நீ வளர்ந்தாய்
போர்த்திறத் தால்தமிழ் இனம்காக்கும்
பொருவிலாத் தலைவனாய் வடிவெடுத்தாய்
தீத்தகைச் சிங்களர் தமைவென்று
செந்தமிழ் ஈழத்தை நீசமைப்பாய்
ஏத்துகி றோம்உனை எம்தலைவ!
இனும்நூ றாண்டுகள் வாழியவே!

தம்பியாய் இருந்தாய்; இன்றெமக்குத்
தலைவராய் உயர்ந்தாய்; உன்திறத்தால்
எந்தமிழ் ஈழ விடுதலையை
எமக்குநீ தருவாய் என்றுனையே
நம்பியே நிற்கிறோம்; ஐ. நா - வில்
நாளை தமிழ்க்கொடி நாட்டிடுவோம்
பைந்தமிழ்த் தலைவ! நனிசிறந்து
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

பிரபா கரனே! தமிழர்க்குப்
பெருமை சேர்க்க வந்தவனே!
அறிவால் உயர்ந்தோய்! பகையழிக்கும்
ஆற்றலில் சிறந்தோய்! விடுதலையே
குறியாய்க் கொண்டு களங்களிலே
கொற்றம் விளைக்கும் கொற்றவனே!
நிறைவாய் நலங்கள் பலபெற்று
நெடியபல் லாண்டுகள் வாழியவே!

ஞாலம் முழுதும் வாழ்கின்ற
நந்தமி ழர்க்கொரு நற்றுணையே!
ஆளும் உரிமை தமிழர்க்கே
ஆக்கிட உழக்கும் ஆற்றலனே!
சூழும் பகையிருள் தனைவிரட்டும்
சுடர்மிகு பிரபா கரனே! உன்
தோளின் வலிமையால் எமைக்காக்கத்
தூயவ! பல்லாண்டு வாழியவே!

ஐம்பத் தைந்தாம் அகவையிலே
அடிவைத் தெழுந்து நிற்கின்ற
எங்கள் தலைவ! இருபதுசேர்
இளைஞன் போல நெஞ்சுரத்தால்
பொங்கித் தளும்பும் உன்வீரம்
போற்றிப் பலநூ றாண்டுகள்நீ
எங்களுக் காக வாழ்கவென

Saturday, November 15, 2008

இது மென்பொருள் பொறியாளர்களின் தருணம்!

Thursday, October 16, 2008

ஜெயலலிதாவுக்குக் கண்டனம் பழ. நெடுமாறன் அறிக்கை

இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்த வேண்டுமென்று கேட்பதன் மூலம் புலிகள் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் முதல்வர் கருணாநிதி ஈடுபட்டிருப்பதாக அ.தி.முக. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஈழத் தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து சிங்கள இராணுவம் நடத்தி வரும் கொடிய போரை உடனடியாக நிறுத்தி அப்பாவி மக்களைக் காப்பாற்ற வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் இணைந்து கூட்டாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அதைத் திசைத் திருப்பும் வகையில் முதல்வரை மட்டுமே பிரித்துக் குற்றம் சாட்டுவது என்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

தங்கள் மக்களையும் தங்களையும் காப்பாற்றிக் கொள்ள விடுதலைப் புலிகளுக்கு வலிமை உண்டு என்பதை ஜெயலலிதா உணர வேண்டும். உலக நாடுகள் பலவும் சிங்கள அரசின் போர் வெறியைக் கண்டித்துள்ள வேளையில், கொஞ்சமும் மனித நேய உணர்வின்றி சிங்கள அரசுக்கு ஆதரவாகப் பேசுவதை ஜெயலலிதா நிறுத்திக் கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன் இருந்தே தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட இனவெறிப் படுகொலைகளைச் சிங்கள வெறியர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களிடமிருந்து தங்கள் மக்களைக் காப்பாற்றுவதக்றாகத்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள் என்ற வரலாற்று உண்மையைக் கூட உணராமல் ஜெயலலிதா பேசுவது வெட்கக் கேடானது.

இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிடும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என ஜெயலலிதா வக்காலத்து வாங்குகிறார். பாகிஸ்தானில் உள்விவகாரத்தில் இந்திய அரசு இராணுவ ரீதியாகத் தலையிட்டு வங்க தேசம் சுதந்திர நாடாக உதவி புரிந்தது என்பதை ஜெயலலிதா உணராமல் போனது ஏன்?
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்னையில் தலையிட்டு சிங்கள இராணுவத்திற்கு ஆயுதங்களை அள்ளித் தந்தும் உளவுத் தகவல்களை அளித்தும் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்க உதவி புரியும் இந்திய அரசுக்கு அந்தப் போரை நிறுத்தும்படி கூற அதிகாரம் இல்லை என்று கூறுவது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

தமிழர்களுக்கு எதிரான இன வெறி அழிப்பை நடத்திக் கொண்டிருக்கும் இராபக்சேயின் ஊதுகுழலாக ஜெயலலிதா ஒலிக்கிறார். இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர் அண்டை நாட்டில் நடைபெறும் தமிழர் படுகொலைகளைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமல் தமிழ்ப் பகைவர்களின் கை பொம்மையாக மாறி செயல்படுவதை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.